ஊடகங்கள் மீது அடக்குமுறை பிரயோகிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடு

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் ஊடாக ஊடகங்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியில் உடனடியாகத் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி மக்கள் போராட்ட இயக்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடளித்துள்ளது.

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அண்மையில் அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து, அதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அதன் ஓரங்கமாக மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரதிநிதிகள் இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடளித்துள்ளனர்.

ஒளி, ஒலிபரப்பு ஒழுங்குபடுத்த சட்டத்தின் ஊடாக அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்குத் தயாராகிவருவதாகவும், எனவே இவ்விடயத்தில் உடனடியாகத் தலையீடு செய்யுமாறும் அம்முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் சானக பண்டார, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை ஓர் உறுப்புநாடு எனவும், ஆகவே மக்களின் ஜனநாயகத்தை ஒடுக்குவதற்குத் தயாராகிவரும் அரசாங்கத்தின் இந்நடவடிக்கையில் ஐ.நா உடனடியாகத் தலையிடவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

‘பொதுமக்கள் தகவல்களை அறிந்துகொள்வதற்குத் தாம் கொண்டிருக்கும் உரிமையை ஊடகங்களின் வாயிலாகவே அனுபவிக்கின்றனர். இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவரது அரசாங்கமும் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்கு முற்படுகின்றனர்’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ‘ஊடகங்கள்மீது ஒடுக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் பொதுவானதொரு கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றது. ஆனால் சர்வாதிகாரிகளால் எப்போதும் நாட்டை ஆளமுடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் அத்தகைய ஆட்சியாளர்களை மக்கள் விரட்டியடித்துவிடுவார்கள்’ என்றும் சானக பண்டார எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உணவு பாதுகாப்பின்மை இன்னமும் உயர்மட்டத்தில் உள்ளது- ஐ.நா

இலங்கையில் அனைத்து மாகாணங்களிலும் உணவுப்பாதுகாப்பில் முன்னேற்றம்ஏற்பட்டுள்ளதாக உலக உணவுதிட்டமும் ஐக்கியநாடுகளின் உணவு விவசாய ஸ்தாபனமும் தெரிவித்துள்ளன.

2023 பெப்ரவரி மார்ச் மாதம் முன்னெடுக்கப்பட்ட உணவு பயிர் பாதுகாப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐநாவின் அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன.

இலங்கையில்தற்போது 3.9 மில்லியன் மக்கள் ( 17 வீதமானவர்கள்) மிதமான மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள ஐநா அமைப்புகள் கடந்த வருடம் ஜூன் ஜூலை மாதங்களில் இது 40 வீதமாக காணப்பட்டது என தெரிவித்துள்ளன.

கடந்தவருடம் 60,000 மக்கள் மிகவும் மோசமான உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருந்தனர் தற்போது அது பத்தாயிரமாக குறைவடைந்துள்ளது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவி;த்துள்ளன.

உணவுநுகர்வில் ஏற்பட்ட முன்னேற்றமே உணவுபாதுகாப்பில் ஏறபட்ட முன்னேற்றத்திற்கு காரணம் என தெரிவித்துள்ள ஐநாவின் அமைப்புகள் உணவுவிலைகள் குறைவடைந்துள்ளமையும்,அறுவடை காலத்தில் விவசாய சமூகத்தினர் மத்தியில் காணப்பட்ட முன்னேற்றமும் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளன.

இந்த சாதகமான மாற்றம் தென்படுகின்ற போதிலும் கிளிநொச்சி நுவரேலியா மன்னார் மட்டக்களப்பு வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உணவுப்பாதுகாப்பின்மை இன்னமும் உயர்மட்டத்திலேயே உள்ளது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மலையகத்தில் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியிலேயே அதிகளவு உணவுப்பாதுகாப்பின்மை காணப்படுகின்றது எனவும் ஐநா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஜெனிவா 53ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான அழுத்தம் குறையும்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது.

எனினும், இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

நிகழ்ச்சி நிரல்களின்படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க், 19ஆம் திகதி பிற்பகலில் இலங்கை பற்றிய வாய்மொழி அறிவிப்பை வழங்குவார்.

அன்றைய தினமே அவர், ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் நிகரகுவா மற்றும் இலங்கை பற்றிய தனது எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.

