ஏழை நாடுகள் கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு ஐ.நா கோரிக்கை

ஏழை நாடுகளுக்கு கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்குமாறு உலக நிதி அமைச்சர்களிடம் ஐநா வளர்ச்சித் திட்டம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு 25 குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தங்கள் வருவாயில் 20 சதவீதத்தை கடன் சேவைக்காக செலவிட்டதாக அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு, கடன் சுமை தாங்க முடியாததாகிவிட்டது என்றும் ஐநா வளர்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் அச்சிம் ஸ்டெய்னர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று, பணவீக்கம் மற்றும் கடன் வாங்கும் செலவுகளின் அடுத்தடுத்த எழுச்சி 165 மில்லியன் மக்களை வறுமையில் தள்ளியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

உலக மக்கள்தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர், சுமார் 1.65 பில்லியன் பேர் ஒரு நாளைக்கு 3.65 டொலருக்கும் குறைவாகவே செலவு செய்கின்றார்கள் என கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிட்டளவு மக்களுக்கு உணவை பெற்றுக்கொள்வதில் கூட பாரிய சவால்கள் காணப்படுவதாகவும் ஐநா வளர்ச்சித் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் வறுமையின் அதிகரிப்பு ஆபத்தானது என சுட்டிக்காட்டிய ஸ்டெய்னர், வறுமையில் உள்ள 165 மில்லியன் மக்கள் அனைவரும் குறைந்த அல்லது குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் – மன்னிப்புச் சபை

நாட்டின் அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை இந்த விடயம் தொடர்பாக வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், நாட்டில் வீழ்ச்சியடைந்த வருமானம், வாழ்வாதார இழப்பு மற்றும் பணவீக்கம் என்பன, பெண்களின் கொள்வனவு திறனைக் குறைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்வழி ஊட்டச்சத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்ட, அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தீவிரம் காரணமாக, சுகாதாரம் மற்றும் போஷாக்கு என்பன பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே, கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

எனவே, அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் குறித்த சபை மேலும் வலியுறுத்தியுள்ளது.

Posted in Uncategorized

குருந்தூர் மலை ஆதிசிவன் ஆலய கற்பூரத்தீயை சப்பாத்துக் காலால் மிதித்து அணைத்து பொலிஸாரும், சிங்கள இனவாதிகளும் அடாவடி

முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுக்கு சென்ற தமிழ் மக்கள் பெரும் களேபரத்தின் மத்தியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மலையிலிருந்து மக்களை கீழே இறக்குவதற்கு பொலிசார் பலப்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பொலிசாரால் தாக்கப்பட்டதாகவும், தள்ளிவிழுத்தப்பட்டதாகவும் பலர் குற்றம்சுமத்தினர்.

குருந்தூர் மலையில் பொலிசார், விசேட அதிரப்படையினரின் பாதுகாப்பின் மத்தியில் சிங்கள இனவாதிகளும், பிக்குகளும் ஆடிய சன்னத்தினால் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவும் கணக்கிலெடுக்கப்படவில்லை.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

பொங்கல் விழாவுக்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது.

இன்று காலையில் பொங்கல் விழாவுக்காக தமிழ் மக்கள் சென்றபோது, அங்கு சிங்கள கடும்போக்காளர்கள் பலர் அழைத்து வரப்பட்டிருந்தனர். பௌத்த பிக்குகளும் குவிந்திருந்தனர். வெளியிடங்களில் இருந்து 2 பேருந்துகள் மற்றும் வாகனங்களில் அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள். க.சிவனேசன், பா.கஜதீபன், து.ரவிகரன் உள்ளிட்டவர்களும் அங்கு சென்றிருந்தனர்.

பொங்கலுக்கான ஆயத்தங்கள் மேற்கொண்ட போது, அங்கு தீமூட்டி பொங்கல் செய்ய முடியாது என சிங்கள இனவாத தரப்பினர் மிரட்டல் விடுத்தனர். பிக்குகளும் சன்னதமாடினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இரு தரப்பும் மோதுவதை போன்ற சூழல் ஏற்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே பொங்கல் வழிபாட்டுக்கு வந்துள்ளதாக தமிழ் மக்கள் தெரிவித்த போதும், அதை சிங்கள இனவாத தரப்பினர் கிஞ்சித்தும் கணக்கிலெடுக்கவில்லை.

