சீன வழியில் இலங்கை: OIC கண்டனம்!

சீனாவில் முஸ்லிம்களை அநீதியாகக் கைது செய்யப்படும் முஸ்லிம்களை அடைத்து வைக்கும் ‘புனர்வாழ்வு மையங்கள்’ போன்று இலங்கையிலும் தீவிரவாத சிந்தனைக்குள்ளானவர்களை புனர்வாழ்வு மையங்களை உருவாக்கும் இலங்கை அரசின் திட்டத்துக்கு அரபு நாடுகளின் கூட்டுறவுக்கான அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் ஊடாக, முஸ்லிம்களை வகை தொகையின்றி கைது செய்து அடைக்கக் கூடிய அபாயம் நிலவுவதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

புர்கா தடை தொடர்பிலும் அவதானம் வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு, இலங்கை, பன்முகத்தன்மையிலிருந்து விலகிச் செல்வதற்கான அறிகுறிகளே காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஆர்மேனிய இனப்படுகொலை தீர்மானம் ஈழத் தமிழர்களுக்கு காட்டிய பாதை – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

“இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அதற்கான காலம் கடந்து விட்டது என்றும் கூறிவரும் எமது பிரதிநிதிகளில் சிலருக்கு பாடமாக ஆர்மேனியாவில் நிகழ்ந்த இனப்படுகொலையை 31 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளமையை குறிப்பிடலாம்” என ரெலோ அமைப்பின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“ஈழத் தமிழர்கள் தம்மீது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை உட்பட அட்டூழிய குற்றங்களுக்கு நீதிகோரி சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்ததோடு மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானங்களில் அது வலியுறுத்தப்பட வேண்டும் என்று அங்கத்துவ நாடுகளிடம் கோரி வருகின்றனர். முன்னைய மனித உரிமை ஆணையாளர்கள் அதற்கான ஆதாரங்கள் தமக்குக் கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கு மேலாக ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் என்று தம்மை கூறும் சிலரும் இனப்படுகொலைக்கான ஆதாரம் இல்லை என்று கூறி வருகின்றனர்.

ஒரு சுயாதீன சர்வதேச விசாரணை பொறிமுறையை ஏற்படுத்துவதன் மூலம் திரட்டப்படும் சாட்சியங்களின் ஊடாக எம் மக்களிடம் இருக்கும் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை ஆவணப்படுத்தி சர்வதேச நீதி பொறிமுறையின் ஊடாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.

இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அதற்கான காலம் கடந்து விட்டது என்றும் கூறிவரும் எமது பிரதிநிதிகளில் சிலருக்கு பாடமாக ஆர்மேனியாவில் நிகழ்ந்த இனப்படுகொலையை 31 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளமையை குறிப்பிடலாம்.

1916ஆம் ஆண்டுகளில் துருக்கிய பேரரசை புரட்சி மூலம் கைப்பற்றிய புரட்சிப் படையினர் தங்கள் ராணுவத்தில் இருந்த ஆர்மேனியர்களையும், விடுதலை கோரிய ஆர்மேனிய மக்களையும் படுகொலை செய்ததோடு அவர்களில் பெரும்பகுதியினரை சிரிய நாட்டிற்கு துரத்தி விட்டார்கள். அந்த மக்களை நாடுகடத்துவதற்கு உதவிய குர்திஷ் துணை ராணுவப்படையினர் ஆர்மேனிய மக்களை கற்பழித்தும், கொள்ளையடித்தும், கொலை செய்தனர். இயற்கை அனர்த்தங்கள், நோய், பட்டினியாலும் பலர் இறந்தனர். கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். பலர் துருக்கியில் தப்பியும் உள்ளனர். பலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். அவர்கள் வழித்தோன்றல்கள் இன்று புலம்பெயர் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆர்மேனியா சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. இருந்தாலும் தமக்கு நடந்த கொடுமைகளை இனப்படுகொலையாக கருதி ஆர்மேனியர்கள் நீதிகோரி போராடினார்கள். இனப்படுகொலைக்கான ஆதாரமில்லை என்று துருக்கி தொடர்ந்தும் மறுத்து வந்தது. துருக்கியின் ஆதரவு நாடுகளும் அதை தவிர்த்து வந்தனர். ஆனால் அவர்களுடைய போராட்டம் இன்று ஒரு நூற்றாண்டைக் கடந்தாலும் வெற்றி அடைந்து உலக நாடுகள் துருக்கியில் ஆர்மேனியர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலை என்று ஏற்றுக் கொண்டுள்ளன. அதன் முக்கிய அம்சமாக குர்திஷ் துணைப் படையினர் ஆர்மேனிய மக்களுக்கு இளைத்த அட்டூளியங்களை துருக்கி அரசாங்கம் கண்டும் காணாமல் இருந்ததே, துருக்கி செய்த கொலைகளுக்கு சமமான மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. அன்று துருக்கிக்கு ஆதரவாக இருந்த ஜெர்மனி கூட இந்த குற்றங்கள் நடப்பதை தெரிந்தும் அதை தடுக்காமல் இருந்தது குற்றமாக கருதப்படுகிறது.

