கீரிமலை கேணியை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த முயற்சிக்கும் செயற்பாடுகளுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம்

வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சைவ மக்களின் முக்கியமான சமய சம்பிரதாயங்களோடு தொடர்புடையதுமான கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் மன்றத்தினர் கூறுகையில்,

ஒவ்வொரு சைவ ஆதாரங்களையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த நினைப்பதும், அதற்கான கண்டனங்கள் வெளிநாடுகள் வரை சென்று எதிரொலிக்கும்போது தமது செயற்பாடுகளிலிருந்து திணைக்களம் தற்காலிகமாக பின்வாங்குவதும் என்று சைவ மக்கள் தமது அடையாளங்களை ஒன்றன் பின் ஒன்றாக இழந்துவரும் துர்ப்பாக்கிய நிலைக்கு இட்டுச் செல்வது மிகவும் கவலைக்குரியது.

இவ்வாறான செயற்பாடுகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். இப்படியான சமிக்ஞைகளால் அரசாங்கம் சைவத் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கான அதன் முயற்சிகளில் பாரியளவில் பாதிப்பு ஏற்படும்.

கீரிமலை கேணி, தமது நீத்த உறவினர்களின் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற வெளிநாடுகளிலிருந்தும் சைவமக்கள் வந்து செல்கின்ற இடம்.

ஈழத்தில் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான நகுலேஸ்வரத்தின் அருகில் அமைந்துள்ள இந்த கேணி பல நூற்றாண்டு கால பழமை வாய்ந்தது. இது ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக வலி.வடக்கு பிரதேச சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகிற இடம்.

சைவத் தமிழ் மன்னன் இராவணனோடும் இராமாயணத்தோடும் தொடர்புடைய திருக்கோணேஸ்வர ஆலய சுற்றாடலில் வெளியார் ஆக்கிரமிப்பு, கன்னியா வெந்நீரூற்று தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் தலையீடு, அண்மையில் பறளாய் முருகன் கோவிலில் உள்ள ஒரு அரச மரத்தைப் பற்றிய சர்ச்சை, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமை, பின்னர் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சர்ச்சைகள் என சைவ மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்கின்றன.

எனவே, இத்தகைய அநீதியான செயலைத் தடுத்து நிறுத்துவதோடு, சிறுபான்மை மக்களின் மத வழிபாடுகளை தடுக்கின்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் அல்லர். ஆனால், எமது மத வழிபாட்டை தடை செய்ய எவருக்கும் உரிமையில்லை. அத்தகைய செயற்பாடுகளை தடுக்க வேண்டும் என மாண்புமிகு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கேட்டுக் கொள்கின்றோம் என்கின்றனர்.

கூட்டமைப்பின் தலையீட்டினால் பறாளாய் அரச மரத்தை விஞ்ஞானபூர்வ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

பறாளாய் முருகன் கோயிலின் தலா விருட்சமான அரச மரத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்க விஞ்ஞானரீதியில் ஆராய்ச்சி செய்து, முறையற்ற விதமான வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

அத்துடன், விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளாமல் எப்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என தொல்லியல் திணைக்களத்தினரிடம் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

இன்று (9) நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, பறாளாய் முருகன் கோயில் விடயமாக பேச்சு நடத்தினார்கள்.

இன்று, இந்த விவகாரம் பற்றி இருவரும் தனது கவனத்திற்கு கொண்டு வருவதற்கு முன்னர், இப்படியொரு பிரச்சினை நீடிப்பது தனது கவனத்துக்கு யாராலும் கொண்டு வரப்படவில்லையென ரணில் தெரிவித்தார்.

பறாளாய் முருகன் கோயிலின் வரலாறு சுமார் 300 ஆண்டுகளிற்கு உட்பட்டது என குறிப்பிட்டு, சம்பவத்தின் பின்னணியையும், வரலாற்று சுருக்கத்தையும் த.சித்தார்த்தன் விளக்கமளித்தார்.

இந்த விவகாரத்தில் 2 உண்மைகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர். இந்த மரம் 300 வருடங்கள் பழமையானது என்பதால், சங்கமித்தை இலங்கைக்கு 300 வருடங்களின் முன்னரே வந்தார், பௌத்தம் 300 வருடங்கள் மாத்திரமே பழமையானது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, இந்த மரம் சங்கமித்தை நாட்டிய மரமல்ல என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டனர்.

