கனடாவில் அமைக்கப்படும் இனப்படுகொலை நினைவுத் தூபிக்கு இலங்கை தூதரகம் கடும் எதிர்ப்பு

கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைக்கும் முயற்சிகளிற்கு கனடாவிற்கான இலங்கை தூதரகம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூறுவதற்காக கனடாவில் உள்ள இலங்கை தமிழ் சமூகத்தினர் நினைவுத்தூபியை அமைப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கே இலங்கை தூதரகம் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் எதிர்ப்பையும் மீறி பிரம்படன் மேயர் பட்ரிக் பிரவுன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இழக்கப்பட்ட உயிர்களை நினைவுகூறுவதற்கான தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

இன்னுமொரு மாநகரசபையிடம் இதேபோன்ற ஒரு நினைவுத்தூபியை அமைப்பதற்காக விடுக்கப்பட்ட வேண்டுகோளை மேயர் நிராகரித்துவிட்டார் என இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கனடாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக தீவிரவாதிகள்வேறு பெயர்களில் செயற்படுகின்றனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கனேடிய பூர்வகுடிகளின் இனப்படுகொலையை இலங்கையில் அனுட்டிக்க பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் – விமல் வீரவன்ச

கனடாவில் பூர்வீக குடிகளான செவ்விந்தியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை, இலங்கையிலும் அனுட்டிக்க வேண்டுமென இலங்கை மேலவை சபை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இன்று (23) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கனடா பிரதமர் கூறியுள்ளார்.

இதனை இந்த சபை கண்டிக்க வேண்டும். கனடாவில் மண்ணின் மைந்தர்கள் செவ்விந்தியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அண்மையில் பெரிய புதைகுழியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மண்ணின் மைந்தர்கள் கொன்று குவிக்கப்பட்டதை ஜூன் 21 ஆம் திகதி அனுட்டிக்கிறார்கள். இலங்கையில் நடக்காத இனப்படுகொலையை அவர்கள் அனுட்டிக்க முடியுமென்றால், கனடாவில் நடந்த இனப்படுகெ்கொலையை நாம் ஏன் அனுட்டிக்க முடியாது?

அதனால் ஜூன் 21ஆம் திகதி கனடா இனப்படுகொலையை நாம் அனுட்டிக்க பிரேரணை நிறைவேற்ற வேண்டுமென்றார்.

கனேடியப் பிரதமர் தனது கருத்தை மீளப்பெறக் கோரி காலி முகத்திடல் மக்கள் அமைப்பு கனடிய தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

முப்படையினரும் , பொலிஸாரும் இலங்கையில் தமிழினப்படுகொலையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள கருத்தை கனேடியப் பிரதமர் மீளப் பெற வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் மௌனம் காக்கின்றார்? என காலி முகத்திடல் மக்கள் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.

கனேடிய பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பினை வெளியிட்டு காலி முகத்திடல் மக்கள் அமைப்பு திங்கட்கிழமை (22) கொழும்பிலுள்ள கனடா உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு , கடிதமொன்றையும் கையளித்திருந்தது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட் காலி முகத்திடல் மக்கள் அமைப்பின் உறுப்பினர் பலங்கொட கஸ்வத்த தேரர்,

இலங்கையில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தமிழ் இனப் படுகொலை செய்துள்ளனர் என கனேடிய பிரதமர் தெரிவித்திருந்தார். இவ்வாறான கருத்துக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பதிலளிக்க வேண்டியதில்லை. மாறாக ஜனாதிபதியும் , பிரதமரும் நேரடியாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்திருக்க வேண்டும்.

கனேடிய பிரதமரின் ஆதரமற்ற கருத்துக்களை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இலங்கையில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கனடா அறியாத பல தகவல்களை நாம் இந்தக் கடிதத்தில் உள்ளடக்கியுள்ளோம்.

தளதா மாளிகை மீதான தாக்குதல்கள் , ஸ்ரீமகா போதி தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் தமது குடும்பத்தினரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக குடும்ப அங்கத்தவர்கள் வெவ்வேறு பேரூந்துகளில் பயணிக்க வேண்டிய நிலைமை காணப்பட்டது.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களின் காரணமாக எமக்கும் பதில் தாக்குதல்களை நடத்த வேண்டியேற்பட்டது. இறுதியில் அனைத்து இன மக்களும் அழிவை எதிர்கொண்டனர். இவற்றை ஜனாதிபதியும் , பிரதமரும் கனடாவுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி ஏன் அமைதி காக்கின்றார்?

சிங்கள பௌத்த மக்களை இனவாதிகளெனக் குறிப்பிட்டு , எமக்கு கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை மறுக்கின்றனர். ஜனாதிபதியும் , பிரதமரும் இது குறித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்காவிட்டால் நாம் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று உரிய நடவடிக்கைகளை எடுப்போம். எனவே கனேடிய பிரதமர் வெளியிட்ட கருத்துக்களை உடனடியாக மீளப்பெற வேண்டும் என்றார்.

