ஈழத்தமிழ் மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன போட்டியில் வெற்றி

ஈழத் தமிழ் மாணவன் சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

போருக்குள் பிறந்து, வளர்ந்து தாய் நிலத்தில் இருந்து அகதியாக தத்தளித்துச் சென்ற இந்த மாணவனின் சாதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் மேனகா தம்பதிகளின் மகனான அர்ச்சிகன் அமெரிக்காவில் உள்ள விண்வெளி குறித்த நிறுவனமான National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடாத்திய போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை  உள்ளடக்கி, அவரது சிந்தனையில்  உருவான  செயற்றிட்டம்  வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS) அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 19 நாடுகளில் இருந்து 26725 பங்கேற்ற  நிலையில், ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் அர்ச்சிகன் அனுப்பிய செயற்றிட்டத்தை NSS அங்கீகரித்து, அவரை வெற்றியாளராக அறிவித்துள்ளதோடு, அமெரிக்காவில் உள்ள Texas மாநிலத்தில் NSS அமைப்பின் தலைமையில் இந்த மாதம் இடம்பெறும் அறிவியல் மாநாட்டிற்கும் அவர் அழைக்கப் பட்டிருப்பதுடன், அங்கு உரையாற்றும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார்.

குறித்த மாணவன் தாயகத்திலிருந்து தனது பெற்றோருடன்  அனைத்தையும் இழந்து, அகதியாக இந்தியாவிலே தஞ்சமடைந்திருந்தார்.

இந்நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து  அர்ச்சிகனுக்கு  பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இலங்கையர்கள் எண்மர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

ஆண் ஒருவரும் 5 பெண்களும் 2 சிறார்களுமே இவ்வாறு தஞ்சம் கோரி தமிழகம் சென்றுள்ளனர்.

கிளிநொச்சியை சேர்ந்த இவர்கள் 8 பேரும் மன்னாரில் இருந்து நேற்றிரவு படகு மூலம் தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.

தமிழக கடலோர காவற்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டு தனுஷ்கோடிக்கு அழைத்துச்செல்லப்பட்டு, விசாரணைகளையடுத்து மண்டபம் முகாமில் தங்கவைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

பிரான்ஸ் செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் பிரான்சின் ரீயூனியன் தீவுக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட 38 இலங்கை பிரஜைகளும் புதன்கிழமை (25) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.

நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 2022 டிசெம்பர் 1 ஆம் திகதி ஐந்து பணியாளர்களுடன் புறப்பட்ட பலநாள் மீன்பிடி இழுவை படகு, புத்தளம் பத்தலங்குண்டுவவிலிருந்து 03 டிங்கி படகுகள் மூலம் மாற்றப்பட்ட 64 சட்டவிரோத குடியேற்றவாசிகளை டிசெம்பர் 13ஆம் திகதி ஏற்றிச் சென்றதாக கடற்படை தெரிவித்தது.

ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற குழுவினரை ஜனவரி 14ஆம் திகதி கைது செய்த அந்த தீவின் அதிகாரிகள், கைது செய்யப்பட்ட குழுவை அந்நாட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, ஜனவரி 25ஆம் திகதி அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் படகில் பணிபுரிம் 03 ஆண்கள் உட்பட 33 ஆண்களும் 18 வயதுக்கு மேற்பட்ட 02 பெண்களும், 18 வயதுக்குட்பட்ட 02 ஆண்களும் 01 பெண்ணும் உட்பட 38 பேர் அடங்குகின்றனர்.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த கடத்தலுக்கு தலைமை தாங்கிய கல்பிட்டி மற்றும் கண்டி பிரதேசங்களை சேர்ந்த ஆட்கடத்தல்காரர்கள், நபரொருவருக்கு 4 இலட்சம் ரூபாயிருந்து 10 இலட்சம் ரூபாயை வசூலித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Posted in Uncategorized

பிரான்ஸ் சென்ற 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கை பிரஜைகளை அந்நாட்டு அதிகாரிகள் விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து பல நாள் மீன்பிடி இழுவை படகில் குறித்த நபர்கள் புறப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தனிநபர்கள் குழுவில் பல நாள் மீன்பிடி கப்பலின் பணியாளர்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 43 ஆண்கள் உள்ளனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இலங்கை அகதிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இலங்கையர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கு முகவர்களால் அழைத்துச்செல்லப்பட்ட போது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 38 இலங்கையர்கள், கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று ஆரம்பித்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, அவர்களின் கடவுச்சீட்டுகள் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தினால் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றிரவு அவர்களின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தற்போது கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதால், நாடு திரும்புவதற்காக இந்திய அரசின் அனுமதிக்கு காத்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வியட்நாமிலிருந்தது நாடு திரும்பிய 151 பேரிடம் சிஐடி விசாரணை

