உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கை ரூபாயே செல்லுபடியாகும் – இலங்கை மத்திய வங்கி

இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களை தெளிவுபடுத்தி இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் சுற்றுலாவுக்கு இந்தியா முக்கிய ஆதாரமாக இருப்பதால், வங்கி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய ரூபாயை இலங்கையில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கு செல்லுபடியாகும் நாணயமாக மாற்றாது என்பதையும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் வசிப்பவர்களுக்கிடையிலான அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் இலங்கையின் செல்லுபடியாகும் நாணயமான இலங்கை ரூபாவை மாத்திரமே பயன்படுத்த முடியும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சற்று முன் நிறைவேறியது.

அதற்கமைய ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 42 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாங்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

வங்கிகளில் வைப்பு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – மத்திய வங்கி ஆளுநர்

இலங்கையின் வங்கி அமைப்பின் மீது மேலும் சுமைகளை சுமத்தக்கூடாது என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வங்கிகளில் வைப்பு செய்த 57 மில்லியன் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் ஏற்கனவே 50 வீதத்திற்கும் அதிகமான வரிகள் மூலம் திறைசேரிக்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு செய்துள்ளதால் அவற்றின் மீது மேலும் சுமைகளை சுமத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்

ஏற்கனவே திரட்டப்பட்ட ஊழியர்சேமலாப நிதி மீது அரசாங்கம் கைவக்காது என உறுதியளித்துள்ள மத்திய வங்கி ஆளுநர்ஊழியர்சேமலாப நிதியத்திற்கு 9 வீத வட்டிக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

உள்நாட்டு கடன்மறுசீரமைப்பிற்கான நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறும்வரை ஊகங்களை தவிர்ப்பதற்காகவே அரசாங்கம் வெள்ளிக்கிழமையை வங்கி விடுமுறையாக அறிவித்தது எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஜூலை இறுதியில் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு வரும் வாய்ப்பு

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று தெளிவுபடுத்தினார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து நிதிக்கொள்கையை உறுதியாக பேண வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட மத்திய வங்கி ஆளுநர், பண வீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

எனினும், கடுமையான நிதிக் கொள்கை காரணமாக, செப்டம்பர் மாதம் 70% பண வீக்க அதிகரிப்பை தடுக்க முடிந்ததாகவும்
தற்போது மிகவும் வேகமாக பணவீக்கம் குறைவடைந்து வருவதாகவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்.

பணவீக்கம் குறைந்ததால், அதிகரித்த வட்டி வீதத்தை ஓரளவு குறைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனவரி மாதம் திறைசேரி முறிகளின் மூன்று மாத வட்டி வீதம் 33 வீதமாகக் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பணவீக்கம் மிக வேகமாகக் குறைந்து ஜூலை மாத இறுதியில் ஒற்றை இலக்கத்திற்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறினார்.

843 பொருட்களுக்கான இறக்குமதித் தடையில் தளர்வு

இலங்கை மத்திய வங்கியால் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான ‘பண வரம்பு தேவை’ (பண வரம்பு) வரம்பை நீக்கியுள்ளது.

இந்த 843 பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குவதாகவும், இந்த தீர்மானத்தினால் எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவடையும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வரவு- செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நாணயம் அச்சிட அரசாங்கம் தீர்மானம் – சம்பிக்க

கோட்டாபய – கப்ரால் சென்ற தவறான பாதையில் தற்போதைய அரசாங்கமும் செல்கிறது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நாணயம் அச்சிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடன் பெறல், நாணயம் அச்சிடல் இதனை தவிர்த்து எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 43 ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற அஸ்வெசும நலன்புரி நன்மைகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்தால் மாத்திரமே நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

திறைசேரி முறிகள் தொடர்பான சட்டமூலத்தை தற்போது அவசரமாக கொண்டு வந்துள்ளனர். இது முறையாக கலந்துரையாடப்படாது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அரசாங்கமும் முன்னாள் அரசாங்கம் போன்றே செயற்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்‌ஷ. அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டோர் சென்ற பாதையிலேயே தற்போதைய ஆட்சியாளர்கள்செல்கின்றனர்.

இவர்களால்தான் அதிகளவில் பணத்தை அச்சிடவும், அதிக வட்டி வீதத்தையும் அறவிட நேர்ந்தது. வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையையும் கடந்து நாங்கள் செல்கின்றோம். வருமானத்தை விடவும் செலவு அதிகரித்து மீண்டும் விழப் போகின்றோம்.

மத்திய வங்கி சட்டமூலத்தை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் பிற்போடப்பட்டது.மத்திய வங்கி சுயாதீனப்படுத்தப்பட்டால் அரசாங்கத்தின் விருப்பத்துக்கு அமைய திறைசேரி உண்டியல் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள முடியாது. ஆகவே அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரச மற்றும் தேசிய கடன்களை மறுசீரமைக்கும் போது சமூக கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெறும். ஆகவே சமூக கட்டமைப்பின் தோற்றம் பெறும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

90 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன

எதிர்வரும் 19ஆம் திகதியன்று ஏல விற்பனையினூடாக 90 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91நாட்களில் முதிர்வடையும் 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வடையும் 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்திற்கு விடப்படவுள்ளன.

மேலும் 364 நாட்களில் முதிர்வடையும் 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்திற்கு விடப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

மத்திய வங்கி நாணய பொறுப்பு சபையின் 15 அதிகாரிகளிடம் வாக்குமூலம்

இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போனமை தொடர்பில் நாணய பொறுப்பு சபையின் 15 அதிகாரிகளிடம் கோட்டை பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக உள்ளக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது.

இந்த 50 இலட்சம் ரூபாவினை யாராவது திருடினார்களா அவ்வாறு இல்லை எனின் நிதி கணக்கீட்டின் போது ஏதேனும் தவறு இடம் பெற்றுள்ளதா என்பது தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த பணம் வைக்கப்பட்டிருந்த மத்திய வங்கியின் மூன்றாவது மாடியானது அதி உயர் பாதுகாப்பு கட்டமைப்புடன் அமைக்கப்பட்டிருந்ததாக அறியக்கிடைத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் மாயம்

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மத்திய வங்கியின் அதிகாரிகளால் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகளையும் இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடன் மறுசீரமைப்பு ஜூன் மாதம் நிறைவு

இலங்கையின் உள்ளக மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் மீளாய்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அதற்கு முன்னர் மறுசீரமைப்புப் பணிகளை முடிக்க முடியும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இணையத்தள கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Posted in Uncategorized