பிரான்ஸ் செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் பிரான்சின் ரீயூனியன் தீவுக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட 38 இலங்கை பிரஜைகளும் புதன்கிழமை (25) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.

நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 2022 டிசெம்பர் 1 ஆம் திகதி ஐந்து பணியாளர்களுடன் புறப்பட்ட பலநாள் மீன்பிடி இழுவை படகு, புத்தளம் பத்தலங்குண்டுவவிலிருந்து 03 டிங்கி படகுகள் மூலம் மாற்றப்பட்ட 64 சட்டவிரோத குடியேற்றவாசிகளை டிசெம்பர் 13ஆம் திகதி ஏற்றிச் சென்றதாக கடற்படை தெரிவித்தது.

ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற குழுவினரை ஜனவரி 14ஆம் திகதி கைது செய்த அந்த தீவின் அதிகாரிகள், கைது செய்யப்பட்ட குழுவை அந்நாட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, ஜனவரி 25ஆம் திகதி அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் படகில் பணிபுரிம் 03 ஆண்கள் உட்பட 33 ஆண்களும் 18 வயதுக்கு மேற்பட்ட 02 பெண்களும், 18 வயதுக்குட்பட்ட 02 ஆண்களும் 01 பெண்ணும் உட்பட 38 பேர் அடங்குகின்றனர்.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த கடத்தலுக்கு தலைமை தாங்கிய கல்பிட்டி மற்றும் கண்டி பிரதேசங்களை சேர்ந்த ஆட்கடத்தல்காரர்கள், நபரொருவருக்கு 4 இலட்சம் ரூபாயிருந்து 10 இலட்சம் ரூபாயை வசூலித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.