இந்திய கடற்தொழிலாளர்களின் நியாயப்படுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது – இலங்கை கடற்படை

இந்திய கடற்றொழிலாளர் கைது காரணமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தோம் என்ற இந்திய கடற்றொழிலாளர்களின் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறிலங்கா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை நாட்டின் சட்டத்துக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடற்படை தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கு கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.

இனம், மதம், மொழி என்ற அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளுமில்லாமல் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இந்திய மற்றும் இலங்கையின் உறவின் பாலமாக இந்த திருவிழா அடையாளப்படுத்தப்படுகிறது. இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதால் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக இந்திய கடற்றொழிலாளர்கள் குறிப்பிடும் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை பல ஆண்டுகாலமாக தொடர்கிறது. இதற்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். என தெரிவித்தார்.

செங்கடல் பகுதிக்கு இரகசியமாக அனுப்பப்பட்ட இலங்கைக் கடற்படைக் கப்பல்

செங்கடல் பகுதிக்கு ரோந்து நடவடிக்கைகளிற்காக மிகவும் இரகசியமாக அனுப்பப்பட்ட இலங்கை கடற்படையின் கப்பல் தனது கூட்டு ரோந்து நடவடிக்கைகளை பூர்த்திசெய்துகொண்டு இலங்கைக்கு திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பப் எல் மன்டெப் நீரிணைக்கு இலங்கை கடற்படை கப்பல் அனுப்பப்பட்டதை கடற்படை பேச்சாளர் கயன் விக்கிரமசூர்ய உறுதி செய்துள்ளதுடன்,

எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ளாமல் இலங்கை கடற்படை கப்பல் ரோந்து நடவடிக்கையை பூர்த்தி செய்துவிட்டு இலங்கை திரும்புகின்றது என தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் பின்னர் இலங்கை கடற்படை முன்னெடுத்த ஆபத்தான இந்த நடவடிக்கையின் இரகசிய தன்மை காரணமாக கடற்படை மேலதிக தகவல்களை வெளியிடவில்லை என தெரியவருகின்றது.

மீண்டும் எப்போது இலங்கை கடற்படை தனது கப்பலை அனுப்பும் என்பது குறித்து இலங்கை கடற்படை எதனையும் தெரிவிக்கவில்லை.

இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும் – ராமதாஸ் மத்திய அரசிடம் கோரிக்கை

இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்தாபகர் ராமதாஸ் இந்திய மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டது பற்றி வேதனையை பகிர்ந்துள்ள அவர் இது பற்றி கூறியிருப்பதாவது;

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 23 பேரை கச்சத்தீவு அருகே சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். அவர்களின் இரு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவையொட்டிய இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினர் அத்துமீறி நுழைந்து கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கடந்த மாதத்தில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களில் பலர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்ட நிலையில் 18 மீனவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் விடுதலை செய்யப்பட்டனர். அதற்குள்ளாகவே மேலும் 23 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை சிங்களப்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது.

அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திற்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்கள் தமிழக அரசு இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.என அவர் தெரிவித்துள்ளார்

11 இளைஞர்கள் கடத்தல் : வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு!

கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் கப்பம் பெறும் நோக்கத்தில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கியமை  தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட, தன்னை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கையையும்  மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொண்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா (தலைவர்) நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2030 இனுள் இலங்கை இராணுவத்தை பாதியாகக் குறைக்க கொள்கை ரீதியில் தீர்மானம்

எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கை இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தற்போது இரண்டு இலட்சத்தைத் தாண்டியிருக்கும் இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை பாதியாகக் குறைப்பதே அரசின் இலக்கு.

2030 ஆம் ஆண்டுக்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க உத்தேசித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் சிறிலங்கா அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே திண்டாடி வருகிறது.

அதிலிருந்து ஓரவுக்கேனும் மீளும் வகையில் முப்படையிலிருந்து ஆளணி வளத்தை குறைக்க முடிவு செய்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

மண்டைதீவில் கடற்படையினரின் காணி சுவீகரிப்புக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்மண்டைதீவு கிழக்கு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை(12) காலை 7.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் நகர்ந்து சென்று வெலிசுமன கடற்படை முகாம் முன்பாக கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்போது கடற்படை முகாம் முன்பாக பொலிஸார் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கலகமடக்கும் கடற்படையினர் தயார் நிலையில் இருந்ததுடன் கடற்படையினர் போராட்டகாரர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தின் நிறைவில் போராட்டகாரர்களுக்கு பிஸ்கட் குளிர்பானம் வழங்க வந்த கடற்படையினருக்கு பொதுமக்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது “எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ பிஸ்கட் சாப்பிடுவோம்” என கடற்படை அதிகாரியை பார்த்து காணி உரிமையாளர் பேசினார்.

போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்திய நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் வாஹிருடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் விசேட யோகா நிகழ்வு

சர்வதேச யோகா தினத்தின் 9வது பதிப்பை முன்னிட்டு இந்திய உயர் ஸ்தானிகராலயமும் உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையமும் ஒன்றிணைந்து புதன்கிழமை 21ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்தில் விசேட யோகா நிகழ்வொன்றினை ஒழுங்கமைத்திருந்தது.

யோகா தினத்தினை அனுஸ்டிப்பதற்காக 19 இந்திய கடற்படைக் கப்பல்கள் உலகளாவிய ரீதியில் பணிநிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 2023 சர்வதேச யோகா தினத்தினைக் குறிக்கும் தனித்துவமிக்க முயற்சியான பூகோள சமுத்திர வளையத்துடன் கொழும்பையும் இணைக்கும் முகமாக, இந்திய நீர்மூழ்கிக் கப்பலான வாஹிரிலும் அதற்கருகிலும் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னே, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, மேற்கு கடல் பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் பி.எஸ்.டி.சில்வா, இலங்கை கடற்படையினர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பணியாளர்கள், ஐ.என்.எஸ் வாஹிர் மாலுமிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் ஒன்றிணைந்திருந்தனர்.

இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர், இந்தியா – இலங்கை இடையிலான பொதுவான பாரம்பரியமாகக் காணப்படும் யோகாவின் நிலைமாற்று சக்தி தொடர்பாக குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் உள்ள யோகா நிறுவனங்கள் மற்றும் யோகா ஆர்வலர்களின் வலுவான ஆதரவு மற்றும் உத்வேகத்துடன் கடந்த 50 நாட்களும் இந்திய உயர் ஸ்தானிகராலயமும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையமும் இணைந்து நாடளாவிய ரீதியில் 100க்கும் அதிகமான யோகா சார்ந்த நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்ததாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

மேலும், 2023 சர்வதேச யோகா தினத்தை அனுஸ்டிப்பதற்காக ஐ என் எஸ் வாஹிர் இலங்கைக்கு மேற்கொண்டிருக்கும் விஜயம் மூலமாக நல்லெண்ணம் நட்புறவு மற்றும் தோழமையின் செய்தி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய கடற்படையின் கல்வாரி ரகத்தைச் சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் வாஹிர் அண்மையில் சேவையில் இணைக்கப்பட்டிருந்ததுடன் முதற்தடவையாக வெளிநாடொன்றின் துறைமுகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

2023 ஜூன் 19 முதல் 22 வரை இந்தக் கப்பல் கொழும்பில் தரித்து நின்ற காலப்பகுதியில் பாடசாலை மாணவர்கள், சாரணர்கள், தேசிய காலாட்படையினர், இலங்கை கடற்படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் இக்கப்பலுக்குள் விஜயம்செய்து பார்வையிட்டிருந்தனர்.

அதுமாத்திரமல்லாமல் வெளிக்கள நிகழ்வுகளாக கொழும்பைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களைச் சந்தித்திருந்த ஐ என் எஸ் வாஹிர் நீர்மூழ்கியின் மாலுமிகள், சில பாடசாலைகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற சாஹர் கோட்பாடு மற்றும் அயலுறவுக்கு முதலிடம் ஆகிய இந்திய கொள்கைகளின் அடிப்படையில் இரு அயல் நாடுகளினதும் கடற்படைகள் இடையிலான சகோதரத்துவம் மற்றும் ஒன்றிணைவினை இந்த விஜயம் மேலும் வலுவாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

PNS SHAHJAHAN எனும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கடற்படைக கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

PNS SHAHJAHAN என்பது 134.1 மீட்டர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும், இது 169 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுவதோடு இதற்கு கேப்டன் Adnan Laghari TI தலைமை தாங்குகின்றார்.

இரு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் வகையில் குறித்த கப்பல் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளது.

அத்துடன் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, குறித்த கப்பல் எதிர்வரும் 04 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறை துறைமுகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கடற்படை

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தத கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கும் வகையில் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த நடவடிக்கை பயணிகள் போக்குவரத்துத் திட்டம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தம்பாட்டி இறங்குதுறை காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாரந்தனை வடக்கு தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஊர்காவற்துறை மீனவர்களுக்கு சொந்தமான தம்பாட்டி இறங்குதுறைக்கு அண்மையில் உள்ள பகுதியில் கடற்படையினரால் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், இதனை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் குறித்த அரச காணியிலிருந்து கடற்படையினர் வெளியேறாத நிலையில், நில அளவை திணைக்களத்தினர் அந்த காணியை அளந்து கடற்படையினருக்கு வழங்குவதற்காக அங்கு சென்ற நிலையில் மக்கள் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.