வியட்நாம் தடுப்பு முகாமில் இருந்து விசேட விமான மூலம் இன்று வியாழக்கிழமை (28) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையம் வந்தடைந்த 151 பேரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள சிஐடியினர் பின்னர் அவர்களை விடுதலை செய்வார்கள் என பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 8 ஆம் திகதி மியான்மாரில் இருந்து சட்டவிரோதமாக இலங்கையைச் சேர்ந்த 303 பேர் கனடாவுக்கு படகில் சென்றபோது படகு கடலில் மூழ்கும் நிலையில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர் .இவர்களில் 151 பேர் மீண்டும் இலங்கை திரும்ப விரும்பம் தெரிவித்தனர்

இதனையடுத்து சர்வதேச புலம்பெயர்அமைப்பின்  அனுசரணையுடன் இன்று (28) புதன்கிழமை மியான்மாரின்  விசேட விமான மூலம் 142 ஆண்கள் 9 பெண்கள் உட்பட 151 பேர் கட்டுநாயக்க   விமான நிலையத்தினை இன்று அதிகாலை 3 மணியளவில் வந்தடைந்தனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்கள் வவுனியா கொழும்பு யாழ்ப்பாணம் உள்ளிட்டபகுதிகளை சேர்ந்த

சட்டவிரோத ஆள்கடத்தல் முகவர்கள் ஊடாக 3 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் டொலர்களை  வழங்கி இங்கிருந்து விமான மூலம் மியான்மாருக்கு சட்டபூர்வமாக சென்றடைந்துள்ளதாவும்.

பின்னர் அங்கிருந்து கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக பயணித்துள்ளதாக சிஜடி யினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணையின் பின்னர் அவர்கள் வீடுகளிற்கு செல்ல  அனுமதிக்கப்படுவார்கள் என பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்

வியட்நாமில் மீட்கப்பட்ட 151 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303  இலங்கையை சேர்ந்தவர்களில் 151 பேர் இன்று வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 8ஆம் திகதி மியான் மாரில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு இலங்கையைச் சேர்ந்த 303 பேர் பயணித்த லேடி ஆர் 3 படகில் மியான் மாரில் இருந்து தென் கடற்பரப்பு வுங் டாவ் கடற்கரையில் இருந்து 258 கடல் மையில் கடலில் படகு கடலில் மூழும் நிலையில் அங்கிருந்த ஒருவர் தொலைபேசி ஊடாக இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டதையடுத்து கொழும்பிலுள்ள கடல் சார் ஒருங்கிணைப்பு அவசர முகவரம் வியட்நாம், சிங்கபூர், பிலிப்பையின்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை இலங்கை கடற்படை நாடிய நிலையில் அந்த கடற்பகுதியில் இருந்த ஜப்பானிய கொடியிடப்பட்ட ஹீலியோஸ் லீடர் கப்பல் அவர்களை காப்பாறி வியட்நாம் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களை 3 தடுப்பு முகாமில் தடுத்துவைத்திருந்த நிலையில் உலக மீள்குடியேற்ற ஸ்தாபனமான (ஜ.எம்.ஓ) அமைப்பு அனுசரணையுடம் மீண்டு நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்த 151 பேரை இன்று செவ்வாய்கிழமை வியட்நாம் நேரப்படி இன்று பிற்பகல் 5 மணிக்கு இலங்கைக்கு செல்லும் விமானத்தில் ஏற்றுவதற்காக முகாமில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் நாளை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவர்கள் என முகாமில் இருந்து வருவதற்காக காத்திருக்கும் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்

இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் ருமேனியாவில் கைது

இலங்கையர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த 27 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் ஹங்கேரிக்குள் இரகசியமாக நுழைய முயன்ற டிரக்கொன்றை கைப்பற்றியுள்ளதாக ருமேனியாவின் எல்லை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

துணிகள் மற்றும் இரும்பு கம்பிகள் ஏற்றப்பட்ட டிரக்குகளில் மறைந்திருந்தவாறு ஹங்கேரிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நட்லாக் எல்லைபகுதியில் எல்லையை கடக்க முயன்ற டிரக்கை ருமேனிய அதிகாரிகள் சோதனையிட்டவேளை உள்ளே 16 சட்டவிரோத குடியேற்றவாசிகள் காணப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட டிரக் ஆடைகளை கொண்டு செல்கின்றது என ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்ததுஎன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