தொல்பொருள் திணைக்கள பிரதிநிதியொருவர் பிரசன்னமாகியிருந்தார். அவரும் பொங்கல் மேற்கொள்ள முடியாது என்றார்.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று, நீதிமன்ற அனுமதியுடனேயே பொங்கலுக்கு வந்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவனேசன் சுட்டிக்காட்டினார். அத்துடன், பொங்க முடியாது என்றால் அதை எழுத்துமூலம் தருமாறு கேட்டார்.

இதையடுத்து சுருதியை மாற்றிய தொல்பொருள் திணைக்கள பிரதிநிதி, கட்டுப்பாடுகளுடன் பொங்கல் செய்யலாம் என்றார்.

நிலத்தில் தீ மூட்டாமல், நிலத்தில் கல் வைத்து அதன் மேல் தகரம் வைத்து, அதன்மேல் கல் வைத்து தீமூட்டுமாறு கூறினார்.

தொல்பொருள் திணைக்களத்தினரின் அறிவுறுத்தலின்படி, தகரத்தின் மீது பொங்கல் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. தீமூட்ட தயாரான போது, மீண்டும் சிங்கள இனவாத தரப்பினரும், பிக்குகளும் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

அப்போது முல்லைத்தீவு பொலிசார் அடாத்தாக செயற்பட்டு, பொங்கலுக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளை சிதைத்தனர். பொலிஸ் அதிகாரியொருவர் சப்பாத்து காலால் கற்பூர தீயை மிதித்து அணைத்தார்.

மலைக்கு கீழே பொங்கி, பொங்கலை எடுத்து வந்து மேலே படையல் செய்யலாம் என பொலிசார் கடுமையான நிபந்தனை விதித்தனர். எனினும், தமிழ் மக்கள் அதை ஏற்கவில்லை. குருந்தூர் தலையில் தமக்குள்ள வழிபாட்டு உரிமையை சுட்டிக்காட்டினர்.

எனினும், பொலிசார் பொங்கலுக்கு அனுமதியளிக்கவில்லை.

பொலிசார், விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

பின்னர் பொங்கலுக்கு சென்ற தமிழ் தரப்பினர் அனைவரையும் மலையிலிருந்து கீழே இறங்கி செல்லுமாறு பொலிசார் கட்டளையிட்டனர். அதே சமயத்தில், இன்று குழப்பத்தில் ஈடுபட்ட சிங்கள தரப்பினர், சட்டவிரோத விகாரை பகுதியில் பொலிசாரின் பாதுகாப்பில் தங்கியிருந்தனர்.

தமிழர்களுக்கு ஒரு சட்டம், சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா என கேள்வியெழுப்பிய தமிழ் தரப்பினர்,அங்கு கூடி, சிறிய மத அனுட்டானத்தில் ஈடுபட்டனர்.

சிங்களவர்களையும் மலையிலிருந்து இறக்கினாலே நாமும் இறங்குவோம் என பொங்கலுக்கு சென்ற தமிழ் தரப்பினர் குறிப்பிட்டனர். இதையடுத்து, பொலிசார் பலப்பிரயோகத்தை மேற்கொண்டு, தமிழ் தரப்பினரை மலையிலிருந்து கீழே இறக்கினர்.

இதன்போது, பலரை பொலிசாரால் பலவந்தமாக தள்ளினர். சிலர் தாக்கப்பட்டனர். அண்மையில் முல்லைத்தீவில் முஸ்லிம் காங்கிரசின் தராசு சின்னத்தில் இணைந்து உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பீற்றர் இளஞ்செழியன் என்ற இளைஞன் தாக்கப்பட்டு, இரத்தம் வழிந்த நிலையலிருந்தார்.

வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனும், து.ரவிகரனும் தள்ளிவிழுத்தப்பட்டனர். இதனால் தமது காலில் உபாதையேற்பட்டுள்ளதாக கஜதீபன் குறிப்பிட்டார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான உத்தரவாதம் என்ன? – பொது அமைப்புக்கள் கேள்வி

இலங்கையின் கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், புதிதாக ஸ்தாபிக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதம் என்ன? வெளிப்படையாக பேசும் பாதிக்கப்பட்ட தரப்பினர் பலதரப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவரும் பின்னணியில், அவர்களை மீண்டுமொரு முறை ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு கோருவது நியாயமானதா என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசாங்கம் ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டிருக்கும் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (11) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வகையிலான கூட்டறிக்கையொன்றை பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, மனித உரிமைகள் அபிவிருத்திக்கான நிலையம், சட்டம் மற்றும் மனித உரிமைகள் நிலையம், முஸ்லிம் பெண்கள் அபிவிருத்திப் பேரவை, சமத்துவத்துக்கான யாழ். சிவில் சமூகம் உள்ளிட்ட 15 சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து வெளிவிவகார அமைச்சரிடம் கையளித்தன.

அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம்.

சமூகங்கள், குறிப்பாக உள்நாட்டுப் போரினால் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் சமூகங்கள் எதிர்கொண்ட மீறல்கள் மற்றும் துயரங்களை தீர்ப்பதில் உண்மை கண்டறிதல் முக்கிய பங்கு வகிக்கின்றது என நாம் நம்புகின்றோம்.

இருப்பினும், இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்படும் எந்தவொரு ஆணைக்குழு அல்லது நியாய சபையிலும் பாதிக்கப்பட்ட சமூகம் நம்பிக்கையற்றதாக காணப்படுகிறது.

இவ்விடயத்தில் கடந்தகால அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையும் உண்மையை கண்டறியும் செயன்முறை மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் இழைத்தோரை பொறுப்புக்கூறச் செய்யும் செயன்முறை ஆகியவற்றை இழுத்தடிக்கும் நோக்கம் கொண்டதாகவே அமைந்திருந்தது.

வெவ்வேறு அரசாங்கங்களினால் கடந்த 30 வருடகாலமாக உருவாக்கப்பட்டுவரும் ஆணைக்குழுக்களின் வரிசையில் இப்போது புதிதாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் இணைந்திருக்கின்றது. கடந்தகால ஆணைக்குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளில் பெரும்பாலானவை இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை.

அவ்வாறிருக்கையில், புதிதாக ஸ்தாபிக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதம் என்ன? வெளிப்படையாக பேசும் பாதிக்கப்பட்ட தரப்பினர் பலதரப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவரும் பின்னணியில், அவர்களை மீண்டுமொரு முறை ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு கோருவது ஏற்புடையதா?

பாரிய மனிதப் புதைகுழிகள் கண்டறியப்படுவது இலங்கையில் வருடாந்தம் இடம்பெறும் நிகழ்வாக மாறிவிட்டது. இதுகுறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைகளை மேற்கொள்வதற்கான முனைப்பு எதுவும் அரசாங்கத்திடம் இல்லை.

இதுகுறித்த விசாரணைகளுக்கு அவசியமான நிபுணர் குழுவொன்றை அமைத்து, அவசியமான நிதியை ஒதுக்கீடு செய்து, விசாரணை செயன்முறைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, அவற்றுக்கு இடையூறு விளைவிப்பதே அரசாங்கத்தின் வழமையான செயற்பாடாகக் காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் பொதுமக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதில் அரசாங்கம் அக்கறை செலுத்துமேயானால், முன்னைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டமொன்றை தயாரித்தல், பாதிக்கப்பட்ட தரப்பினர் மீண்டும் வாக்குமூலம் வழங்குவதை தவிர்க்கும் வகையில் முன்னைய ஆணைக்குழுக்களிடம் வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை தொகுத்தல், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவித்தல், வடக்கில் நிலவும் மிதமிஞ்சிய இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்தல், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை மீளாய்வு செய்தல், இதன்போது ஆலோசனை செயலணி முன்வைத்த பரிந்துரைகளை கவனத்திற்கொள்ளல், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் பாரிய மனிதப்புதைகுழிகள் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறுபட்ட விரிவான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்.

