இலங்கையின் துறைமுக நகரம் (Port City) தோற்றுவித்திருக்கும் பிரச்சனைகள், நாடு தாக்குப்பிடிக்குமா? ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உத்தியோக பூர்வ பேச்சாளர் குருசுவாமி- சுரேந்திரன் கேள்வி எழுப்புகிறார். வீரகேசரியில் அவருடனான நேர்காணல்(Part-1) கீழே தரப்படுகிறது.  எஸ். எஸ்.தவபாலன் தாமரைக்கேணி நிருபர்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உத்தியோக பூர்வ பேச்சாளர் சுரேந்திரன் பொதுவாக கூறுகையில்.

இலங்கை 65 ஆயிரம் ச.கிலோ மீற்றர் பரப்பனவையும், 21.8 மில்லியன் சனத்தொகையையும் கொண்ட ஒரு சிறிய நாடு. இதனுடைய தொழிலற்றோர் விகிதம் 4.18% ஆக இருக்கிறது. இதனிடையே பொருளாதார வளர்ச்சி 2.2% ஆக இருக்கிறது. இதுஒரு புறமிருக்க எமது நாட்டைப் பொறுத்தவரை ஆடைத்தொழிற்சாலை அபிவிருத்திக்குப் பிற்பாடு ஒரு பொருளாதார அபிவிருத்திக்கான செயற்பாட்டை ஆண்ட அரசுகளோ அல்லது தற்போது ஆளும் அரசோ செய்யவில்லை. வழக்கமாக ஆளும் அரசோ அல்லது அதன் அமைச்சரவை அந்தஸ்த்திலுள்ள அமைச்சர்களோ தேசிய பிரச்சனைகளை முன்வைத்து சில அபிவிருத்தித் திட்டங்களை தேசிய ரீதியில் நிறைவேற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். தேசிய ரீதியில் செற்பட்ட சில திட்டங்களை உதாரணத்திற்கு எடுக்கலாம். பண்டாரநாயக்கா தோற்றுவித்த இ.போ.சபை, கன்னங்கரா உருவாக்கிய இலவச கல்வி முறைமை, அதுலத் முதலி தோற்றுவித்த உயர்கல்விக்கான மகாபொல புலமைப் பரிசில், காமினி திசநாயக்கா உருவாக்கிய மகாவலிகங்கை திசை திருப்புத்திட்டம மற்றும் விக்ரோறியா அணைக்கட்டு, ரந்தெனிகல மின்உற்பத்தி நிலையம், பிரேமதாஸாவின் ஆடைத் தொழிற்சாலைகள் என கூறலாம். அது இன்னும் நீளும். இந்த அரசுகள் எதனையும் குறிப்பிடத்தக்களவு செய்யவில்லை. அதனால் பொருளாதார அபிவிருத்தி நாட்டில் ஏற்படவில்லை. அதனையே புள்ளி விபரங்கள் காட்டி நிற்கின்றன.
இந்த அரசு உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறது. ஆயினும், அது ஏற்படுத்திய வடுக்களுக்கு மருந்து போடத் தவறிவிட்டது. இப் போர் எதற்காக தோற்றம் பெற்றதோ அதன் தேவையை போதிய அளவிலோ அல்லது முடிந்த அளவிலோ நிவர்த்தி செய்ய ஆளும் அரசு தவறிவிட்டது.
நமது நாடு ஆரம்பத்திலிருந்தே உலக நாடுகள் மத்தியில் அணிசேராக் கொள்கையை பின்பற்றி வந்திருக்கிறது. அந்தக் கொள்கை காற்றில் பறந்து காணாமலாகிவிட்டது. இதனால் உலக நாடுகள் சிலவற்றின் வெறுப்பையும் விருப்பையும் வலிந்து பெற்றிருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் சீனாவும்,இந்தியாவும்.
இது இலங்கைக்கு, அது எதிர்பாராத சிக்கல்களை தோற்றுவித்திருக்கிறது .

கேள்வி:இலங்கை அரசு கொழும்புத் துறை முகத்தின் ஒரு பகுதியை சீன அரசுக்கு அதனுடைய தேவைக்கு வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சீன அரசிற்கும், இலங்கை அரசுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது. இப்பகுதியை சீன அரசாங்கம் என்ன நோகத்திற்குப் பாவிக்கலாம் என்பதைப்பற்றி அதனது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது? அதன் காலவரையறையென்ன? அவ் ஒப்பந்தம்பற்றி முழுமையாக விளக்குவீர்களா?