பறாளாய் முருகன் கோயிலின் தல விருட்சமான அரச மரம், சங்கமித்தை நாட்டிய மரமாக இருக்காது என்பதே தனது அபிப்ராயம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்டபோது நாட்டிலிருந்த அரசமரங்களையெல்லாம் தறித்து விட்டதாக தெரிவித்தார். அப்படியானால் வர்த்தமானியை மீளப்பெறுமாறு கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

மரத்தின் ஆயுட்காலத்தை அளவிடும் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரா அது வர்த்தமானியிடப்பட்டது என கூட்டமைப்பினர் கேள்வியெழுப்பினர்.

அப்படியான பரிசோதனையெதுவும் மேற்கொள்ளாமல், இது சங்கமித்தை நாட்டிய மரம் என்ற முடிவிற்கு எப்படி தொல்லியல் திணைக்களம் வந்தது என கூட்டமைப்பினர் கேள்வியெழுப்பினர்.

இதன்மூலம், அந்த வர்த்தமானி இனவாத நோக்கமுடைய, சட்டபூர்வமற்ற வர்த்தமானியென்பது புலப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினர்.

இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தொல்லியல் திணைக்களம் முறையற்ற விதமாக செயற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டதுடன், அவர்கள் எந்த விஞ்ஞானபூர்வ நடைமுறைகளையும் கடைப்பிடிக்காமல் எப்படி வர்த்தமானியிட்டார்கள் என்பது தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அறிக்கையிட, தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பணித்தார்.

உடனடியாக வர்த்தமானியை மீளப்பெறுவது, தென்னிலங்கை தரப்பில் எதிர்ப்பை ஏற்படுத்தி, தனக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், உடனடியாக மரத்தின் ஆயுட்காலத்தை கண்டறியும் சோதனை நடத்தி, வர்த்தமானியை மீளப்பெற நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

இராணுவத்தினரின் தகவலுக்கமையவே தொல்லியல் திணைக்களத்தினர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்கள் என்ற தகவலையும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

தமிழர் பிரதேசங்களை பெளத்த தொல்லியல் இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது – ஆறு திருமுருகன்

இலங்கையில் உள்ள தமிழர் பிரதேச இடங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என இந்து சமய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கூட்டமைப்பு சார்பாக அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு தமிழர்களின் பாரம்பரிய அடையாளச் சின்னங்களை பௌத்த அடையாள இடங்களாக மாற்ற நினைப்பது மிகுந்த வேதனை தருகிறது. கிழக்கில் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சைவ மக்களின் புனித தீர்த்தமாக பலநூறு வருடங்களாக பேணிப்பாதுகாக்கப்பட்டது.

சைவசமயத்தை பெரிதும் நேசித்த இலங்கை வேந்தன் இராவணனோடு தொடர்புடைய இப்புனித தீர்த்தம் இன்று தொல்லியல் திணைக்களத்தின் பெயரால் அபகரித்துள்ளமை அநீதியான செயலாகும். தொடர்ந்து தொன்மை வாய்ந்த சைவ ஆலயங்களை திட்டமிட்டு அபகரிக்க நினைப்பது அதர்மச் செயலாகும்.

தற்போது பறளாய் முருகன் கோவிலில் உள்ள அரசமர விருட்சத்தை சங்கமித்தை வரலாற்றோடு தொடர்புபடுத்தி வர்த்தமானி வெளியிட்டுள்ளமை சைவ மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. சைவ நிறுவனங்களையோ, வடக்கில் உள்ள பல்கலைக்கழக அறிஞர்களையோ தொடர்பு கொள்ளாமல் தொல்லியல் திணைக்களம் புதிய பிரகடனங்கள் செய்வது கவலையளிக்கிறது. கீரிமலைப் புனித தீர்த்த கேணியை திடீரென தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது மிகவும் தவறான செயலாகும்.

தெல்லிப்பழை கிராம முன்னேற்றச் சங்கம், வல்லிபுரம் என்ற பெரியவரின் நிதியுதவியுடன் 1916ஆம் ஆண்டு தூர்வைக் குளமாக இருந்த இக்கேணியை பொலிகலால் கட்டி பாதுகாத்தது. இன்றுவரை வலிவடக்குப் பிரதேசசபை குளத்தைப் பாதுகாப்பதுடன் காவலர்களை நியமித்து கண்காணித்து வருகிறார்கள்.