ஆகவே ஈழத் தமிழர்களுக்கு நடந்த அட்டூழிய குற்றங்களில் இனப்படுகொலைக்கு ஆதாரங்கள் இல்லை என்று கூறி வருபவர்களும் இனப்படுகொலை நடைபெறவில்லை என்று கூறுபவர்களும் கூட குற்றவாளிகள் என்று கருதப் படுவதற்கு இடம் உண்டு.

இன்று சர்வதேச மனித உரிமை சட்டங்களின் அடிப்படையில் இனப்படுகொலை என்பது விரிவுபடுத்தப் பட்ட அர்த்தங்களை கொண்டிருப்பதனால் ஈழத் தமிழர்களுடைய இனப்படுகொலை விவகாரத்தையும் நீதிப் பொறிமுறை முன் நிறுத்த முடியும் என்பதை ஆர்மேனியா தீர்மானத்தின் முலம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதேபோன்று இங்கு நடந்த இனப்படுகொலையை மறுப்பவர்கள் மட்டுமல்ல கண்டும் காணாமல் இருந்தவர்கள் கூட இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய காலம் வரும் என்பதையும் ஆர்மேனியர்களுக்கான நீதி எடுத்துக் காட்டுகிறது.

ஈழத்தமிழர்களின் கோரிக்கை ஒருமித்த குரலில் தொடர்ச்சியாக ஒலிக்குமிடத்து பூகோள அரசியல் நலன்களை தாண்டி வெற்றி பெறும் என்பதற்கும் சிறந்த எடுத்துக் காட்டு” என சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

சுரேந்திரன்
ஊடக பேச்சாளர்/ தேசிய அமைப்பாளர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

மாகாணசபை தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரசுடனோ வேறு எந்த முஸ்லிம் கட்சியுடனோ எந்தவித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை – ரெலோ செயலாளர் நாயகம் கருணாகரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடனோ வேறு எந்த முஸ்லிம் கட்சியுடனோ எந்தவித பேச்சுவார்த்தைகளையும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கவில்லையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

ஒன்றிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கருத்தாக அவர்களின் தீர்மானங்களைக் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று(2-5-21) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நேற்றைய தினம் ஊடகங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றியும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப் பற்றியும் வந்த செய்திகள் மக்கள் மத்தியில் குழப்பமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாகக் கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே அந்த செய்திக்குப் பின்பு ஒரு அதிர்வலை ஏற்பட்டது. எனக்கும் பல தொலைபேசி அழைப்புக்கள் வந்திருந்தன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களாக அதாவது முஸ்லிம்களுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்காக நாங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றோம் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பத்திரிகையாளர் மாநாட்டிலே குறிப்பிட்டிருந்தார்கள்.

அந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் கூட அப்படி நடந்ததாகக் கூறியிருந்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் மூன்று கட்சிகள் அதில் அங்கம் வகிக்கின்றன. அதன் ஒரு கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமாகக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நான் பதவி வகித்துக்கொண்டிருக்கின்றேன்.

இந்த வேளையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அலுவலக ரீதியாக எந்தவொரு கட்சிகளுடனோ குறிப்பாக முஸ்லிம் கட்சிகளுடனோ முஸ்லிம் காங்கிரஸுடனோ எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை.

சிலவேளைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் , சாணக்கியன் பேசியிருக்கலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட பேச்சுவார்த்தையோ விருப்பமோ தவிர தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோக பூர்வ பேச்சுவார்த்தையாகக் கருத முடியாது.

அதற்கும் மேலாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக நிசாம் காரியப்பர் இருந்து கொண்டு அந்தச் செய்தியை உறுதிப்படுத்துவதாகக் கூறியிருப்பது எந்தளவிற்கு அவர் அதனைப் புரிந்துகொண்டிருக்கின்றார் என்பது எனக்குத் தெரியவில்லை.