முன்னதாக 2022 செப்டம்பர் 51/1 தீர்மானத்தின் கீழ், 2023 செப்டம்பர் 2023 இல் நடைபெறவுள்ள 54வது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்க இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதால், எதிர்வரும் ஜூன் மாத அறிக்கை கடுமையானதாக இருக்காது என்று ஜெனீவா தரப்பு தெரிவித்துள்ளது.

2022இல் ஐக்கிய நாடுகளின் மனிதை உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51-1 தீர்மானத்தின்போது 20 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.20 நாடுகள் வாக்களிக்கவில்லை.

இந்த தீர்மானத்தின்படி, இலங்கையில் நல்லிணக்கத்தில் முன்னேற்றம் உட்பட மனித உரிமைகள் நிலைமையை கண்காணிப்பதற்கும் அறிக்கையிடுவதற்கும் உயர் ஸ்தானிகர் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மீதான பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் தாக்கம் மற்றும் மனித உரிமைகள் பேரவைக்கு அதன் ஐம்பத்து மூன்றாவது மற்றும் ஐம்பத்தி ஐந்தாவது அமர்வுகளில் வாய்வழி புதுப்பிப்பை வழங்குதல், ஐம்பத்து நான்காவது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதன் ஐம்பத்தி ஏழாவது அமர்வில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான கூடுதல் விருப்பங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கை என்பன இந்த தீர்மானத்தின்படி வலியுறுத்தப்பட்டுள்ளன.

சக மனிதர்களிடம் மனிதாபிமானத்தை பின்பற்றுங்கள்; வெசாக் செய்தியில் ஐ.நா செயலாளர் நாயகம் வலியுறுத்து

உலகளாவிய ரீதியில் பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் கௌதம புத்தரின் போதனைகளான சகிப்புத்தன்மை, கருணை, மனிதாபிமானம் ஆகிய பண்புகளை பின்பற்றி நடப்பது இன்றியமையாததாகும் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கௌதம புத்தரின் பிறப்பு மற்றும் பரிநிர்வாணமடைதலைக் குறிக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கும் அவர், இத்தினத்தை கொண்டாடுவதன் நோக்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகளுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கிடையிலான புரிந்துணர்வு, நிலையான அமைதி மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் என்பனவே அவையாகும் என்றும் அன்ரோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் பொதுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் கௌதம புத்தரின் போதனைகளான சகிப்புத்தன்மை, கருணை, மனிதாபிமானம் ஆகியவற்றை பின்பற்றுவது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி அனைவரும் வாழ்வதற்கு ஏற்புடைய அமைதியானதும் சமாதானமானதுமான உலகத்தை கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சிறுபான்மையினரை இலக்கு வைக்க உதவும்

தற்போதைய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கண்டனங்கள் எழுந்ததை தொடந்து அரசாங்கம் முன்னேற்றகரமான சட்டத்தை கொண்டுவருவதாக உறுதியளித்தது,ஆனால் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு பதில் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலம் பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணத்தை அதிகரித்துள்ளது ஒன்றுகூடல் கருத்துசுதந்திரம் ஆகியவற்றிற்கான உரிமைகளை கட்டுப்படுத்துகின்றது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அமைதியான விதத்தில் தன்னை விமர்சிப்பவர்களையும் சிறுபான்மை சமூகத்தவர்களையும் இலக்குவைப்பதற்கான கடுமையான சட்டங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

உடன்படமறுப்பவர்கள் மீதான அரசாங்கத்தின் ஒடுக்குமுறையும் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்துவைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தற்போதைய பயங்கரவாத தடை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதும் உத்தேச சட்டம் மூலம் உள்ள ஆபத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நிறுவுமாறு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தல்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை முன்னிறுத்தி சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நிறுவுவதன் அவசியம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான சர்வதேச நாடுகளின் தூதுவர்களிடம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், அது இன்றுடன் முடிவுக்கு வருகின்றது.

அந்தவகையில் பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழர் நடவடிக்கைக்குழு மற்றும் சுவிஸ்லாந்து தமிழர் நடவடிக்கைக்குழு ஆகிய புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான சர்வதேச நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரஇறுதியில் நடைபெற்றது.