பதில்:இந்தத் துறைமுக நகரம் 530 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. கடலிலிருந்து மீட்டெடுக்கும் பணிக்காக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சீன நிறுவனத்தினால் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அபிவிருத்தியின் பின்னர் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒரு ஒப்பந்தத்தின் மூலம் கையளிக்கப்பட்டுள்ளது. 310 ஏக்கர் நிலப்பரப்பு இலங்கை அரசாங்கத்துக்கும் 220 ஏக்கர் பரப்பு சீன நிறுவனத்திற்கு 99 வருட குத்தகை அடிப்படையில் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 49 ஏக்கர் சீன நிறுவனத்திற்கு குத்தகை அற்ற அறுதியாக வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒட்டுமொத்தமான எதிர்கால அபிவிருத்தியில் 23 வீதமான காணி இலங்கை அரசாலும் 43 வீதமான காணி சீன நிறுவனத்தினாலும் விற்பனை செய்ய முடியும். மீதி 34 வீதமான காணி பொதுவான பகுதிகளாக இருக்க வேண்டும். இதுவே ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய தற்போதைய ஏற்பாடு.
இலங்கை அரசும் சீன நிறுவனமும் அபிவிருத்திக்காக இணைந்துகொள்ளும் நிறுவனங்களுக்கு தனியார்களுக்கும் 99 வருட குத்தகை அடிப்படையில் தங்கள் காணி உரிமங்களை விற்க அல்லது மாற்ற முடியும்.
அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டிருக்கும் ஒப்பந்தம் வியாபார நோக்கமாகவே கருதலாம். ஆனால் அறுதியாக வழங்கப்பட்டிருக்கும் நிலப்பரப்பின் எதிர்காலம் எப்படி அமைந்திருக்கும் என்பது கேள்விக்குறியே.
மேலும் தொடரவிருக்கின்ற அபிவிருத்திகள் சீன நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமாக இருந்தால் காணி உரிமைகள் சீன நிறுவனங்கள் கையகப்படுத்தும் சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகிறது.

கேள்வி:இந்த ஒப்பந்தத்தினால் இலங்கை அரசுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேறுவதற்காக கணக்கிலடங்காத சன்மானங்கள் வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. இதில் உண்மையிருக்கிறதா?

பதில்:வழக்கமாக அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக ஒரு நாட்டுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று அரசாங்கங்கள் நியாயப் பாடுகளை முன்வைக்கின்றனவோ அதேபோன்ற ஐந்து முக்கிய நோக்கங்களை இலங்கை அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது.

• அபிவிருத்தி கட்டத்திலும் அதற்கு பின்னான முற்றுமுழுதான செயல்பாட்டு கட்டத்திலும் ஏற்படக்கூடிய வேலைவாய்ப்பு

• நேரடியான வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு கிட்டத்தட்ட 15 பில்லியன் அமெரிக்க டொலர்

• வழக்கத்துக்கு மாறாக பன்னாட்டு நிறுவனங்களின் புதிய அபிவிருத்தித் திட்டங்களை உள்வாங்குவதன் மூலம் பெறுமதி சேர் நகர அபிவிருத்தியை முன்னெடுத்தல்

• நாட்டின் வரவு செலவுக் கணக்கில் ஏற்படக்கூடிய இடைவெளியை சமநிலைப்படுத்ததலும் வருவாயை அதிகரித்தலும்

• வரி அறவிடுதல் ஊடாகவும் நீண்டகால நில குத்தகைகளின் வருமானத்தின் ஊடாகவும் அபிவிருத்தியின் பின் மேற்கொள்ளப்படும் விற்பனையின் ஊடாக அரசுக்கு வருமானம் ஈட்டுதல்

ஆனால் நீங்கள் சொல்வது போல இந்த விடயங்களை ஏற்கனவே இருக்கக்கூடிய முதலீட்டு அதிகார சபையின் ஊடாக தருவிக்கப்படுகின்ற முதலீடுகளின் வாயிலாக ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

அத்தோடு அபிவிருத்திக்காக செலவிடப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை நீண்டகால கடன் கொடுப்பனவு முறை மூலமாக பெற்றுக் கொண்டிருக்க முடியும்.
அபிவிருத்தி என்ற போர்வையில் நாட்டினுடைய நிலப்பரப்பினை வெளிநாட்டிற்கு தாரைவார்த்துக் கொடுத்து அவ்விடத்தில் வருமானத்தின் பெரும் பங்கினையும் அவர்களே முதலீடாகவும் வருமான லாபமாகவும் பெற்றுக் கொள்ள வடிவமைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை.