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக இருக்கின்ற நிசாம் காரியப்பர் முதலிலே அவருடைய கட்சியின் ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படுவதை நிறுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இந்த நாட்டில் மாறிமாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்களினால் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டபோதும் அவர்களுக்கு எதிராக அநியாயங்கள் நடைபெற்றபோதும் அவர்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டபோதும் தமிழ் பிரதிநிதிகள் அனைவருமே அதற்கு எதிராகக் குரல்கொடுத்து வந்துள்ளனர்.

முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் முதலில் தங்கள் நல்லெண்ணங்களை வெளிப்படுத்துவதற்குத் தமிழ் பிரதிநிதிகள் செயற்படுவதைப்போன்று அவர்களது மனநிலையை மாற்றிக்கொண்டு செயற்பட வேண்டும்.

முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்கூட கடந்த காலங்களிலே 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அவர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்கக்கூடாது. கட்சியின் முடிவுகளுக்கு மாறாக அவர்களது உறுப்பினர்கள் செயற்பட்டால் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழ்வதற்குத்தான் விரும்புகின்றோம். அதற்கேற்றாற்போல் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள்கூட தமிழ் பேசும் சமூகத்தினரை பிரித்தாண்டு ஒரு பிரிவினையை ஏற்படுத்தி எங்களிடையே ஒரு முறுகல் நிலையை, மோதலை உருவாக்குவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் அதற்குள் அகப்படாமல் முஸ்லிம்களுடன் இணைந்து வாழ்வதற்குத்தான் விரும்புகின்றோம். மாகாணசபைத் தேர்தல் ஒன்று வந்தால் அதில் தமிழ் பேசும் மக்களாக இணைந்து ஆட்சியமைப்பதை நாங்கள் விரும்புகின்றோம்.

ஆனால், மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலே தமிழ் பேசும் மக்கள் இணைந்து ஒரு அட்சியை ஏற்படுத்தக்கூடிய நிலை வருமானால் அதன் முதலமைச்சராகத் தமிழர் ஒருவர் வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பமும் எண்ணமுமாகும்.

ஏனென்றால் 2015ல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தியபோது ஒரு நல்லெண்ண அடிப்படையில் எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து செயற்படவேண்டும் என்ற தேவைப்பாட்டினை உணர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்திருந்தோம்.

அந்த நல்லெண்ண அடிப்படையில் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்க வேண்டும். அதுதான் எதிர்காலத்திலே எங்களது உறவைப் பலப்படுத்தும்.

குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்திலே நாங்கள் இணைந்து செயற்படவேண்டுமானால் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுவதனை நிறுத்துவதற்கு தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.

இன்று கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஒரு பேசுபொருளாக இருக்கின்றது. கல்முனை வடக்கில் வாழும் தமிழர்கள் மிகவேதனையுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஒன்று உருவாகும்போது அதனால் முஸ்லிம்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இன்னொரு இனத்திற்குக் கிடைக்கவேண்டிய உரிமையைத் தடுப்பதற்கு அல்லது அரசாங்கத்திடம் அவர்களுக்குரிய உரிமையைக் கொடுக்க வேண்டாமென்று சொல்வதற்கு எந்தவொரு இனத்தினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் உரிமை கிடையாது.

அதனை கல்முனை தொகுதி முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் செய்கின்றார். இந்த விடயங்களை அவர்கள் முதலில் நிறுத்த வேண்டும். தமிழர்களுடன் அன்னியோன்னியமாகப் பழகுவதற்கு அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

அந்தவேளையிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து மாகாணசபைத் தேர்தலிலே போட்டியிடும். முஸ்லிம்கள் அவர்களது சார்பிலே போட்டியிட்டு ஆட்சியமைக்கும்போது கூட்டமைப்பாக நாங்கள் பேசி ஒரு முடிவிற்கு வரலாமே தவிர ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவாக அவர்களது கருத்துக்களைக் கூறுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்துவது கடினம் – ரொஷான் ரணசிங்க