எதிர்ப்பைப் பதிவு செய்ய கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அமைச்சர் அலி சப்ரி அழைப்பு

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கை தொடர்பில் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

‘இலங்கையில் இனப்படுகொலை’ நடந்தது என கனடா பிரதமர் வெளிப்படுத்தியது தொடர்பாக எதிர்ப்புப் பதிவு செய்ய கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அமைச்சர் அலி சப்ரி அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று (மே 18) கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரிப்பதாக கூறியது. அதில் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது.

கனேடியப் பிரதமரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இலங்கை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு தேசத்தின் தலைவரின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் துருவமுனைப்பு அறிவிப்புகள் கனடாவிலும் இலங்கையிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக வேற்றுமையையும் வெறுப்பையும் வளர்க்கிறது என்று அமைச்சு மேலும் கூறியது.

கனடா மற்றும் அதன் தலைவர்கள் வெறுப்பு, தவறான தகவல் மற்றும் தீவிரவாத கருத்துக்களை ஊக்குவிக்கும் வகையில் கனடாவில் இருந்து அறிவிப்புகளை வெளியிடுவதை தவிர்க்குமாறும், திரிபுபடுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் இலங்கை மீதான உதவியற்ற கவனத்தை நிறுத்துமாறும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.

எனினும், இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதில் கனடா உறுதியாக உள்ளது. இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சுக்கு கனடா தகவல் வழங்கியது. இனப்படுகொலை தகவலை நீக்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளை கனடா கண்டுகொள்ளவில்லை.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை உறுதி செய்த கனடா பிரதமரின் அறிக்கை: இலங்கை கொதிப்பு!

தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை உறுதி செய்து, இனப்படுகொலையின் 14வது ஆண்டை முன்னிட்டு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டதை அடுத்து, இலங்கை மீண்டும் கனடாவுடனான இராஜதந்திரப் போரில் இறங்கியுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, உள்நாட்டில் நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு உதவாத அறிக்கையை இலங்கை கண்டிப்பதாக தெரிவித்தார். எனினும், கனடா அதை கண்டுகொள்ளவில்லை.

கனேடிய தலைவர் தனது அறிக்கையில், “இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகளை இன்று நாம் சிந்திக்கிறோம். முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்; காயமடைந்த, அல்லது இடம்பெயர்ந்த. இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் தொடர்ந்து வாழும் பாதிக்கப்பட்டவர்கள், தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன.

மோதலால் பாதிக்கப்பட்ட தமிழ்-கனடியர்களின் கதைகள் – நான் பல ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள சமூகங்களில் சந்தித்த பலர் உட்பட – மனித உரிமைகள், அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை ஒரு நிலையான நினைவூட்டல். அதனால்தான் கடந்த ஆண்டு மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக அனுசரிக்கும் பிரேரணையை நாடாளுமன்றம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகளுக்காகவும், அத்துடன் இலங்கையில் தொடர்ந்து கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவருக்காகவும் கனடா குரல் கொடுப்பதை நிறுத்தாது.

2022 அக்டோபரில், நாட்டில் மனித உரிமைகள், பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கத்தை அழைக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை (UNHRC) தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதில் எமது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து கொண்டோம். இலங்கையில் மதம், நம்பிக்கை மற்றும் பன்மைத்துவ சுதந்திரம் ஆகியவற்றைக் கோரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பிற தீர்மானங்களை ஏற்றுக்கொள்வதில் கனடா உலகளாவிய முன்னணியில் உள்ளது – வரும் ஆண்டுகளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான அத்தியாவசிய கூறுகள் – மேலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எங்கள் பணியைத் தொடருவோம். மேலும் 2023 ஜனவரியில், நாட்டில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்கும் வகையில், நான்கு இலங்கை அரசு அதிகாரிகளுக்கு எதிராக எங்கள் அரசாங்கம் தடைகளை விதித்தது.

தமிழ்-கனடியர்கள் நம் நாட்டிற்கு ஆற்றி வரும் – மற்றும் தொடர்ந்து செய்து வரும் – பல பங்களிப்பை அங்கீகரிக்க கனடியர்கள் அனைவரையும் கனடா அரசின் சார்பாக அழைக்கிறேன். இலங்கையில் ஆயுதப் போரின் தாக்கம் குறித்து மேலும் அறிந்துகொள்ளவும், பாதிக்கப்பட்ட அல்லது இழந்த அன்புக்குரியவர்களுக்கு ஒற்றுமையைத் தெரிவிக்கவும் அனைவரையும் ஊக்குவிக்கிறேன்“ என அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக, கனடாவின் பூகோள விவகார அமைச்சு இலங்கை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்திருந்தது . உள்ளூர் நல்லிணக்க முயற்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குமாறு இலங்கை அதிகாரிகள் கோரிய போதிலும், கனேடிய அதிகாரிகளால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி கனடாவின் ஒன்ராறியோ மாகாணம் தமிழ் இனப்படுகொலை வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது

ஒட்டாவா தமிழ்ச் சங்கம் இனப்படுகொலை நினைவு தினத்தை அனுட்டிக்கத் தீர்மானம்

கனடாவிலுள்ள ஒட்டாவா தமிழ் சங்கம், தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை 2023 மே 18ஆம் திகதி ஒட்டாவாவில் அனுஷ்டிக்க திட்டமிட்டுள்ளது.

அன்றைய தினத்தில் பல தமிழ் அமைப்புகள் நிகழ்வில் கலந்துகொண்டு தனது கூட்டறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 2022 மே 18 அன்று, கனேடிய நாடாளுமன்றம் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலையை அங்கீகரித்து, ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக நிறுவியது.

இந்தநிலையில் ஒட்டாவா தமிழ் சங்கம்,தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை (18.05.2023) அன்று மாலை 7 மணிக்கு வோல்டர் பேக்கர் விளையாட்டு மையத்தில் அனுஷ்டிக்க திட்டமிட்டுள்ளது.

இதன்போது தமிழர் எழுச்சியின் அடையாளமாக தீபம் ஏற்றும் நிகழ்வு இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 2009 போரின் இறுதி நாட்களில், இந்த தமிழர்களுக்கு கிடைத்த ஒரே உணவு, ஒரு சிட்டிகை உப்பு நீரில் சமைத்த ஒரு பிடி அரிசி மட்டுமே என்ற அடிப்படையில், தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு தருணத்தைக் குறிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இனப்படுகொலையை பரந்த அளவில் அங்கீகரிப்பதற்காக கனடா சரியான நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் ஒட்டாவா தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஈழத் தமிழ் சமூகத்திற்கு நீதி வழங்க இலங்கை அரசாங்கத்தையும் அதன் அதிகாரிகளையும் சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டுவருவதில் தீவிரப் பங்காற்றுமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்துவதாவும் இச்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்க் கட்சித் தலைவர், கனடியத் தூதுவர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை ஆகிய மூன்று தூண்களிலும் நிலவும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் செயல்முறையை ஜனநாயகமயமாக்கல் போன்ற விடயங்களும் இதன்போது கருத்தில்கொள்ளப்பட்டன.

கனேடியத் தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடியத் தூதுவர் எரிக் வல்ஸ் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் யாழ்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின், மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையினால் நடாத்தப்படும் என்லீப் செயற்றிட்டத்தின் மீளாய்வுக்காகவே அவர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது, துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி எஸ். கே. கண்ணதாஸ ஆகியோருடனும், மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறை மாணவர்களுடனும் கனேடியத் தூதுவர் கலந்துரையாடி, நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கனடாவிடம் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை

இலங்கை அதிகாரிகள் மீது கனடாவின் பொருளாதாரத் தடைகளை பாராட்டியுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நியூரம்பெர்க் போன்ற புதிய நீதிமன்றத்தின் மூலம் வழக்குத் தொடரவும் அழைப்பு விடுப்பதாக உலகத் தமிழ் அமைப்புகளின் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வேல் வேலாயுதபிள்ளை அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு உயர்மட்ட அதிகாரிகள் மீது கனடா இந்த மாத தொடக்கத்தில் தடைகளை அறிவித்திருந்தது.

சர்வதேச நீதிமன்றத்தின் முன் இலங்கையை கனடா நிறுத்த வேண்டும் என சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலியிடம் தமது தரப்பு இந்தக் கோரிக்கையை விடுத்ததாக வேலாயுதபிள்ளை கூறியுள்ளார்.

இலங்கையின் மூத்த அதிகாரிகளுக்கு அமெரிக்கா முன்னர் அனுமதி அளித்துள்ளது, ஆனால் ராஜபக்ஷ சகோதரர்களை தடை பட்டியலிட்ட ஒரே நாடு கனடா என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜி7 நாடுகள் ராஜபக்க்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் – கனடா வெளியுறவு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் மீது தாம் விதித்ததை போன்று ஜி7 நாடுகளும் பொருளாதார தடைகளை விதிக்க ஆதரவு தரும் வகையில் கனடா செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜொலி, இந்த தடையை ஜி7 நாடுகளும் பின்பற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கனடா எப்போதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறது என்ற அடிப்படையிலேயே, ராஜபக்ஷ சகோதரர்கள் மற்றும் மற்றவர்கள் மீது கடுமையான தடைகளை விதிக்க முடிவு செய்தது

இதனையடுத்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜி7 நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய ராச்சியம், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை வலியுறுத்துவதே தமது நோக்கம்.’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.