இலங்கை அரசுக்கு நிகராக முதலீடுகளையும் வருமானங்களையும் வெளிநாட்டு அரசாங்கமும் பெற்றுக்கொண்டு வளம்பெறும் சூழ்நிலைதான் இந்த ஒப்பந்தத்தின் மூலம் காணப்படுகிறது.

கேள்வி:இந்த போர்ட் சிற்றி பிரதேசத்தை நிர்வகிப்பதற்காக ஒரு ”தனியான அதிகார சபை” தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாட்டின் ஒரு பகுதியை நிர்வகிப்பதற்கு அப்படி தனியானதொரு அதிகாரசபையை தோற்றுவிப்பதற்கான அவசியம் ஏற்பட்டிருப்பதுபற்றி உங்கள் கருத்தென்ன?

பதில்:நான் முதல் கூறியதுபோல முதலீட்டு அதிகாரசபையின் ஊடாக இவற்றை முன்னெடுத்து இருக்க முடியும்.

ஆனால் முதலீட்டு அதிகார சபையினால் கொண்டுவரப்பட்ட அல்லது அவர்களுடன் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் பல நீண்ட நாட்களாக நடைமுறைப்படுத்தப்படாத சூழ்நிலை காணப்படுகிறது.

ஒன்று அதிகார சபைகளுக்கு இடையிலான சிவப்பு நாடா என்கின்ற அனுமதி வழங்குவதற்கான கால தாமதங்கள் ஏற்படுத்தப்படுவது.

இரண்டாவது பல்வேறுவிதமான அமைச்சுகளின் வகிபாகம் இருப்பதனாலே அதற்குள் இருக்கக்கூடிய குழப்ப சூழ்நிலை.

மூன்றாவது காலத்துக்கு காலம் ஏற்படுகின்ற அரசியல் மாற்றங்களினால் பல அபிவிருத்தித் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.

நான்காவது வெவ்வேறு அதிகார தளங்களில் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் அதிகார தலையீடுகளும் குழப்பங்களும். உதாரணமாக மத்திய அரசாங்கம் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கு இடையில் ஏற்படுத்தக்கூடிய அதிகார சிக்கல்கள்.

இதனாலேயே துரித அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்படலாம் என்பதனாலே முதலீட்டாளர்களுக்கு பட்டுப்பாதை ஒன்றை ஏற்படுத்துவதற்கு இந்த அதிகார சபை அவசியம் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஆனால் இவ்விடயங்களை நிர்வாக ரீதியாக நிவரத்தி செய்திருக்கலாம்.

இந்த சட்டமூலத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட முகாமைத்துவ ஆணைக்குழு துரித அபிவிருத்தி முன்னெடுப்புக்களின் அனுமதிகளை வழங்குவதில் தாமதப்படுத்தாமல் எந்த தலையீடுகளையும் தாண்டி செயல்பட அல்லது செயற்படுவதற்கான நோக்கங்களை கொண்டதாக இருக்கிறது.
இம் முகாமைத்துவ ஆணைக்குழு எதிர்காலத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கு மாகாணசபைகளுக்கு அல்லது அமையவிருக்கும் புதிய அரசாங்கங்களுக்கு கூட கட்டுப்படாமல் தனித்துவமாக செயல்படக்கூடிய அதிகாரங்களை கொண்டிருக்கும் ஆபத்து நிலைமை காணப்படுகிறது.

கேள்வி:வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தாங்கள் வாழ்ந்து வருகின்ற தமது பூர்வீக நிலப்பகுதியை தாங்கள் நிர்வகிப்பதற்கு ஒரு நிர்வாக அலகைத்தானே கேட்டார்கள். அதற்கு மறுப்புத் தெரிவித்த இலங்கை அரசு, தனது நாட்டுக்கு அப்பாலுள்ள சீன தேசத்திற்கு எவ்வாறு போர்ட் சிற்றியை கையீந்து கொடுக்க முடியும். இதன் மர்மம் என்ன?