மாகாண சபை தேர்தல் முறைமை குறித்து இம்மாத காலத்திற்குள் உறுதியான தீர்வை எடுக்க எதிர்பார்த்துள்ளோம். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்துவது கடினமாகும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை எதிர்க் கொள்வது தற்போதைய சூழ்நிலையில் சவால்மிக்கதாக காணப்படுகிறது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மாகாண சபை தேர்தல் குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் அமைச்சரையில் சமர்ப்பித்துள்ள யோசனை குறித்து எவ்வித தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்படாத நிலை காணப்படுகிறது. யோசனையின் ஒரு சில உள்ளடக்கங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் பல்வேறுப்பட்ட சிக்கல் நிலை காணப்படுகிறது. மாகாண சபை தேர்தல் முறைமையை அவற்றில் பிரதானமானவையாக குறிப்பிட வேண்டும். தேர்தல் முறைமை குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் யோசனைகளும் கோரப்பட்டன. அந்த யோசனைகள் ஒவ்வொன்றும் முரண்பட்டதாக காணப்படுகிறது. ஆகவே மாகாண சபைதேர்தல் முறைமை தொடர்பில் இம்மாத காலத்திற்குள் ஒரு உறுதியான தீர்வை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்துவதற்கான சாத்தியம் அரிதாகவே காணப்படுகிறது. கடந்த காலங்களை காட்டிலும் கொவிட்-19 வைரஸ் தாக்கம் தற்போது சடுதியாக அதிகரித்துள்ளது. இச்சவாலை எதிர்க் கொள்ள அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு அரசியல் இலாபம் தேடுவதை எதிர் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர் தரப்பின் ஒரு சில செயற்பாடுகள் வெறுக்கத்தக்கதாக உள்ளது என்றார்.

Posted in Uncategorized

அரசியல் போர்நிறுத்தத்தை எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்தார்

எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி. சஜித் பிரேமதாச நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு அரசியல் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

தனது அறிவிப்பை வெளியிட்ட சஜித் பிறேமதாச இலங்கையர்களை தொற்றுநோயிலிருந்து காப்பாற்ற அரசு மற்றும் பிற கட்சிகளை தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாடு ஸ்தம்பித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய எம்.பி. பிரேமதாசா, இதன் விளைவாக, நாட்டின் 20 மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதற்காக நாங்கள் ஓர் அரசியல் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளோம்

இந்த நெருக்கடியின் போது அனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களைக் காப்பாற்றுவதற்காக பணியாற்ற வேண்டும் .

தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் புறக்கணித்து, அதன் பொறுப்பை தேசத்துக்கும் அதன் குடிமக்களுக்கும் நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

செவ்வாயன்று பிரதமரை சந்திக்கும் ஆளுந்தரப்பின் பங்காளி கட்சிகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இடம் பெறவுள்ளது.

இம்முறை இடம் பெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக் கொள்ள அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையில் இடம்பெறும் அரசியல் கட்சி கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் முறைமை, ஆளும் கட்சிக்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுப்பாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை உள்ளிட்ட பலதரப்பட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி இடம் பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பிரதான 10 பங்காளி கட்சி தலைவர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்ட பிரதான தரப்பினர் பிரதமருடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள்.

அரசியல் கட்சி கூட்டத்தில் அரசாங்கத்தின் தலைவர் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், கட்சியின் செயலாளர்கள் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட அரசியல் உறுப்பினர்கள் கலந்துக் கொள்வார்கள்.

ஆனால் கடந்த மாதம் 19 ஆம் திகதி இடம் பெற்ற பிரதமர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சி தலைவர் கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் மாவட்ட உறுப்பினர்கள் உட்பட பல புதிய முகங்கள் பங்குப்பற்றியிருந்தன.

இதன் காரணமாக அன்று இடம்பெற்ற அரசியல் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் முறைமை குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனை தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

மாகாணசபைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு சில விடயங்களுக்கு 11 பங்காளி கட்சி தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பில் கட்சி தலைவர் மட்டத்தில் ஒரு தீர்மானத்தை எடுக்குமாறு பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ அரசியல் கட்சி தலைவர்களிடம் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கு எவ்வித சாத்தியமும் கிடையாது.

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு நடைமுறையில் காணப்பட்ட நெருக்கடிகளை காட்டிலும் தற்போது கொவிட்-19 வைரஸ் தாக்கம் பாரதூரமானதாக காணப்படுகிறது. ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்தவது சாத்தியமற்றது என தெரிவிக்கப்படுகிறது.

ஆளும் கட்சிக்கும் கூட்டணியின் பங்காளி கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வை வெகுவிரைவில் பெற்றுக்கொள்வது அவசியமாகும். முரண்பாடுகளினால் அரசாங்கம் பலவீனமடைய கூடாது.

