கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை ரூபாவிலான கடனை உள்ளடக்க மத்திய வங்கி விருப்பம்

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை ரூபாவிலான கடனையும் உள்ளடக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கடன் வழங்குநர்களின் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பினை பெறுவதற்கான முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக இதனை கருதி மத்திய வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை மத்திய வங்கியிடம் காணப்படுகின்ற திறைசேரி உண்டியல்கள் மாத்திரமே பரிசீலிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கமும் அதன் ஆலோசகர்களும் பிரதான திறைசேரி பத்திரங்களை வைத்திருப்பவர்களுடன் ஆலோசனைகளை நடத்துவார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மொத்த திறைசேரி உண்டியல் பங்குகளில் மத்திய வங்கி 62.4 சதவீதத்தை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடனை மறுசீரமைக்கவில்லையென்றால் மாட்டிக் கொள்வோம்!

கடனை மறுசீரமைக்காவிட்டால் வருடத்திற்கு 06 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன் சுமையை பல வருடங்களாக சுமக்க நேரிடும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கடன் செலுத்துவது கடினமாக இருப்பதால், கடனை செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது மற்றும் கடனை மறுசீரமைக்க இந்த செயல்முறை பயன்படுத்தப்படுகிறது. செயல்பாட்டின் முதல் படி கடன் வழங்குபவர்களால் வழங்கப்படும் முதன்மை சான்றிதழ் ஆகும். நமது கடனை நிலையானதாக மாற்றுவதற்கான இலக்குகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆவணத்தில் உள்ளன.

அந்த நிலையான நிலையை அடைய, ஒவ்வொரு நாடும் ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளன.

நாங்கள் மீண்டும் கடன் வாங்க மாட்டோம் அல்லது செலுத்த மாட்டோம் என்பதல்ல.

கடன் வாங்கும்போது, ​​அதைத் திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இல்லையெனில், யாரும் மீண்டும் கடன் கொடுக்க மாட்டார்கள். இங்கு நடப்பது எங்களால் கடனை அடைக்க முடியாததால், செலுத்துவதில் தவறிழைக்காமல், சலுகை முறையில் செலுத்த வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்“ என்றார்.

Posted in Uncategorized

இலங்கையின் டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்தது – மத்திய வங்கி ஆளுநர்

கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்ததை தொடர்ந்து, “டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது” என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாளை (திங்கட்கிழமை) ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதியை தொடர்ந்து, “தேவையான துறைகளுக்குச் சேவை செய்ய எங்களிடம் போதுமான அந்நியச் செலாவணி உள்ளது, முதலீட்டாளர்களின் உணர்வை மேம்படுத்தி, அதிக நிதி மற்றும் முதலீடுகளுக்கான கதவுகளைத் திறக்கும்“ என தெரிவித்தார்.

இலங்கைக்கான கடனுக்கான முதல் தவணையான 390 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செவ்வாய்கிழமை வழங்கப்படவுள்ள நிலையில், கடனுக்கான அங்கீகாரம் கிடைத்தவுடன் அதனை முறையாக அங்கீகரிப்பதற்காக நாணயநிதிய சபை நாளை கூடுகிறது.

முதன்முறையாக, இந்த கடனில் அரசாங்கத்திற்கான பட்ஜெட் ஆதரவு அடங்கும், இது IMF கடனில் முற்றிலும் புதிய அங்கமாகும்.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் ஜூன் மாதத்திற்குள் கடனுக்கான முதல் மறுஆய்வு நடைபெறும் போது முடிக்கப்பட வேண்டும்.

உள்ளூர் வங்கிகள் உள்நாட்டு மறுசீரமைப்பை எதிர்க்கின்றன மற்றும் IMF உடனான பேச்சுவார்த்தைகளுக்கு வெளியில் உள்ள ஆலோசகர்களை நியமித்துள்ளன.

IMF வசதி நடைமுறைக்கு வந்ததும், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவை பட்ஜெட் ஆதரவிற்காக வரும் புதிய நிதியில் $4.5 பில்லியன் கொள்கை அடிப்படையிலான கடன்கள் மூலம் தங்கள் உறுதிப்பாட்டை மேம்படுத்தும் என்று ஆளுநர் கூறினார்.

2024 ஆம் ஆண்டில் நேர்மறையான வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் அதே வேளையில், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து பொருளாதார மீட்சி தொடங்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.

ஐஎம்எஃப் இரவு 10.30 மணிக்கு ஒரு செய்தி மாநாட்டை திட்டமிட்டுள்ளது. நாளை இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றி பேசுபவர்கள், இலங்கைக்கான மூத்த தூது தலைவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் IMF இல் இலங்கைக்கான தூது தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் பேசுவார்கள்.

கடன் மறுசீரமைப்பு முறைமை ஏப்பிரலினுள் அறிவிக்கப்படும் – மத்திய வங்கி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வணிக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த நம்புவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதிப் தொகுப்பு குறித்த முதலாவது மீளாய்வு 6 மாதங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கு முன்னர் இது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையின் டொலர் கையிருப்பு அதிகரிப்பு

2023 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2,217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது ஜனவரி 2023 இல் உத்தியோகபூர்வ கையிருப்பு மதிப்பு 2,121 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 4.5% அதிகரிப்பைக் குறிக்கிறது.