பதில்:தமிழ் தேசிய இனமான நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக எங்களுக்கான அதிகாரங்களைப் பகிர, இது எமக்கான தீர்வாக நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஆகக்குறைந்தது மாகாணசபை அதிகாரங்களை பகிர, ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள 13ம் திருத்தத்தை முற்றுமுழுதாக நிறைவேற்ற கோரிக்கை விடுத்தும் அது மறுக்கப்படுகிறது. ஒரு தேசிய இனத்தின் கோரிக்கையை நிராகரிக்கும் அரசு, வெளிநாடு ஒன்றுக்கு அதே அதிகாரங்களை வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்ற எமது நிலைப்பாட்டை துறைமுக முகாமைத்துவ ஆணைக்குழுவிற்கான வர்த்தமானி அறிவித்தல் வந்த உடனேயே தெரிவித்திருந்தோம்.

ஆதிக்குடிகளாக, தேசிய இனமாக எமது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் எமது மக்களை சிறப்பாக நிர்வாகிக்கும் அதிகாரப் பரவலாக்கலாக சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து பல வருடங்களாக ஜனநாயக வழியிலும் ஆயுதப் போராட்ட மூலமும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்துள்ளோம். எமது போராட்டங்கள் பிரிவினை வாதமாக, பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டு அரச படைகளால் கொடூரமாக அடக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது. எமது பாரம்பரிய மண்ணில் இரத்த ஆறு ஓடியது. அதே வேளையில் வெளிநாடு ஒன்றுக்கு தாம்பாளத்தில் வைத்து அதே அதிகாரங்களை அரசு கொடுக்க முற்படுவது எதற்காக?

வியாபார ரீதியாக அந்த துறைமுக நகரம் நாட்டுக்கு நிதி சேர்த்துக் கொடுக்கும் என்றால் நாம் கோரும் அதிகாரங்களை எங்களுக்கும் தாருங்கள். இதைவிட சிறந்த முறையிலே நாங்கள் பொருளாதார ரீதியாக அபிவிருத்தியடைந்து இந்த நாட்டினுடைய பொருளாதாரத்திற்கும் அதிக அளவு வருமானத்தை ஈட்டித் தரும் தேசமாக மாற்றி அமைத்து காட்டுகிறோம்.

தனது நாட்டில் தேசிய இனத்துக்கு பல்வேறு காரணங்களை கூறி மறுக்கும் உரிமையை, வெளிநாட்டுக்கு வருமானம் என்ற நியாப்படுத்தலோடு வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என எமது மக்கள் பிரதிநிதிகளாக பல மட்டங்களிலும் பாராளுமன்றத்திலும் குரல் கொடுத்து வருகிறோம்.

நிதிசார் வருமானத்தில் இந்த ஒப்பந்த ஏற்பாட்டாளர்களுக்கும் பங்குள்ளது என்பது தான் அந்த மர்மம் என கருத இடமுண்டு.

கேள்வி:ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. விஜேதாஸ ராஜபக்ஸ மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாரானுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசன் ஆகியோர் போர்ட் சிற்றி தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது என தெரிவித்திருக்கின்றனர். இப்படியான செயற்பாடு இலங்கையின் இறையாண்மைக்கு முரணானது, சர்வஜன வாக்குரியொன்று அவசியமானது என அவர்கள் கருதுவதின் அர்த்தம் என்ன?

பதில்:அரசியல் யாப்பை மீறுகின்ற விடயங்களை ஆராய்வதற்கான அல்லது அனுமதியைப் பெறுவதற்காக உயர்நீதிமன்றத்தில் இந்த சட்டமூலம் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த சட்ட மூலத்திற்கு எதிரான தரப்புக்களும் மிகச்சிறந்த சட்டத்தரணிகளை நிறுத்தி தமது வாதங்களை முன்வைத்தனர். பல்வேறு வாத பிரதிவாதங்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் 35 க்கும் மேற்பட்ட திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான விதிமுறைகளையும் அறிவுறுத்தியது.