இவற்றை நடைமுறைப்படுத்தாமல் அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குமேயானால், அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். பாதிக்கப்பட்ட தரப்பினர் நீண்டகாலமாக போராடி பெற்றுக்கொண்ட சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகளுக்கு தென்னாபிரிக்கா ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு செயல்முறையுடனான இலங்கையின் ஈடுபாட்டிற்கு பிரித்தானியா வரவேற்பு

மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு செயல்முறையுடன் இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை பிரித்தானியா வரவேற்றுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கைக்கான உலகளாவிய காலமுறை மீளாய்வுக்கான அறிக்கையை வெளியிட்டு பிரித்தானியா இதனை தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கில் அரசாங்கத் திணைக்களங்களால் நில அபகரிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான கவலைகள் தொடர்பான தனது பரிந்துரைக்கு இலங்கையின் ஆதரவையும் பிரித்தானியா வரவேற்றுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் இலங்கை எதிர்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை பிரித்தானியா ஏற்றுகொண்டது.

அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முக்கியத்தும் மற்றும் ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தையும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நீதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கும் இலங்கையுடன் ஆக்கபூர்வமாகச் செயற்படுவதாகவும் பிரித்தானியா மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் – சட்டத்தரணிகளுக்கான சர்வதேச அமைப்பு ஐ.நாவில் சுட்டிக்காட்டு

இலங்கையில் சட்டத்தரணிகள் மட்டுமீறிய அளவில் அத்துமீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியிருக்கும் சட்டத்தரணிகளின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் சர்வதேச அமைப்புக்கள், சட்டத்தரணிகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும், அவர்களது தொழில்சார் நடவடிக்கைகளில் ஏற்படுத்தப்படும் இடையூறுகளை முடிவுக்குக்கொண்டுவருமாறும் வலியுறுத்தியுள்ளன.

ஜெனீவாவில் கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமர்வில், இலங்கை தொடர்பில் சட்டத்தரணிகளின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் சர்வதேச அமைப்புக்களான சட்டத்தரணிகளுக்கான சட்டத்தரணிகள் மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிலையம் என்பன இணைந்து வாய்மொழிமூல அறிக்கையொன்றை வெளியிட்டன. இவ்வமைப்புக்களின் சார்பில் பேரவையில் உரையாற்றிய ஜுலியா ஸ்மக்மென் சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு:

ஐக்கிய நாடுகள் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் சட்டத்தரணிகள் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளுக்கு ஏதுவான பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்துவதன் அவசியம் என்பவற்றுடன் தொடர்புபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக்கொண்டிருப்பதனை நாம் வரவேற்கின்றோம்.

அதேபோன்று, சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

அதேவேளை, சுயாதீனமான சட்டத்தொழில்வாண்மையாளர் ஊடாக சட்டரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான இயலுமை என்பது சட்டத்தின் ஆட்சி மற்றும் செயற்திறனாக இயங்கும் நீதிப்பொறிமுறை ஆகியவற்றின் அடிப்படைக்கூறுகளாகும்.

அதன்படி, எவ்வித இடையூறுகளோ, அத்துமீறல்களோ, அடக்குமுறைகளோ அல்லது முறையற்ற தலையீடுகளோ இன்றி தமது தொழில்சார் கடமைகளை முன்னெடுப்பதற்கான இடைவெளி சட்டத்தரணிகளுக்கு இருக்கவேண்டும்.

இருப்பினும், இலங்கையைப் பொறுத்தமட்டில் சட்டத்தரணிகள் மட்டுமீறிய அளவில் அத்துமீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். குறிப்பாக போராட்டக்காரர்களின் உரிமைகள் மற்றும் சிறுபான்மையின உரிமைகள் போன்ற அரசியல் ரீதியில் உணர்திறன்வாய்ந்த வழக்குகளில் இயங்கும் சட்டத்தரணிகள் இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர்.

