யாழில் 1814 கர்ப்பிணிகள் வறுமையினால் பாதிப்பு

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிப் பெண்கள் வறுமை நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பருத்தித்துறைப் பிரதேச செயலகத்தில் 226 கர்ப்பிணிப் பெண்களும், சங்கானைப் பிரதேச செயலகத்தில் 157 கர்ப்பிணிகளும், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 139 கர்ப்பிணிகளும்,

யாழ்ப்பாண பிரதேச செயலகப் பிரிவில் 138 கர்ப்பிணிகளும், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் 128 கர்பிணிகளும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 118 கர்ப்பிணிகளும், உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் 117 கர்ப்பிணிகளும்,

மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 98 கர்பிணிகளும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 97 கர்ப்பிணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் 91 கர்பிணிகளும்,

காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 40 கர்ப்பிணிகளும், வேலணைப் பிரதேச செயலகப் பிரிவில் 49 கர்பிணிகளும், ஊர்காவற்துறை பிரதேச செயலகப் பிரிவில் 25 கர்பிணிகளும், நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் 21 கர்ப்பிணிகள் என 1814 பேர் வறுமை நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்போர் முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயம்

சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக புதிதாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் முதலுதவி தொடர்பான அடிப்படை தௌிவூட்டலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக புதிதாக விண்ணப்பிக்கும் அனைவரும் தமது திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படும் முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க கூறினார்.

வாகன விபத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் சந்தர்ப்பத்தில் அடிப்படை முதலுதவி பற்றிய அறிவு இன்மையின் காரணமாக அனர்த்தத்தின் பாதிப்பு அதிகமாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, சாரதிகளுக்கு அடிப்படை முதலுதவி பற்றிய அறிவை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன  போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க  குறிப்பிட்டார்.

அதிகளவிலான மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்

பொருளாதார நெருக்கடிகள், அரசியல் குளறுபடிகள் மற்றும் அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக்கொள்கை காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவ நிபுணர்களின்   எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்த மாதத்தில் மாத்திரம் 50 முதல் 60 வரையிலான அரச வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

குறிப்பாக, சில வைத்தியர்கள் விடுமுறை பெறாமல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறியுள்ள மருத்துவ நிபுணர்களின் பெயர் விபரங்கள் மற்றும் அவர்களின் எண்ணிக்கைகளும் சுகாதார அமைச்சினால் இதுவரையில் வெளியிடப்படவில்லை. எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கு அமைவாக மொத்தமாக 1,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, கிராம மட்டங்களில் உள்ள அரச மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் வெளியேறுதல் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், கொழும்பு தேசிய வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைகள் இதுவரையில் மருத்துவ நிபுணர்களின்  பற்றாக்குறையால் பாதிக்கப்படவில்லை.

மேலும், அங்கு விசேட வைத்திய நிபுணர்கள் வைத்தியசாலையில் காணப்பட்ட போதிலும்,  தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தொழில் நிமித்தம் சென்றுள்ளனர்.

அதேவேளை, அதிகளவிலான வைத்திய ஆலோசகர்களும் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசியல் உறுதியின்மையே வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற பிரதான காரணமாகும். அதேபோன்று அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பில் இந்த தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

மேலும், தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுத்துள்ள நியாயமற்ற வரிக்கொள்கையும் மற்றுமொரு காரணமாகும். இதனாலும் அதிகளவிலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என்றார்.

Posted in Uncategorized

இந்தியாவிலிருந்து மருத்துவப் பொருட்கள் கொள்வனவு செய்வது தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

இரண்டு இந்தியத் தனியார் நிறுவனங்களிடமிருந்து மருத்துவப் பொருட்களைக் கொள்வனவு செய்வது தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

அமைச்சர்கள் அமைச்சரவை, சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் என்பன இது தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எதிராகவே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

47 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பதிவு செய்யப்படாத தனியார் விநியோகஸ்தர்களின் மூலம் மருத்துவப் பொருட்களை வாங்குவதில் அமைச்சர்களின் அமைச்சரவையின் பங்கு

பதிவு செய்யப்படாத விநியோகஸ்தர்களிடம் இருந்து மருத்துவப் பொருட்களை வாங்குவதற்குப் பதிவு விலக்கு வழங்குவதில் தேசிய மருந்தாக்கல் ஒழுங்குமுறை ஆணையகத்தின் பங்கு

அவசரகால கொள்முதல் செயல்முறை உட்படக் கொள்முதல் வழிகாட்டுதல்களுடன் இணங்காமை

சுகாதார அமைச்சர் மற்றும் மருந்தாக்கல் ஆணையத் தலைமை நிர்வாக அதிகாரியின் செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்துதல் என்பவற்றைச் சவாலுக்கு உட்படுத்தி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்துக் கொள்வனவு, மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கடுமையாகப் புறக்கணிப்பதுடன், பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் பொது நிதியை முழுவதுமாக துஷ்பிரயோகம் செய்துள்ளது.

அத்துடன், குடிமக்களின் அடிப்படை உரிமையான சமத்துவம் மற்றும் தகவல்களை அணுகும் உரிமை ஆகியவை இதன் மூலம் மீறப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்த தீர்மானம்!