இருப்பினும் துறைமுக முகாமைத்துவ ஆணைக்குழு விசேட சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பினை வழங்கியிருப்பது அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

இந்த சட்டமூலத்தின், சில சரத்துக்கள் அரசியல் சாசனத்தை மீறுவதாக வைத்த விவாதங்களுக்கு உயர் நீதிமன்றமே அந்த சரத்துக்கள் அரசியல் யாப்பினை மீறவில்லை என்று கருத்து தெரிவித்து முற்றுப் புள்ளி வைத்தது.

Posted in Uncategorized

தரமுயர்த்தல் என்ற பெயரில் மாகாணசபைகளின் அதிகாரங்களை பறிக்க அரசு முயற்சி-ரெலோ பிரதி தலைவர் பிரசன்னா குற்றச்சாட்டு

தரமுயர்த்தல் என்ற பெயரில் மாகாணசபைகளின் அதிகாரங்களை பறிக்கவே அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவர் இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் இந்திரகுமார் பிரசன்னா மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றதே இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் ஊடான 13வது திருத்தச் சட்டம்.

குறித்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் அரசாங்கம் கபட நாடகம் ஆடுகின்றது.

இதேவேளை இந்தியா, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கு ஒத்துழைப்பதாக கூறிக்கொண்டு மாத்திரம் இருக்காமல் அதனை செயற்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் தற்போதைய அரசாங்கம், மாகாணசபையின் அதிகாரங்களைத் தன்வசப்படுத்தும் செயற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றது.

ஆகவே இந்தியா உட்பட சர்வதேச நாடுகள், இந்த 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு, அதனூடாக தமிழ் மக்களுக்குரிய நிரந்தரத் தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அரசியற் தீர்வின் ஆரம்பப் புள்ளியான மாகாணசபையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.ரெலோ செயலாளர் ஜனா.

மாகாணசபையை அரசியற் தீர்வு என முழுமையாக ஏற்காவிட்டாலும் அரசியற் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கருதுகின்றோம். அந்த ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற மாகாணசபை முறைமையைப் பாதுகாத்துக் கொள்ள உண்மையிலேயே தமிழ் மக்களை, தமிழத் தேசியத்தை நேசிக்கின்றவர்களாக இருந்தால் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்றைய தினம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தினால் நடாத்தப்பட்ட தியாகிகள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் உட்பட தோழர்களின் 31ம் ஆண்டு நினைவேந்தல் இன்றை கொரோனா நிலைமையில் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சில உறுப்பினர்களுடன் நடைபெறுகிறது.

பத்மநாபா அவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் மறக்க முடியாத, தவிர்க்க முடியாத தலைவராக இருந்திருக்கின்றார். இன்றும் கூட அவரது நினைவுகளை, போராட்ட குணாம்சங்களை மறக்க முடியாது. இவ்வாறான தலைவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் இன்றைய எமது மக்களின் அவல நிலை இப்படி இருந்திருக்காது. ஏனெனில் அவர் அவருடன் இருந்த ஏனைய போராட்ட இயக்கங்களின் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியவர். போராட்ட இயக்கங்கள் ஒன்றிணைந்து நமது பொது எதிரிக்கு எதிராகப் போராட வேண்டும் என்று 1984லே சிந்தித்து ரெலோ இயக்கத்தின் தலைவரான ஸ்ரீசபரெத்தினம் அவர்களுடன் இணைந்து ஈழ தேசிய விடுதலை முன்னணியை உருவாக்கியதில் மிகவும் கூடுதலான பங்களிப்பைச் செய்தவர்.

அப்போதைய மூன்று போராட்ட இயக்கங்கள் ஆரம்பத்தில் ஈ.என்.எல்.எப் ஐ உருவாக்கி இருந்தாலும், அதன் இறுதிக் கட்டத்திலே தமிழீழ விடுதலைப் புலிகளும் அதில் சேர்ந்திருந்தார்கள். அந்த நான்கு இயக்கங்களும் மிகக் குறுகிய காலம் நன்றாகப் பயணித்தாலும் போராட்ட இயக்கங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகப் பிளவுற்று பல உயிர்களையும், மிகத் திறமையான போராட்ட வீரர்களையும், போராட்டத் தலைவர்களை இழந்தோம். இறுதியில் தமிழ் மக்கள் இந்த இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டு மிகவும் மோசமான நிலையிலே இருக்கின்றார்கள்.