அதேபோன்று, சட்டத்தரணி என்ற ரீதியில் தமது பணியை மேற்கொண்ட சட்டத்தரணிகள் அதனுடன் தொடர்புபட்ட வகையில் கைதுகளுக்கும் குற்றவியல் விசாரணைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் வலுகட்டாயமாகக் கைதுசெய்யப்பட்டமையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அவரது வழக்கு விசாரணைகளின் சுயாதீனத்தன்மை குறித்து நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும், தொடர் தாமதமின்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.

அதேபோன்று, சட்டத்தரணிகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களது தொழில்சார் நடவடிக்கைகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராக உரிய பாதுகாப்பை வழங்குமாறும் கோருகின்றோம் என்று குறிப்பிட்டார்.

காலாந்தர மீளாய்வுக்குழுவின்115 பரிந்துரைகளை இலங்கை ஏற்கவில்லை : மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை விசனம்

ஐக்கிய நாடுகள் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் மரண தண்டனையை ஒழித்தல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட 115 பரிந்துரைகளை இலங்கை ஏற்காமை குறித்துக் கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை, இம்மீளாய்வுக்குழுவின் அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழுவானது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த 4 ஆவது மீளாய்வினைக் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மேற்கொண்டிருந்தது.

இம்மீளாய்வின்போது கண்டறியப்பட்ட விடயங்களையும், மனித உரிமைகள் பாதுகாப்பை முன்னிறுத்தி இலங்கை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய 294 பரிந்துரைகளையும் உள்ளடக்கிய 24 பக்க அறிக்கை கடந்த மாத நடுப்பகுதியில் வெளியாகியிருந்தது.

அதன்படி கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரின் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமர்வில், இலங்கை தொடர்பான உலகளாவிய காலாந்தர மீளாய்வு அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

இதன்போது பேரவையில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக, உலகளாவிய காலாந்தர மீளாய்வு அறிக்கையில் மொத்தமாக உள்ளடக்கப்பட்டுள்ள 294 பரிந்துரைகளில் 173 பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாகவும், 115 பரிந்துரைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதாகவும் (ஏற்றுக்கொள்ளவில்லை), 6 பரிந்துரைகளை நிராகரிப்பதாகவும் அறிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவையும், இலங்கையிலுள்ள அதன் பங்காளி அமைப்பான மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையமும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:

உலகளாவிய காலாந்தர மதிப்பீட்டு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை வெளிக்காட்டியுள்ள துலங்கல் அதிருப்தியளிக்கின்றது.

குறிப்பாக இலங்கை ‘அவதானம் செலுத்துவதாகக்’ கூறியுள்ள அனைத்துப் பரிந்துரைகளும் பெரும்பாலும் மரண தண்டனையை முற்றாக இல்லாதொழித்தல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுடன் தொடர்புபட்டவையாக உள்ளன.

அதுமாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1, 46ஃ1 மற்றும் 51ஃ1 ஆகிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை இலங்கை நிராகரித்திருப்பது தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது.

இருப்பினும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளல் என்பன தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

ஆனால் அண்மையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்திலும் கரிசனைக்குரிய சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் அவை சர்வதேச சட்டங்களின் பிரகாரம் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையவில்லை.

அதுமாத்திரமன்றி பெரும்பாலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் சரத்துக்களுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவுக்குக்கொண்டுவருமாறும், நியாயமான வழக்கு விசாரணைகளுக்கு உட்படுவதற்கான உரிமைக்கு மதிப்பளித்து, அதனை உறுதிப்படுத்துமாறும் இவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் உலகளாவிய காலாந்தர மீளாய்வைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தும் அதேவேளை, சர்வதேச சட்டத்துக்கு அமைவாக இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக மார்க்-ஆண்ட்ரே

இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக கனடாவைச் சேர்ந்த மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சேவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ், நியமித்துள்ளார்.