பிரதமர் தலைமையில் இடம் பெறும் பேச்சுவார்த்தை தீர்மானமிக்கதாக அiமையும் என எதிர்பார்க்கிறோம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அடுத்த மாதம் இலங்கை வருகை தரும் சீன வெளிவிவகார அமைச்சர்!

சீன வெளிவிவகார அமைச்சர் வெங் ஈ (Wang Yi), அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

வெளிவிகார அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, குறுகிய காலத்திற்குள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும்,

இரண்டாவது சீன உயர்மட்ட பிரமுகர் இவராவார்.

கடந்த வாரம், சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து, அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், நாளை மறுதினம் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த விவாதம் மீதான வாக்கெடுப்பு, அன்றைய தினம் இரவு 8 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

Posted in Uncategorized

முஸ்லிம் காங்கிரஸுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நடைபெறவில்லை – ரெலோ செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் பா. உ

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுகும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் எதுவும் இடம்பெறவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேற்று (01) அறிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெற்ற ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாதகமாக பரிசீலிப்பதாக கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் கூறினார்.

மட்டக்களப்பில் இன்று நடைபேற்ற ஊடக சந்திப்பில் (02-05-20) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு ரீதியாக நாங்கள் எந்த விதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை சிலவேளைகளில் தமிழ் அரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் அவர்களும் சாணக்கியன் அவர்களும் பேசியிருக்கலாம்,அது அவர்களுடைய தனிப்பட்ட பேச்சுவார்த்தை அல்லது விருப்பமே தவிர அது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையாக கருதமுடியாது என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஆக இருக்கும் நிசாம் காரியப்பர் முதலிலே அவருடைய கட்சியின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களிற்கு எதிராக செயற்படுவதை நிறுத்துவதற்கு அவர் முயற்சி செய்ய வேண்டும், கடந்த காலங்களில் 20வது திருத்த சட்டத்திற்கு அவர்களை வாக்களிப்பதற்கு தூண்டிவிட்டு புதினம் பார்ப்பவர்களாக இருக்க கூடாது, கட்சியின் முடிவுகளுக்கு மாறாக அவர்களது உறுப்பினர்கள் நடந்தது கொண்டால் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை கட்டுபடுத்த வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் இணைந்து ஒரு ஆட்சியை ஏற்படுத்த கூடிய நிலை வந்தால் அதனுடைய முதல் முதலமைச்சர் ஆக தமிழர் ஒருவர் வரவேண்டும் என்பதுதான் எமது விருப்பமும் எண்ணமும் ஏன் என்றால் நாங்கள் முன்பு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்து இருந்தோம், அந்த நல்லெண்ண அடிப்படையில் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தமிழர் ஒருவர் முதலமைச்சர் ஆக வருவதற்கு முஸ்லிம்கள் விட்டு கொடுக்க வேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் திமுகவின் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்

நடந்து முடிந்த தமிழக மாநில அவை தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் முதலமைச்சராக பதவியேற்கும் தலைவர் கௌரவ ஸ்டாலின் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

பலத்த போட்டிகளுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியீட்டி இருப்பது, தமிழக மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அபிமானத்தையும், எதிர்பார்ப்பினையும் எடுத்துக்காட்டுகிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கும் தாங்கள் தமிழக மக்களுக்கு மாத்திரமல்லாமல், உலகம் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் தலைவராக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஈழத் தமிழர்களாகிய நாங்கள் உங்களுடைய வெற்றியியை எமக்கான பலமாகவே கருதுகிறோம்.

முதலமைச்சராக உங்கள் மகத்தான பணி வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறோம்.

அன்புடன்
செல்வம் அடைக்கலநாதன் பா.உ
தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி: முதல்வராகிறார் ஸ்டாலின்

தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல்-06 ஆம் திகதி ஒரே கட்டமாக இடம்பெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்து 26 நாட்கள் ஆன நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளுடன் முன்னணியில் உள்ளனர்.

சற்றுமுன் நிலவரப்படி, திமுக கூட்டணி 160 இடங்களிலும், அதிமுக கூட்டணி 74 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

தி.மு.க கூட்டணி வேட்பாளர்களின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இதனால், மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார்.

பத்து ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளமையால் அக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரளத் தொடங்கியுள்ளது. அண்ணா அறிவாயத்தில் கூடிய அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் இனிப்புக்கள் பரிமாறியும், பட்டாசுகள் கொளுத்தியும், நடனமாடியும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை, முதன்முறையாக முதல்வர் இருக்கையில் அமரப் போகும் ஸ்டாலினுக்கு தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.