1983ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தின் பின்னர் போராட்ட இயக்கங்கள் அமோகமாக வளர்ந்திருந்தன. போராட்ட குணாம்சங்கள் உள்ள இளைஞர்கள் வடகிழக்கில் நிரம்பியிருந்தார்கள். இன்று அந்த நிலை மாறி 1983க்கு முன்பு இருந்த நிலையை விட மோசமான நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். தற்போது போராட்டம் வடக்கு கிழக்கிலே இல்லாவிட்டாலும் அந்தக் காலத்தில் போராட்ட இயக்கங்களாக இருந்தவர்கள் அரசியற் கட்சிகளாக மாறியிருகக்கின்றார்கள். தேர்தல்கள் பலவற்றில் போட்டியிட்டு அங்கத்தவர்களாகவும் இருக்கின்றார்கள். அதே போன்று மிதவாதக் கட்சிகளும் வடக்கு கிழக்கிலே தேசியத்தைக் கருத்தாகக் கொண்டு செயற்படுகின்றார்கள்.

ஆனால் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் அடக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, அவர்களது உடமைகள் கபளீகரம் செய்யப்பட்டு, கலாச்சாரங்கள் மழுங்கடிக்கப்பட்டு மிகவும் மோசமாக இருக்கும் இந்தக் காலகட்டத்திலே தமிழ்த் தேசியத்தை விரும்பும் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய ஒரு தேவை எமக்குள்ளது.

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் கூட மத்திய அரசாங்கத்தினால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் எதிர்காலத்தில் மாகாணசபை முறைமை இருக்குமோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது. இந்த மாகாணசபையை தமிழ் மக்கள் தங்களது அரசியற் தீர்வு என முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அரசியற் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கருதுகின்றார்கள். அந்த வகையில் அந்த ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற மாகாணசபை முறைமையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதும் தேவையாக இருக்கின்றது.

அந்த அடிப்படையில் உண்மையிலேயே தமிழ் மக்களை, தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றவர்களாக இருந்தால் எங்களது சுயகௌரவத்தை, கட்சியின் வளர்ச்சியை, சுயநல தனி மனித எண்ணங்களை விடுத்து ஒன்றாக இணைந்து தற்போதைய நிலைமையில் எங்களது பிரதேசத்தையும், மக்களையும், மாகாணசபை முறைமையையுமாவது காப்பற்ற முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.

கருணா விவகாரத்திற்கு பொறுப்பேற்று ரணில் விக்கிரமசிங்க என்னை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டார்- என்னை பலிக்கடாவாக்கினார்:அலிஷாஹிர் மௌலானா

7 வருடங்களிற்கு முன்னர் எனது கட்சி தலைவர் எனது உயிரை பணயம் வைக்கும் நிலையை ஏற்படுத்தினார், எனக்கு துரோகமிழைத்தார்

இதனை காப்பாற்றிக்கொள்வதற்காக என்னை பலிக்கடாவாக்கினார். அதன் பின்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

நான் வெறுமனே அவரது உத்தரவுகளை மாத்திரம் பின்பற்றினேன், நாட்டிற்கு நல்லது என நினைத்ததை மாத்திரம் செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது.
அந்த நாள் ஜூன் 22 2004 நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து 17 வருடங்களின் பின்னர் தேர்தலில் தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார் அவரது பெயர் ரணில் விக்கிரமசிங்க . எனக்கு துரோகமிழைத்த கட்சி தலைவர் தொடர்ந்தும் நாட்டிற்கு துரோகமிழைக்கின்றார்

கருணா தப்பிச்செல்வதற்கு நானே காரணம் என பிரபாகரன் அறிந்ததை தொடர்ந்து சீற்றமடைந்த அவர் தனது அரசியல் பிரிவினை செய்தியாளர் மாநாட்டினை நடத்துமாறும் எனக்கு அதில் தொடர்பிருப்பதை அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஜூன் 20 ம் திகதி அது நடந்தது.

மறுநாள் எனது கட்சி தலைவரிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்புகள் வந்தன தனது அலுவலகத்திற்கு என்னை வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.மங்களசமரவீரவும் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களும் செய்தியாளர் மாநாட்டினை நடத்தி தங்கள் குறுகிய அரசியலை முன்னெடுததவண்ணமிருந்தனர்.