திணைக்களத்திற்கு உரித்தாக பிரகடனம் செய்திருப்பது நீதியற்ற செயல். எனவே ஜனாதிபதி தொல்லியல் திணைக்களத்தின் மேற்குறித்த பிரகடனங்களை மீளப்பெறுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைவமக்களின் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம் தங்களிடம் தெரிவித்துக்கொள்கிறது. தாங்கள் இவ்விடயத்தில் உடன் அக்கறை எடுத்து ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம் என்றுள்ளது.

வடக்கு, கிழக்கில் உள்ள தொல்லியல் இடங்களை பாதுகாக்க கோரி மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம்

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்கு அவசர வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு எல்லாவல மேதானந்த தேரர் மகாநாயக்க தேரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு எல்லாவல மேதானந்த தேரர் கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் உள்ள தொல்லியல் சின்னங்கள் பிரிவினைவாதிகளாலும், தீவிரவாதிகளாலும் அழிக்கப்படுகின்றன – உதய கம்மன்பில

முல்லைத்தீவு குருந்தூர்மலை உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் சின்னங்களை பிரிவினைவாதிகளிடமிருந்தோ அல்லது தீவிரவாதிகளிடமிருந்தோ அல்ல, தற்போதைய அரசாங்கத்திடம் இருந்துதான் காப்பாற்ற வேண்டியுள்ளது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (15) தெரிவித்தார்.

இலங்கையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பாரம்பரியங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருப்பதாகத் தெரிவித்த கம்மன்பில, அமைச்சர் சிறில் மத்யூ யுனெஸ்கோ அமைப்பிற்கு அனுப்பியுள்ள முறையீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த 276 இடங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவை 1983 ஆம் ஆண்டளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்லியல் சின்னங்கள் பிரிவினைவாதிகளாலும், தீவிரவாதிகளாலும் அழிக்கப்படுவது மட்டுமன்றி, அரசாங்க அதிகாரிகளும் செயலற்றவர்களாகவும், நீதிமன்றங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வழங்கி ஆதரவளிப்பதாகவும் அவர் கூறினார்.

எனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்ற பிரேரணையை எதிர்வரும் 19ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிப்பதாக எதிர்பார்ப்பதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Posted in Uncategorized

தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டும் சொந்தமான விடயமல்ல – அகிலவிராஜ் காரியவசம்

தொல்பொருள் திணைக்களம் பௌத்தத்திற்கு மட்டும் சொந்தமான விடயமல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி நடத்திய பேச்சுவார்த்தையை இன்று சில அரசியல்வாதிகள் விமர்சித்து வருகிறார்கள்.

2500 வருட வரலாறு கொண்ட எமது நாட்டில், எங்கு தோண்டினாலும் புராதனச் சின்னங்கள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கும்.
மலசலகூடத்திற்காக குழியொன்றை தோண்டினால்கூட, இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.

தொல்பொருள் சின்னங்கள் காணப்படும் இடங்களை நாம் நிச்சயமாக பாதுகாக்க வேண்டும்.

அதேநேரம், தற்போது வாழும் மக்களையும் அது பாதிக்காத வகையில் எமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

சிங்கள- பௌத்த தொல்பொருள் மட்டும் இங்கு தொல்பொருட்களாக கருதிவிட முடியாது.
அது இன, மதங்களுக்கு அப்பாற்பட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தகாலம் நிறைவடைந்ததாலேயே தொல்பொருள் திணைக்கள தலைவர் இராஜினாமா – விதுர விக்கிரமநாயக்க

பேராசிரியர் அநுர மனதுங்கவின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததன் அடிப்படையிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் , அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

தொல்பொருளியல் எனக் குறிப்பிட்டு அண்மைக்காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் வரலாற்று சான்றுகள் அழிக்கப்பட்டு வருவதோடு, காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் கடந்த வாரம் இலங்கை தமிழரசுக்கட்சி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன் போது தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளால் தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் தொடர்பில் ஆதரங்களுடன் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

விகாரைகளை அண்மித்த பகுதிகளில் தேவைக்கு அதிகமாக காணிகளை கையகப்படுத்துவதை நிறுத்துமாறும் , அரச காணிகளையோ அல்லது தனியார் காணிகளையோ ஆக்கிரமிப்பதற்கும் தொல்பொருளியல் திணைக்களத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் ஜனாதிபதி கடும் தொனியில் எச்சரித்திருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட சர்ச்சைக்குரிய வாதப்பிரதிவாதங்கள் தொடர்பாக ஊடகங்களிலும் , சமூக வலைத்தளங்களிலும் வெளியான காணொளிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையிலேயே பேராசிரியர் அநுர மனதுங்க தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்திருந்தார்.

இது தொடர்பில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வினவிய போதே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தொல்பொருளியல் தொடர்பில் வடக்கு , கிழக்கில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் எவ்வித தெளிவுபடுத்தல்களும் வழங்கப்படவில்லை. எனினும் புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இது தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

தொல்பொருளியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகக் காணப்படுகின்றமையால் ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நியமனம் பெற்றிருந்தார். அதன் பின்னர் அவரது ஒப்பந்த காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய மீண்டும் பேராசிரியராக தனது பணிகளை ஆரம்பிக்க வேண்டுமென்பதால் தொல்பொருளியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டு அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார் என்றார்.

Posted in Uncategorized

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க, தனது பதவி விலகல் கடிதத்தை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.

கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வடக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வடக்கில் தொல்பொருளியல் எனக் குறிப்பிட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் பௌத்த மதகுருமார்கள் சிலராலும் , தொல்பொருள் திணைக்களத்தினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பேராசிரயர் அனுர மனதுங்கவை கடுந்தொனியில் எச்சரித்திருந்தார்.

இது தொடர்பான காணொளிகள் ஊடகங்களிலும் , சமூக வலைத்தளங்களில் வெளியாகிருந்த நிலையில் , அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திஸாநாயக்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் பேராசிரியர் மனதுக நியமிக்கப்பட்டார்.

பேராசிரியர் மனதுங்க முன்னர் களனிப் பல்கலைக்கழகத்தின் பாரம்பரிய கற்கைகளுக்கான நிலையத்தில் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார். அத்தோடு தொல்பொருளியலுடன் தொடர்புடைய பல முக்கிய திட்டங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? தொல்பொருள் திணைக்கள அதிகாரியை கடிந்த ஜனாதிபதி

வரலாற்று முக்கியத்துவம் மிக்க விகாரைகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக பொது மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பதற்கு இடமளிக்க முடியாது. தேசிய கொள்கைகளை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வடக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ளாமல் செயற்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , ‘நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? ‘ என்று அதிகாரிடம் கடுந்தொனியில் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் காணப்படும் 229 ஏக்கர் காணியை விடுப்பதற்கான கடிதத்தை ஜூன் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்திருந்தார்.

எனினும் இதுவரையில் அதற்கான பதில் வழங்கப்படவில்லை என வடக்கு பிரதிநிதிகளால் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பணிப்பாளர் நாயகம் , ‘எனக்கு அதனை விடுவிப்பதில் பாரிய சிக்கல் காணப்படுகிறது.’ எனக் குறிப்பிட்டார்.

எனினும் அது அமைச்சரவையின் கொள்கை என்றும், அதனை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி கடுந்தொனியில் தெரிவித்ததோடு, அடுத்த முறை இவ்வாறு தேசிய கொள்கையை பின்பற்றாமைக்கு காரணங்களை முன்வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி எச்சரித்தார்.

விகாரையொன்றை அமைப்பதற்கு 275 ஏக்கர் நிலப்பரப்பை எடுத்தால் அது மகா விகாரையை விடவும் பெரியதாகிவிடும். மகா விகாரை, தியதவனாராமய மற்றும் அபய கிரி உள்ளிட்ட அனைத்து விகாரைகளை இணைத்தால் 100 ஏக்கர் காணப்படும்.

அவ்வாறெனில் இவற்றை விட பாரிய விகாரையை அமைப்பதற்காகவா நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? என்று ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக ஒரு விகாரைக்கு 220 ஏக்கர் நிலப்பரப்பு உரித்துடையதாகக் காணப்படும் என்று நான் நினைக்கவில்லை. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி இது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொது மக்களின் 3000 ஏக்கர் காணியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது. பனாமுரே திலகவன்ச என்ற தேரரே தற்போது அந்த காணியை ஆக்கிரமித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன் போது சுட்டிக்காட்டினார்கள்.

கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டிருந்த கிழக்கு தொல்பொருள் பாதுகாப்பு செயலணியின் உறுப்பினராக அந்த தேரர் செயற்பட்டதாக அதிகாரிகள் இதன் போது தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி , ‘அந்த செயலணி தற்போது செயற்பாட்டில் இல்லையல்லவா? அத்தோடு அந்த செயலணிக்கு அரசாங்கத்தின் காணியையோ அல்லது தனியாரின் காணியையோ ஆக்கிரமிக்க முடியாது. இதில் என்ன சட்ட முறைமை காணப்படுகிறது? வனப்பகுதிகள் உங்களுக்கு உரித்தானதில்லையல்லவா?

திரியாயவுக்கு எதற்காக 3000 ஏக்கர் காணி தேவைப்படுகிறது? திரியாய என்பது விகாரையல்ல. முன்னயை காலங்களில் அது துறைமுக மையமாகும். படகின் மூலம் திரியாயவிலிருந்து ஹொரவபொத்தான வரை செல்ல முடியும். பின் ஹொரவபொத்தானையிலிருந்து அநுராதபுரத்துக்கும், அங்கிருந்து மல்வத்து ஓயாவுக்கும் , அங்கிருந்து மன்னாருக்கும் செல்ல முடியும்.

அந்தப் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க இந்து கோவிலொன்றும் காணப்பட்டது. எனவே அங்கு தேரர்களால் வைக்கப்பட்டுள்ள கற்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன் போது பணிப்புரை விடுத்தார்.

வடக்கு, கிழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் அளவீடுகளை நிறுத்த உத்தரவு

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த அளவீட்டு பணிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு புத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உத்தரவிட்டார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிற்குமிடையில் இன்று நடந்த சந்திப்பின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் அரச தரப்பில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அமைச்சின் செயலாளர், தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் மற்றும் அமைச்சின் கீழுள்ள ஏனைய திணைக்களங்களின் பணிப்பாளர்களும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ் கட்சிகள் தரப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன் ஆகியோரும், ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் சிங்கள பௌத்தத்திற்கு முன்னதாக தமிழ் பௌத்தம் நிலவியதை சுட்டிக்காட்டிய தமிழ் எம்.பிக்கள், வடக்கு கிழக்கில் பௌத்த சின்னங்கள் பாதுகாக்கப்படுவதை தாம் எதிர்க்கவில்லையென்றும், ஆனால், சைவ வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டு, பௌத்த வழிபாட்டிடங்கள் அமைக்கப்படுவதை எதிர்ப்பதாக தெரிவித்தனர்.

உருத்திரபுரம் சிவன் கோயில், குருந்தூர் மலை, தையிட்டி விவகாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

குருந்துர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறியும், தையிட்டியில் பொதுமக்களின் காணிக்குள்ளும் விகாரை கட்டப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியபோது, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் வில்லங்கமான விளக்கங்கள் அளித்தார்.

குருந்தூர் மலையில் முன்னர் விகாரை இருந்ததாகவும், வெளிநாட்டு சிங்கள அமைப்புக்களின் நிதியுதவியிலேயே விகாரை அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கு தமிழ் தரப்பினர், வெளிநாட்டிலுள்ள தமிழ் தரப்பிலிருந்து நிதி திரட்டி தந்தால், பொலன்னறுவையில் மிகப்பெரிய சைவக்கோயில் கட்ட முடியுமா என கேள்வியெழுப்பினர்.

தமிழ் தரப்பினர் தொல்லியல் முக்கியத்துவங்களுள்ள பகுதிகளை அபகரிக்க முயல்வதாகவும், அதனாலேயே நில அளவீடு செய்வதாகவும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார்.

ஆலய காணிகளை தமிழ் மக்கள் அபகரிப்பதில்லையென்பதை தமிழ் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

தமிழ் தரப்பினர் தெரிவித்த விவகாரங்களிற்கு தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நீண்ட விளக்கங்கள் அளிக்க முற்பட்ட போது, கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளியுங்கள் என அமைச்சர் காட்டமாக கூறினார்.

இதன்படி, உருத்திரபுரம் சிவன் ஆலயம் உள்ளிட்ட வடக்கு கிழக்கிலுள்ள சை ஆலயங்கள், வழிபாட்டிடங்களில் அளவீட்டு பணிகளை உடனடியாக நிறுத்த அமைச்சர் உத்தரவிட்டார்.

குருந்தூர் மலைக்கு நீதவான் சென்று பார்வையிட்ட பின்னர் கூடித் தீர்மானம் எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.