24 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றியுள்ள மார்க்-ஆண்ட்ரே கடந்த 8 ஆம் திகதி அமுலாகும் வகையில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், லிபியாவில் ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றியிருந்தார்.

2016 மற்றும் 2021 க்கு இடையில், அரசியல் மற்றும் அமைதியை கட்டியெழுப்பும் விவகாரங்கள் திணைக்களத்தில் சமாதானத்தை கட்டியெழுப்பும் ஆதரவு அலுவலகத்திலும் அவர் பணியாற்றி இருந்தார்.

Posted in Uncategorized

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ஆய்வு ஐ.நா பிரதிநிதிகள் முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன் வேண்டுகோள்

கொக்கு தொடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புதைகுழி ஆய்வாராய்ச்சியானது, மனித உரிமை பேரவையில் இயற்றப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையிலே அதற்கான சாட்சியங்களை திரட்டுகின்ற பொறிமுறையின் அடிப்படையில் அதன் பிரதிநிதிகள் முன்பாக இந்த அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புதைகுழிகள் அகழ்வு ஊடாக பல மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது கடந்த காலத்தில் குற்றச்சாட்டப்பட்ட வகையிலே யுத்தத்தின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற பல விடயங்களிற்கு சாட்சியமாக விளங்குகின்றது.

மனித உரிமை பேரவையில், மனித உரிமை உயர்தானிகராலும் இந்த யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்களிற்கான சாட்சியங்களை பதிவு செய்கின்ற ஒரு பொறிமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த அகழ்வாராய்ச்சி என்பது மனித உரிமை உயர்தானிகர் அல்லது ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதிகள் முன்பாகவும் இந்த சாட்சியங்களிற்கான அலுவலகம் திறக்கப்பட்டு இதற்கான உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாரிய நிதி ஒதுக்கீட்டினையும் ஐ.நா செய்துள்ளது.

ஆகவே அவர்களையும் வைத்துக்கொண்டு இந்த அகழ்வாராச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலமே, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்தவர்களின் தோண்டியெடுக்கப்படும் மனித புதைகுழிகளின் விபரங்களை சரியான முறையில் பதிவு செய்ய முடியும்.

குறிப்பாக கொக்குத் தொடுவாய் என்பது தமிழ் மக்கள் பூர்விகமாக வாழ்ந்த இடம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடம் என்பது மட்டுமன்றி யுத்தத்திற்கு முன்னரே அங்குள்ள தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதும், கிராமங்கள் அழைக்கப்பட்டதும் என்று பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இந்த விடயங்களை சர்வதேச பிரதிநிதிகள் மாத்திரமன்றி குறிப்பாக ஐ.நாவினுடைய மனித உரிமை உயர்தானிகருடைய அல்லது மனித உரிமை பேரவையில் இயற்றப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையிலே அதற்கான சாட்சியங்களை திரட்டுகின்ற பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிநிதிகள் அல்லது அலுவலர்கள் முன்னாலே இந்த அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

மகாவம்சம் உலக நினைவக மரபுரிமை ஆவணமாக யுனெஸ்கோவினால் அங்கீகாரம்

இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூலான மகாவம்சத்திற்கு யுனெஸ்கோ ஸ்தாபனத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார ஸ்தாபனமான யுனெஸ்கோ (UNESCO), தமது சர்வதேச நினைவகத்தில் பாதுகாத்துவரும் ஆவணப் பொருட்களின் பட்டியலில் மகாவம்சத்தினையும் இணைத்துள்ளது.

கி.பி 6 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து இலங்கையின் வரலாற்றைக்கும் கூறும் மகாவம்சத்தின் நம்பகத்தன்மை இலங்கையிலும் இந்தியாவிலும் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

மேலும் மகாவம்சம் தென்கிழக்கு ஆசியாவில் பௌத்தத்தை பிரபலப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது எனவும் மகாவம்சத்தின் பல கையெழுத்துப் பிரதிகள் பல நாடுகளில் இருப்பதுடன், இந்நூல் பேரரசர் அசோகரின் வரலாற்றை அறிய பெரும் பங்காற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized