மே-18 ஐ இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரித்தது கனேடிய பாராளுமன்றம்

கனடா பாராளுமன்றத்தில் மே 18 ஆம் நாளை இனப்படுகொலை தினமாக அங்கீகரிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி மே 18ஆம் நாளை இனப்படுகொலை தினமாக அங்கீகரிக்கும் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

பாராளுமன்றில் குறித்த பிரேரணை முன்நகர்த்தப்பட்டிருந்த நிலையில், தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரிப்பதுடன், ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஏற்றுக்கொள்வதாகவும் சபை தெரிவித்துள்ளது.

இந்தப் பிரேரணைக்கு லிபரல், கன்சர்வேட்டி உட்பட பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் 338உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத்தீவில் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் தான் வன்முறையை வளர்த்தவர்கள்: சபா குகதாஸ்

இலங்கைத்தீவில் 1948 ஆண்டின் பின்னர் வன்முறையை வளர்த்தவர்கள் ஆட்சிக்குத் தொடர்ந்து வந்த சிங்கள தலைவர்களும் அவர்கள் சார்ந்த அரசாங்கமும் என்ற உண்மையைச் சிங்கள பெரும்பாண்மை மக்கள் உணரும் வரை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் தனிச் சிங்களச் சட்டத்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க அரசாங்கம் கொண்டு வந்த போது பூர்வீக தமிழர்களின் தமிழ்மொழி அரசியலமைப்பு ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டதனால் அன்றைய தமிழ்த் தலைவர்கள் காலமுகத்திடலில் சாத்வீக வழி சத்தியாக்கிரக போராட்டத்தை 1956 யூன் 5 ஆம் திகதி நடத்தினர்.

இதன்போது இன்று கோட்டா கோ கோம் போராட்டத் தரப்பின் மீது எப்படி ஒரு வன்முறை ஆட்சியாளர்களினால் கட்டவிழ்க்கப்பட்டதோ இதைவிட மோசமாக அன்று தமிழ்த் தலைவர்கள் மீது இதே காலிமுகத்திடலில் பொலிஸாரினாலும் குண்டர்களினாலும் கோரமான வன்முறை மேற்கொள்ளப்பட்டு ஜனநாயக போராட்டம் வன்முறை மூலம் அடக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சி 1977 வரை மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் தமிழர்களின் அகிம்சைப் போராட்டங்களை வன்முறை கொண்டு அடக்கியதன் விழைவே ஆயுதப் போராட்டமாக மாறியது. உண்மையாகத் தமிழர்கள் வன்முறை மீது காதல் கொண்டு ஆயுதம் தூக்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்களே தமிழர்களை ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்தார்கள்.

அதன் விளைவை இன்று ஒட்டுமொத்த நாடும் அனுபவிக்கின்றது. அத்தகைய அவலநிலைக்கு அரசியல், பொருளாதாரத்தின் கட்டமைப்பு சீரழிந்துள்ளது. 1956 தமிழர்களுக்குச் செய்த தவறை மீண்டும் 2022 ஆட்சியாளர்கள் அதே காலிமுகத்திடலில் ஜனநாயக வழியில் போராடிய தாம் சார்ந்த சிங்கள சகோதரர்களுக்கும் வன்முறையைப் பிரயோகித்துள்ளார்கள்.

நாகரிகம் வளர்ந்த இந்த நூற்றாண்டில் மிகவும் பிற்போக்காக ஆட்சி அதிகாரங்களைத் தக்கவைக்க வாக்களித்த மக்களையே வன்முறை மூலம் அடக்கும் கிட்லர் ஆட்சியாளர்களை நினைக்கத் தலைகுனிவாகவும் வெட்கமாகவும் உள்ளது.

இலங்கைத் தீவில் வாழும் பல்லின மக்களையும் அவர்களது நியாயமான அபிலாசைகளையும் ஏற்றுக் கொள்ளும் அரசியலமைப்பை உருவாக்கி ஜனநாயக பண்புகளுக்கு முன்னுரிமை வழங்கும் ஆட்சியாளர்கள் வரும் வரை இலங்கைத் தீவில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினமானதாகும். இதனைச் சிங்கள பெரும்பான்மை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் கடன் தொகையை அடுத்த வாரம் அறிவிப்பதாக பிரதமர் தெரிவிப்பு

இலங்கை எவ்வளவு கடனை செலுத்த வேண்டும் என்பது தொடர்பில் தகவல்களை சேகரித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒருவருக்கு ஒருவர் விமர்சனங்களை முன்வைக்காமல், நாட்டைக் கட்டியெழுப்ப முன்வருமாறு பிரதமர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

இன்று பாராளுமன்றத்தில் நாட்டின் கடன் தொகை தொடர்பில் பிரதமரிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

இலங்கை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என அவர் வினவினார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அது தொடர்பிலான முழுமையான அறிக்கையை அடுத்த வாரமளவில் தயாரிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சில தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் சில தகவல்கள் பொய்யானவை எனவும் குறிப்பிட்ட பிரதமர், இதன் காரணமாக தன்னால் சரியான தொகையை உடனடியாகக் கூற முடியவில்லை என தெரிவித்தார்.

கடன் தொகை 10 பில்லியனாக இருந்தாலும் அதனை வழங்குவதற்கு ஒரு மில்லியன் கூட எம்மிடம் இல்லை என பிரதமர் கூறினார்.

எனவே தான் மூன்றாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விவாதம் ஒன்றை நடத்துமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்த அவர், விரைவில் அத்தகவல்களை எதிர்க்கட்சிக்கு வழங்கவுள்ளதாகவும் கூறினார்.

கடன்களை தற்போதைக்கு மீள செலுத்துவதில்லை என கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி அரசாங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பாராளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு –  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று மாலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோராதலிங்கம் , தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம கோவிந்தன் கருணாகரம்(ஜனா) ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

 

Posted in Uncategorized

‘மே 18 தமிழனப் படுகொலை நாள்’- வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அறிக்கை

”மே மாதம், சிறிலங்காவில் முரண்பாடான உணர்வுகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது. வடக்கு -கிழக்கு தமிழினப் படுகொலைகளில் இறந்தவர்களை நினைவு கூறுகையில், தெற்கு போர் வெற்றியைக் கொண்டாடுகின்றது. கௌதம புத்தர் கூறியது போன்று மூன்று விடையங்களை மூடி மறைக்க முடியாது.

“சூரியன், சந்திரன், உண்மை”. சிறிலங்காவின் பொருளாதார – அரசியல் நெருக்கீடு தெளிவான பாடத்தைப் புகட்டி இருக்கின்றது, வன்முறை எந்தவிதத்திலும் பிரச்சினைக்குத் தீர்வாகாது, பிரச்சினைக்கான மூலகாரணியைக்கண்டு அதை நிவர்த்தி செய்வது இன்றியமையாதது. வடக்கு- கிழக்கு தமிழர்கள் மே 18ஐ தமிழினப்படுகொலை நாளாக நினைவு கூறுகின்றனர்” என்று வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம்! முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட தமிழின படுகொலையின் 13 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது

வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இறுதி யுத்தத்தில் தனது ஒரு கையினை இழந்து பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து ஏனைய உறவுகளும் தமது உறவுகளுக்கான சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

இதேவேளை முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டுள்ளதோடு கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில் மக்கள் பாரிய உணவு நெருக்கடிக்கு முகம் கொடுத்த வேளையிலே அந்த மக்கள் உணவுத் தேவைக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் அவர்களது பசி போக்கியது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பல்வேறு தரப்பினராலும் வழங்கப்பட்டது

Posted in Uncategorized

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்: உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதன்படி 30 வருடங்களின் பின்னர் பேரறிவாளனுக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,
சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமத்தப்படுதியது தவறு என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கில் பேரறிவாளன், தமிழக அரசு, மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தது. பேரறிவாளன் விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கொழும்பு காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.கடந்த காலங்களில் வடக்குஇ கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இலங்கையின் தலைநகர் கொழும்பில்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளதுடன்இ தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர். அத்துடன், சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூறும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

Posted in Uncategorized

புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டாலும் ஜனாதிபதி வீட்டுக்கு செல்லாத வரை தொடர்ந்து இந்த குழப்பம் இருக்கும் -ரெலோ தலைவர் செல்வம் எம்பி

புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டாலும் ஜனாதிபதி வீட்டுக்கு செல்லாத வரை தொடர்ந்து இந்த குழப்பம் இருக்கும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

புதிதாக பிரதமர் பதவியேற்றது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இந்த விடயத்தில் மக்கள் எதிர்ப்பு இருக்கிறதற்கு காரணம் கோட்டா கோ கோம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இதற்குள்ளே இருந்து கொண்டு தன்னுடைய பரிவாரங்களை தெரிவு செய்திருக்கின்ற ஒரு சூழலை மக்கள் எதிர்க்கிறார்கள்.

அந்தவகையிலே புதிய பிரதமராக தெரிவு செய்து அடுத்த அமைச்சரவை அவர்களுடைய சகாக்களாக இருக்கின்ற சூழல் ஏற்படும். அதனால் மக்கள் எதிர்க்கின்ற வாய்ப்பு இருக்கிறது.

ஜனாதிபதி அவர் கூறியது போல 19 ஆவது திருத்த சட்டத்தை பாராளுமன்றிற்கு அதிகாரங்களை கொடுக்கின்ற வகையிலே அதனை செய்து பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு அவர் வீட்டுக்கு செல்ல வேண்டும். அப்படி செல்கின்ற போது தான் மக்கள் ஜனநாயக முறையான பாராளுமன்றத்திற்கு ஆதரவை தருகின்ற வாய்ப்பு ஏற்படும்.

ஆகவே ஜனாதிபதி வீட்டுக்கு செல்லாத வரைக்கும் தொடர்ந்து இந்த குழப்பம் இருக்க தான் செய்யும். அவர் 19 ஆவது திருத்த சட்டத்தை அல்லது 21 என்ற அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை தந்து அந்த பதவியிலிருந்து விலகி செல்லுகின்ற சூழல் உருவாகும் மட்டும் இந்த பிரச்சினை தொடர்ச்சியாக இருக்கும் என்று தான் கூற முடியும்.

ஏனென்றால் மக்கள் கோருவது மகிந்த ராஜபக்ஷ பரிவாரங்கள் இருக்க கூடாதென. அந்த சூழலில் தான் மக்கள் பார்க்கின்றார்கள். அந்தவகையில் ஜனாதிபதி இருக்கும் வரைக்கும் இந்த எதிர்ப்பு தொடர்ச்சியாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் விளம்பர பலகையினை வலி கிழக்கு தவிசாளர் அகற்றிய வழக்கு விசாரணைக்கு

உள்ளுராட்சி மன்றமான பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியில் மத்திய அரசாங்கத்தின் நிறுவனமான வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அனுமதியின்றி காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரப் பலகையினை அகற்றியமை தொடர்பில் ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை புதன்கிழமை (18) மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மத்திய அரசாங்கத்தினால் ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அச்செழு அம்மன் வீதியைப் புனரமைப்பதற்கான நடவடிக்கையினை வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டிருந்தது. இந் நிலையில் மாவட்ட அவிருத்திக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தரப்பினரால் சம்பிரதாய பூர்வமாக குறித்த வீதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வீதியில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களுடனான பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டது.

அவ் விளம்பரப் பலகை குறித்த பிரதேசத்திற்குப் பொறுப்பான உள்ளுராட்சி மன்றமான வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் அனுமதியின்றி மத்திய அரசாங்கத்தின் தாபனமான வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உடன் அகற்றுமாறு தவிசாளர் பணித்திருந்தார். உடனடியாக அகற்றப்படாத நிலையில் குறித்த வீதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விளம்பரப்பலகையினை தவிசாளர் அகற்றியிருந்தார்.

இந் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான விளம்பரப் பலகையினைக் காணவில்லை எனத் தெரிவித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டினைத் தொடர்ந்து மத்திய அரசாங்கத்தின் உயர் அரசியல் அழுத்தம் காரணமாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷை அச்சுவேலி பொலிஸார் கைது செய்வதற்கான நடவடிக்கையினை எடுத்தனர். அவர் அரசியல் ரீதியிலான பழிவாங்கலாக தன்னைக் கைது செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்து சிரேஷ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன் ஊடாக நீதிமன்ற முன் பிணைக்கு விண்ணப்பம் செய்து கைதில் இருந்து தவிசாளர் தன்னைப் பாதுகாத்துக்கொண்டார்.

கடந்த வழக்குத் தவணையின் போது போது தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதேச சபையின் உரிய அனுமதிகளைப் பெற்றுச் செயற்படுவதாகவும் தவிசாளர் சார்பாக முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் எடுத்துரைத்தனர். இந் நிலையில் வழக்கினை தொடர்ந்து நடத்துவது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிலைப்பாட்டை மன்றுக்கு தெரியப்படுத்துமாறு மன்றில் தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில் நாளை புதன்கிழமை (18) திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இவ் வழக்கில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையிலான சட்டத்தணிகள் குழாம் முன்னிலையாகின்றமை குறிப்பிடத்தக்கது