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய மற்றும் அவசர சத்திரசிகிச்சைகள் வழமை போன்று மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருந்துகள் மற்றும் உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அவசர சத்திரசிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்துமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

நாளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாளை நாடு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நாளை 08.02.2023 காலை 8 மணி தொடக்கம் 09.02.2023 காலை 8:00 மணி வரை இலங்கை முழுவதிலும் உள்ள வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இதன் போது அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் வைத்திய சேவை இடம்பெறாது.

மேலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் மேலும் 40 வரையிலான தொழிற்சங்கங்கள் இணைந்து இப்பணிப்பு புறக்கணிப்பினை மேற்கொள்கின்றன.

Posted in Uncategorized

தனியார்துறையினருக்கும் சுகாதார காப்புறுதி வழங்க சட்டத்தில் திருத்தம்

அக்ரஹார சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவதற்காக ஊழியர் நம்பிக்கை நிதிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (7) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில், தனியார் துறை ஊழியர்களுக்கு அக்ரஹார சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்கான பிரேரணையை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகவும், முன்மொழிவை செயல்படுத்துவதற்காக 1980ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.

இலங்கையில் மருந்துத் தட்டுப்பாட்டை நீக்க உலக சுகாதார நிறுவனம் தலையிடவேண்டும்

அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

நாட்டில் நிலவி வரும் மருந்து தட்டுபாட்டை நீக்குவதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மூவர் கொண்ட குழுவை அமைத்து, இந்த குழுவின் ஊடாக இந்த மருந்து தட்டுபாட்டை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் என்ன போன்ற விடயங்கள் தொடர்பாக ஆலோசனை செய்து, சுகாதார அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி, ஆகியோருக்கு தெளிவாக கூறியிருந்த நிலையில், தற்போது நாடளாவிய ரீதியில் பெரிய வைத்தியசாலைகள் தொடக்கம் சிறிய வைத்தியசாலைகள் வரை இந்த மருந்து தட்டுபாடு நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நிலைழைய தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சு உடனடியாக நிலையான தீர்வை முன்வைக்க தவறியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள், வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடு, மருந்து விலை அதிகரிப்பு, மருந்து கொள்வனவில் ஏற்படும் ஊழல் விடயங்களை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க கோரி, கொழும்பிலுள்ள உலக சுகாதார ஸ்தாபன அலுவலகத்தில் ​நேற்று (26) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அத்துடன், உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ச்சியாக இலங்கைக்கு மருந்து பொருட்களை வழங்க உதவி செய்ய வேண்டும் என்ற கோரரி்கைகையும் விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

சுகாதார நெருக்கடியாக மாறும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி – உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கை முன்னொருபோதும் இல்லாத சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது மிகவும் அவசியமான மருந்துகள் குறைந்தளவிலேயே உள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி சுகாதார துறையை மோசமாக பாதிப்பதால் பல இலங்கையர்கள் மருத்;துவசேவையை பெறும் வாய்ப்பை இழக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையின் அபிவிருத்தி சகாக்கள் நிதிஉதவி செய்பவர்களுடன் இணைந்து இலங்கையின்  மருந்து மற்றும் மருத்துவ பொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் விரைவான ஒத்திசைவான பதில்களை உறுதி செய்ய முயல்வதாக குறிப்பிட்டுள்ளது.

மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்களின் அதிகரித்துவரும் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் பொருளாதார நெருக்கடி துரிதமாக சுகாதார நெருக்கடியாக மாறிவருகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மருந்துகள் மற்றும் சத்திரகிசிச்சை உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான வருடாந்த வரவு செலவுதிட்ட மதிப்பீடு 300 மில்லியன் டொலர்கள் என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் 2023 இல் இதுவரை இலங்கைக்கு உதவி வழங்கும் சமூகத்தின் மூலம் 80 மில்லியன்  டொலர்களே கிடைத்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கைக்கு இன்னமும் 220 மில்லியன் அமெரிக்க டொலர் தேவையாகவுள்ளது இலங்கையின் சகாக்களுடன் இந்த இடைவெளியை அவசரமாக நிரப்பவேண்டிய தேவையுள்ளது எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

பொருளதார நெருக்கடிகள் சுகாதார துறைக்கு பல சவால்களை அளித்த என தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்களின் விநியோகத்தை வலுப்படுத்துவதற்கும்சமூகம் நெருக்கடியான நிலையை எதிர்கொள்வதற்கு உதவுவதற்கும் நாங்கள் சகாக்களின் உதவியை பெறவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுகாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் அனைவருக்கும் முக்கிய உயிர்காக்கும் மருந்துகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்காக அத்தியாவசிய மருந்துகள் மற்றும் விநியோகங்கள் கிடைப்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

யாழ் வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்

வாழ்க்கை செலவுப் படியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

சிறிலங்கா ஜனரய சுகாதார சேவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது வாழ்க்கை செலவுப் படியை அதிகரித்தல், வங்கிகளில் அதிகரித்த வட்டியை நிறுத்துதல் , முறையற்ற நியமனத்தை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted in Uncategorized