இதன்போது இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணைகள், மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிரான தடைவிதிப்பு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுவதற்கான சாத்தியப்பாடு, அரசியல் தீர்வு ஆகிய விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வை வழங்குதல் மற்றும் இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை முன்னிறுத்தி சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் இதன்போது வலியறுத்தப்பட்டது.

நல்லிணக்க ஆணைக்குழு அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டமூலத்தை உருவாக்குவதற்கு அனுமதி கோரி சமர்ப்பித்த பத்திரத்திற்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கோரும் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை உருவாக்கும் மற்றுமொரு முயற்சியாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இதேபோன்ற பொறிமுறையை மாதிரியாகக் கொண்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க தேர்மனைக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சரும் வெளிவிவகார அமைச்சரும் தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தனர்.

யுத்தத்திற்குப் பிந்தைய சூழலில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அத்தகைய அமைப்பின் நன்மைகள் தீமைகள் குறித்து இருவரும் அங்கு கலந்துரையாடியுள்ளனர்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் 21 உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும் இவர்கள், பாதிக்கப்பட்ட மக்களின் வழக்குகளை விசாரிக்க தனித்தனி பெஞ்ச்களில் செயல்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் ஐ.நா இலங்கைக்கு கடும் அழுத்தம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்து அதற்கு மாற்றீடாக பயங்கரவாதம் தொடர்பான குறுகிய வரையறைகளை உள்ளடக்கிய சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைவாக புதிய சட்டங்களை வகுக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை அரசாங்கத்திடம் ​கோரிக்கை விடுத்துள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டின் போது இலங்கையின் ஆறாவது அறிக்கையை மீளாய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் இறுதி அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரிஸ் கழகத்தின் கோட்பாடுகளுக்கு இணங்கி பணியாற்றுதல், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான நியமனங்களை வெளிப்படைத்தன்மையுடன் வழங்குதல், பொறுப்புகளை நேர்த்தியான முறையில் நிறைவேற்றுவதற்குத் தேவையான விடயங்களை மேற்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு அமைய, ஒன்பதாவது சரத்தின் பிரகாரம், பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையை பரிசோதிப்பதற்காக, அவர்களை தடுத்து வைத்துள்ள இடங்களை சுயாதீனமாக கண்காணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

போர்க்குற்ற விவகாரம் – ஐ. நா. மனித உரிமைகள் மீளாய்வுக்குழு கடும் அதிருப்தி

நாட்டில் ஆயுதமோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் பதிவான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதில் நிலவும் தாமதம் குறித்து தவிர கரிசைனை வெளிப்படுத்தியிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு, அக்காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் கடந்த 7 ஆம், 8 ஆம் திகதிகளில் நடைபெற்றது.இம்மீளாய்வின்போது இலங்கை தொடர்பில் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் எதிர்வருங்காலங்களில் இலங்கையால் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய பரிந்துரைகள் என்பவற்றை உள்ளடக்கிய 12 பக்க இறுதி அறிக்கை மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவினால் வியாழக்கிழமை (24) வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை அரசாங்கத்தினால் 2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க காணாமல்போனோர் பற்றிய அலுவலகச்சட்டம், 2017 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் சட்டம், 2017 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான சட்டம், 2018 ஆம் ஆண்டு 34 ஆம் இலக்க இழப்பீட்டுக்கான அலுவலகச்சட்டம், 2018 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயம், 2022 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க காணி அபிவிருத்திச்சட்டம் ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று கடந்த 2016 ஆம் ஆண்டு வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயம் மற்றும் விசேட தேவையுடையோரின் உரிமைகள் தொடர்பான பிரகடனம் ஆகியவற்றிலும், கடந்த 2017 ஆம் ஆண்டு சித்திரவதைகள் மற்றும் ஏனைய மிகக்கொடூரமானதும் மனிதத்தன்மையற்றதுமான தண்டனைகளுக்கு எதிரான பிரகடனத்திலும் இலங்கை இணைந்துகொண்டமையை மனித உரிமைகள் மீளாய்வுக்குழு வரவேற்றுள்ளது.

அதேவேளை இலங்கையில் தொடர்பான மீளாய்வின்போது அடையாளங்காணப்பட்ட கரிசனைக்குரிய விடயங்கள் மற்றும் அவற்றை நிவர்த்திசெய்வதற்கு அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவேண்டிய பரிந்துரைகளின் சுருக்கம் வருமாறு:

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியலமைப்பு மறுசீரமைப்புச்செயன்முறையில் தொடரும் தாமதம் மற்றும் அதன் தற்போதைய நிலைவரம் குறித்து போதியளவு தகவல்கள் இல்லாமை என்பன கரிசனையைத் தோற்றுவித்துள்ளன.

எனவே அரசாங்கம் அதன் அரசியலமைப்பு மறுசீரமைப்புச்செயன்முறையை முழுமையாகப் பூர்த்திசெய்வதுடன், அதனூடாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதும் நிறைவேற்றதிகாரத்துக்கும் ஏனைய கண்காணிப்புக்கட்டமைப்புக்களுக்கும் இடையிலான நேர்த்தியான கடப்பாடு பேணப்படுவதும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

அதேபோன்று மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் எதிர்காலத் திருத்தங்கள் ஊடாக இம்மறுசீரமைப்புக்கள் தன்னிச்சையான முறையில் நீக்கப்படாமலிருப்பதையும் உறுதிப்படுத்தவேண்டும்.

அடுத்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை மற்றும் செயற்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ள போதிலும்கூட, உறுப்பினர்கள் நியமனத்தில் போதியளவு வெளிப்படைத்தன்மையும், பல்வகைமையும் பேணப்படாமையைக் காரணமாகக்கூறி தேசிய மனித உரிமைகள் கட்டமைப்புக்களின் உலகளாவிய கூட்டணியினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ‘பி’ நிலைக்குத் தரமிறக்கப்பட்டமை குறித்துக் கவலையடைகின்றோம்.

ஆகவே மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான தேசிய கட்டமைப்புக்களுக்குரிய நியமங்களுக்கு அமைவாக மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படுவதை உறுதிப்படுத்தவேண்டு;ம்.

மேலும் நாட்டில் ஆயுதமோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் பதிவான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதில் நிலவும் தாமதம் குறித்துத் தீவிர கரிசனை கொண்டிருக்கின்றோம்.

நாட்டின் உள்ளக சட்டங்கள் போர்க்குற்றங்களையும், மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களையும், இனப்படுகொலையையும் குற்றமாக வரையறுக்காமை கவலைக்குரிய விடயமாகும்.

போர்க்குற்றங்கள் இடம்பெற்றமைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ள போதிலும், கடந்த 2006 – 2009 ஆம் ஆண்டுக்கிடையில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கவில்லை என இராணுவ நீதிமன்ற விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளமையும், வவுனியாவில் இயங்கிய ஜோசப் முகாமில் இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் என்பன தொடர்பில் இன்னமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படாமையும் கரிசனைக்குரிய விடயங்களாகவே இருக்கின்றன.

அதேபோன்று நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் விசாரணை செயன்முறைகளில் அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்புத்தரப்பினரால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள், தலையீடுகள் குறித்து விசனமடைகின்றோம்.

அத்தோடு போர்க்குற்றங்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் முக்கிய நியமனங்கள் மற்றும் பதவியுயர்வுகள் என்பன தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஆயுதமோதலின்போது இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்படல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தவேண்டும் என்று மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இறுதி அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை சர்வதேச சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவான சட்டமொன்றின் ஊடாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் பாலினத்தை அடிப்படையாகக்கொண்ட மனித உரிமை மீறல்களை முடிவுக்குக்கொண்டுவரல், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், மரணதண்டனையை இல்லாதொழித்தல், அவசரகாலநிலையை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தல், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தைப் பாதுகாத்தல், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்களிலும் அரசாங்கம் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இல்லை –

இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மை அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் ஏற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பது குறித்த மீளாய்வுக்கூட்டத்தில் குறித்த குழு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்தோடு அரச அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் கொண்டிருந்த நிபுணத்துவத்தின் அடிப்படையில் அதற்கு தகுதி பெற்றிருந்தார்கள் என்றும் ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

மேலும் பாலின சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் உள்ளிட்ட பல அபிவிருத்திகள் இலங்கைக்குள் இடம்பெற்றுள்ளதாகவும் அனைத்து மக்களுக்குமான மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

21 ஆவது திருத்தும் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனநாயக ஆட்சி, முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வை, அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் அமைப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.