16 வெளிநாட்டவர்கள் மறைக்கப்பட்டிருந்த பெட்டியொன்றிற்குள் காணப்பட்டனர் சோதனைகளிற்கு பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் – அவர்கள் பங்களாதேஸ் எரித்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 21 முதல் 67 வயதுடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நட்லாக் எல்லையில் ருமேனிய பிரஜையொருவர் செலுத்திய வாகனத்தை சோதனையிட்டவேளை இலங்கை பாக்கிஸ்தானை சேர்ந்த 21 வயது முதல் 42 வயதுடைய 11குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

ரோஹாங்கிய அகதிகள் யாழ். சிறையிலிருந்து மீரிகான தடுப்பு முகாமிற்கு மாற்றம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து ரோஹிங்கிய அகதிகளை மீரிகான தடுப்பு முகாமுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி வியாழக்கிழமை (டிச.22) காலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 104 ரோஹிங்கிய அகதிகள் மூன்று பேருந்துகள் மூலம் மீரிகான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் மாலை வேளையில் மீரிகான தடுப்பு முகாமை சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம்  இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக  பயணித்தபோதே யாழ்ப்பாணம் மருதங்கேணி அருகே நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்தனர்.

இவ்வாறு தத்தளித்தவர்கள் 2022 டிசம்பர் 17ஆம் திகதி  இலங்கை  கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு  டிசம்பர் 18ஆம் திகதி கடற்படையினரின் படகு மூலம்  காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.

சட்டத்துக்கு புறம்பாக இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவியவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

டிசம்பர் 19ஆம் திகதி மாலை 105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான்  காயத்திரி சைலவன், 104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன் அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார். அத்துடன், நாடொன்றுக்கு 104 பேரையும் கடத்த முயற்சித்தவரை  2023 ஜனவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையிலேயே டிசம்பர் 19ஆம் திகதி இரவு 8 மணியளவில் தற்காலிகமாக 105 பேரும்  யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டு 104 பேரை மீரிகானவுக்கு அனுப்ப இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது

Posted in Uncategorized

ரோஹிங்கியா அகதிகளை காப்பாற்றிய இலங்கையர்களுக்கு ஐநா அமைப்பு பாராட்டு

ரோஹிங்கியா அகதிகளின் படகு காப்பாற்றப்பட்டதை அகதிகளிற்கான ஐநா அமைப்பான யுஎன்எச்சீஆர் வரவேற்றுள்ளது.

வார இறுதியில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ரோஹிங்கியாஅகதிகள் படகை காப்பாற்றி அதிலிருந்தவர்களை கரைக்கு கொண்டு செல்வதற்கு இலங்கையின் உள்ளூர் மீனவர்களும் கடற்படையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளை யுஎன்எச்சீஆர் வரவேற்றுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் பெருமளவானவர்களுடன் படகு தத்தளித்துக்கொண்டிருப்பதை மீனவர்கள் பார்த்தனர், காப்பாற்றப்பட்ட அவர்களை ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படை துரிதமாக கரைக்கு கொண்டு சென்றது.

இலங்கை கடற்படைக்கும் உயிர்களை காப்பாற்றுவதற்காக செயற்பட்ட அனைவருக்கும் நாங்கள் நன்றி உடையவர்களாக உள்ளோம் என ஆசியா பசுபிக்கிற்கான யுஎன்எச்சீர்ஆரின் இயக்குநர் இந்திக ரத்வத்த தெரிவித்துள்ளார்.

இது கடலில் உயிர் இழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பின்பற்றவேண்டிய மனிதாபிமானத்திற்கான உதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் உடனடி தேவைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு யுஎன்எச்சீ ஆர் அனைத்து உதவிகளையும் வழங்குகின்றது.

படகுகளில் ஆபத்தில் சிக்குண்டுள்ளவர்கள் கடலில் மிதப்பவர்களை காப்பாற்றுவதற்கு அனைத்து பொறுப்புணர்வு மிக்க நாடுகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அகதிகளிற்கான ஐநாவின் அமைப்பு சர்வதேச கடப்பாடுகள் மற்றும் மனிதாபிமான பாரம்பரியங்களின் அடிப்படையில் அவர்கள் தரைஇறங்குவதற்கும் அனுமதிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளிற்கு அருகில் வங்களா விரிகுடாவில் இன்னுமொரு படகு தத்தளிக்கின்றது என்ற தகவல் குறித்து ஐநா அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.