எனது நடவடிக்கைக்கு எனது கட்சியே காரணம் என தெரிவித்து சமாதானபேச்சுக்களை குழப்ப நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்சி தலைவர் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டார் நான் மிகவும் அமைதியாக உங்கள் உத்தரவின் பேரிலேயே செயற்பட்டேன் என தெரிவித்தேன்.நாங்கள் தற்போது அரசாங்கத்தில் இல்லை நாங்கள் எதிர்கட்சியில் இருக்கின்றோம்- சமாதான பேச்சுவார்த்தைகள் முக்கியமில்லை என அவர் தெரிவித்தார்.நான் அதிர்ச்சியடைந்து இவ்வாறு பதிலளித்தேன் – சேர் நீங்கள் கொழும்பில் இருந்தவாறு இதனை தெரிவிக்கலாம்இநான் மக்கள் யுத்த பயத்தில் வாழும் பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றேன் நீங்கள் தான் இது நல்ல நடவடிக்கை என தெரிவித்தீர்கள் என்றேன்

நான் தற்போது கட்சியை பற்றி சிந்திக்கவேண்டும் நான் மிகவும் அவமானகரமான சூழலில் இருக்கின்றேன் நீங்கள் பதவி விலகவேண்டும் என அவர் தெரிவித்தார்.நான அந்த சந்திப்பிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினேன்.எனக்கு இராணுவ புலனாய்வு பிரிவினரிடமிருந்து தகவல்கள் கிடைத்தன எனது பாதுகாப்பு ஆபத்திற்குள்ளாகியுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.என்னை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளிற்கு இந்திய குடியுரிமையை வழங்கவேண்டும் – மோடியிடம் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளிற்கு இந்திய குடியுரிமையை வழங்கவேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்திய பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய பிரதமரை புதுடில்லியில் இன்று சந்தித்தவேளை ஸ்டாலின் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளிற்கு இந்திய குடியுரிமையை வழங்கவேண்டும் குடியுரிமை திருத்தசட்டத்தை மீள பெறவேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் கச்சதீர்வை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

எம்.பியாகின்றார் பஸில் – நிதி அமைச்சுப் பதவியும் ஒப்படைப்பு?

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பின்னர், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பஸில் ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்வார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பிரபல சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றதும் பஸில் ராஜபக்சவுக்கு நிதி அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது எனவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்காகப் பதவி துறக்கவுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருடன் இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார் எனவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள பஸில் ராஜபக்ச எதிர்வரும் 23ஆம் திகதி நாடு திரும்புகின்றார்.

Posted in Uncategorized

2020 வாக்களர் பட்டியல் சரிவு- யாழ். மாவட்ட நாடாளுமன்ற ஆசனம் ஒன்று காலியானது

நாட்டிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் வருடாந்தம் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு அமைய யாழ் மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளன.

அதேவேளை கம்பஹா மாவட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய யாழ் மாவட்டத்தில் 7 ஆக காணப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 6 ஆகவும் , கம்பஹா மாவட்டத்தில் 18 ஆக காணப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 19 ஆகவும் அதிகரித்துள்ளன.

2020 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் கணிப்பீட்டின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் புதிதாக 172,000 வாக்காளர்கள் பதிவாகியுள்ளமைக்கமைய , இலங்கையில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 16, 400, 000 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரத்தாகும் இலகு ரயில் திட்டத்திற்காக 5,896 மில்லியன் ரூபாவை இலங்கை செலுத்த வேண்டியுள்ளதாக தகவல்

ஜப்பானின் நிவாரணக் கடனின் கீழ் கடந்த அரசாங்கம் செயற்படுத்த முயன்ற இலகு ரயில் திட்டத்தை இரத்து செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்தாலும் 5,896 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடத்தின் அரசாங்கத்தின் நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான கணக்காய்வாளரின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5,896 மில்லியன் ரூபாவை இலகு ரயில் திட்டத்தின் ஆலோசனை சேவைக்கு வழங்க வேண்டியுள்ளதாக கணக்காய்வாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தத் தொகை கடந்த வருடம் அரசாங்கத்தின் நிதி கொடுக்கல் வாங்கல் பதிவுகளில் உள்வாங்கப்படவில்லையெனவும் கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர் தாயக கோட்பாட்டை உடைப்பதே அதிகாரப் பறிப்பின் நோக்கம் ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

தமிழர் தாயக கோட்பாட்டை உடைப்பதே அதிகாரப் பறிப்பின் நோக்கம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி

தமிழ் மக்கள் வாழும் மாகாணங்களின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப் பெறுவதன் நோக்கம் தமிழர் தாயகக் கோட்பாட்டை உடைத்து சிங்கள குடியேற்றங்களை நிலைப்படுத்தி கொள்வதற்கு.

சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நிரலை யார் ஆட்சிக்கு வந்தாலும் நிறுத்தவில்லை மாறாக வேகமாக செயற்படுத்தியே வருகின்றனர். தற்போதைய ஆட்சியாளர்கள் கொரோனா பெருந் தொற்றைக் காரணம் காட்டி பயணத் தடை ஒன்றை வைத்துக் கொண்டு மிக வேகமாக முன்னேடுக்க ஆரம்பித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக வன்னி மாவட்டத்தை இவர்கள் குறிவைத்துள்ளனர். வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மாகாண அதிகாரங்கள் மத்திக்கு செல்வதை அந்த மாகாண மக்கள் ஆச்சரியமாக பார்க்கமாட்டார்கள் காரணம் எல்லாமே ஒரே இனம் தான் ஆனால் வடகிழக்கு அவ்வாறு அல்ல அதனால் தமிழர் தாயகம் என்பது முழுமையான தமிழ் பேசும் மக்களைக் கொண்ட மாவட்டம் அதனை இனங்களின் கலப்பு மாவட்டமாக மாற்ற வேண்டும். அதுவே அரசின் நோக்கம்.

இதன் முதற் கட்டமாக முல்லைத்தீவு மணலாறு, வவுனியா,மன்னார்,கந்தளாய்,சேருவில்,புல்மோட்டை ஆகிய இடங்கள் நூறு நவீன நகராக்கத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது காரணம் குறிப்பிட்ட தமிழர் தாயகப்பகுதியில் தற்போது சிங்கள குடியேற்றங்கள் ஏற்கனவே அமையப் பெற்றுள்ளன அவற்றை மேலும் விரிவாக்கம் செய்து குடியேற்ற சிங்களவர்களை அதிகரித்தல் தான் நோக்கம். அத்துடன் உருவாகும் நகரங்களில் பாரிய தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகளும் திட்டங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதனைவிட வன்னிமாவட்ட பொது வைத்திய சாலைகள் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டமை. மாகாணப் பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக மாற்றப்பட்டமை மாகாண காணிகள் தொல்லியல்,வனவளத் திணைக்களத்தினுள் உள்வாங்கப்படுதல் போன்ற பல அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக அதிகமாக பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்துக்களின் தொன்மையான இடங்களான குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயம் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் போன்ற பல இடங்கள் வன்னியில் பௌத்த மயமாக்கலுக்கு தீவிரமாக உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே மாகாண அதிகாரங்களை பறிப்பதன் மூலம் தமிழர் தாயக கோட்பாட்டை உடைத்து சிங்கள குடியேற்றங்களை விரிவு படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு.

Posted in Uncategorized

ஆடைத் தொழிற்சாலையை மூடாவிட்டால் பாரிய அபாயத்தை எதிர்நோக்க நேரிடும் – ரெலோ மன்னார் நகர முதல்வர் எச்சரிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள மன்னார் ஆடைத் தொழிற்சாலையினை உடனடியாக மூடி, நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் பாரிய அபாயத்தை எதிர்நோக்க நேரிடும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மைக்காலமாக மன்னாரிலுள்ள குறித்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஆடைத் தொழிற்சாலையினை தற்காலிகமாக மூடி, கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை சுகாதார துறையினர் முன்னெடுக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

ஆகவே ‘வரும் முன் காப்போம்’ என்பதற்கு அமைய மன்னாரிலுள்ள ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடி, மாவட்டத்தில் ஏற்படவுள்ள பாரிய அபாயத்தை தடுப்பதற்கு அரச உயர் அதிகாரிகள், சுகாதார துறையினர் ஆகியோர் துரித நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.