இருப்பினும், தற்போதைய உத்தியோகபூர்வ கையிருப்புகளில் சீனாவின் மக்கள் வங்கியின் நாணய பரிமாற்ற சலுகையும் அடங்கும் என்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு IMF பாராட்டு

கொள்கை வட்டி வீதங்களை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி மேற்கொண்ட தீர்மானத்தை சர்வதேச நாணய நிதியம் (IMF) பாராட்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் குறித்த தீர்மானம் பொருத்தமான நடவடிக்கை எனவும், பணவீக்க இலக்குகளின் கீழ் அமைக்கப்பட்ட தமது நோக்கங்களுக்கு ஏற்ற வகையில் இது அமைந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்றிட்டத்தின் சிரேஷ்ட பிரதானி  Peter Breuer, இலங்கைக்கான செயற்றிட்டத்தின் பிரதானி Masahiro Nozaki ஆகியோர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பணவீக்கத்தின் வீதம் குறைவடைந்து வருகின்ற போதிலும், வறிய மக்களை  பாதிக்கும் வகையில் தற்போதும் உயர் மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் பணவீக்கம் நடப்பு போக்கினை மாற்றியமமைக்கக்கூடும் என்பதுடன், பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்பதால், கொள்கை வட்டி வீதத்தை அதிகரித்தமையை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.

இந்த நடவடிக்கையானது, பணவீக்கத்தை விரைவாகக் குறைக்கும் மத்திய வங்கியின் அர்ப்பணிப்பை வௌிப்படுத்துவதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், ஒற்றை இலக்க பணவீக்கத்தை நோக்கி உறுதியாக நகர்வதை இது எடுத்துக்காட்டுவதாகவும் நாணய நிதியம் கூறியுள்ளது.

உறுதியான பணவீக்க வீழ்ச்சியானது சந்தையின் நம்பிக்கையை அதிகரிக்க உதவிபுரியும் என்பதுடன், பாரிய வணிக நிறுவனங்களுக்கும் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்குமான நிதி நிலைமைகளை இலகுபடுத்துவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதிய செயற்றிட்டத்தை இந்த மாதத்திற்குள் செயற்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நேற்றைய (03) நாணய மீளாய்வுக் கூட்டத்தின் போது நம்பிக்கை வௌியிடடமையும் குறிப்பிடத்தக்கது.

உத்தரவாதம் வழங்கியமைக்கு நன்றியை தெரிவித்தது இலங்கை

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து கடன் உதவியை பெறுவதற்கு அவசியமான உத்தரவாதத்தை வழங்கியமைக்காக இலங்கை இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அவசியமாக தேவைப்படுகின்ற 2.9 மில்லியன் டொலர் கடனுதவியை சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து பெறுவதற்கான உத்தரவாதங்களை இந்தியா வழங்கியமைக்காகவே இலங்கை நன்றி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அளுநர் இந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தெளிவான உத்தரவாதங்களை இந்தியா வழங்கியுள்ளது என நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா தேவையான அனைத்து உத்தரவாதங்களையும் வழங்கியுள்ளது இந்த கடிதத்தை அனுப்பியமைக்காக நாங்கள் முதலில் இந்திய அதிகாரிகளிற்கு நன்றியை தெரிவிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளன என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் எனினும் சீனா வழங்கிய உத்தரவாதங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

பாரிஸ் கிளப் மற்றும் சீனா உட்பட ஏனைய கடன்வழங்குநர்கள் உத்தரவாதம் வழங்கும் நிலையில் உள்ளனர் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சீனா அளித்துள்ள உத்தரவாதம் சர்வதேச நாணயநிதியத்தினை திருப்திபடுத்த போதுமானதல்ல என காணப்படும் ஊகங்கள் குறித்த கேள்விக்கு மத்திய வங்கியின் ஆளுநர் நான் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்புக்கு இணங்குமாறு சீனா, இந்தியாவிடம் கோரிக்கை

கடன் மறுசீரமைப்புக்கு உடனடியாக இணங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதற்கு குறித்த இணக்கம் அவசியமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி சீனாவும் இந்தியாவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் சிறந்தது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் டொலருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை நிறுத்தம்

வெளிநாடுகளில் பணிபுரிபவர்களினால் அனுப்பப்படும் ஒவ்வொரு டொலருக்கும் 2 ரூபாய் ஊக்கத் தொகையை இலங்கையின் மத்திய வங்கி நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முறையான வங்கி வலையமைப்புக்களின் மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவிக்க 2021ஆம் ஆண்டு டிசம்பர் முதல்; இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சட்டவிரோதமான ஹவாலா அல்லது உண்டியல் முறைகள் மூலம் பணம் அனுப்பியதை அடுத்தே இந்த முறை அறிமுகப்படுத்தபட்டது.

எனினும் எதிர்பார்த்தபடி வெளிநாடுகளின் தொழிலாளர்கள் பணத்தை வங்கிகளின் ஊடாக அனுப்பப்படவில்லை.

இதனையடுத்தே இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு அமெரிக்க டொலர் அனுப்புதலுக்கும் வழங்கப்படும் 2 ரூபாய் ஊக்கத்தொகையை நிறுத்துமாறு வங்கிகளை மத்திய வங்கி கேட்டுக் கொண்டதாக வங்கி ஒன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஊக்கத்தொகையை நிறுத்துவது தொடர்பான மத்திய வங்கியின் உத்தரவு டிசம்பர் 30ஆம் திகதி கிடைத்துள்ளதாகவும், தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் வங்கி ஒன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி அறிக்கை

உத்தேச பண வீக்கம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், பண வீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் எதிர்கால நாணய, நிதியியல் துறை கொள்கைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல், 2020ஆம் ஆண்டில் பரவிய கொரோனா தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.