நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? தொல்பொருள் திணைக்கள அதிகாரியை கடிந்த ஜனாதிபதி

வரலாற்று முக்கியத்துவம் மிக்க விகாரைகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக பொது மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பதற்கு இடமளிக்க முடியாது. தேசிய கொள்கைகளை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வடக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ளாமல் செயற்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , ‘நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? ‘ என்று அதிகாரிடம் கடுந்தொனியில் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் காணப்படும் 229 ஏக்கர் காணியை விடுப்பதற்கான கடிதத்தை ஜூன் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்திருந்தார்.

எனினும் இதுவரையில் அதற்கான பதில் வழங்கப்படவில்லை என வடக்கு பிரதிநிதிகளால் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பணிப்பாளர் நாயகம் , ‘எனக்கு அதனை விடுவிப்பதில் பாரிய சிக்கல் காணப்படுகிறது.’ எனக் குறிப்பிட்டார்.

எனினும் அது அமைச்சரவையின் கொள்கை என்றும், அதனை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி கடுந்தொனியில் தெரிவித்ததோடு, அடுத்த முறை இவ்வாறு தேசிய கொள்கையை பின்பற்றாமைக்கு காரணங்களை முன்வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி எச்சரித்தார்.

விகாரையொன்றை அமைப்பதற்கு 275 ஏக்கர் நிலப்பரப்பை எடுத்தால் அது மகா விகாரையை விடவும் பெரியதாகிவிடும். மகா விகாரை, தியதவனாராமய மற்றும் அபய கிரி உள்ளிட்ட அனைத்து விகாரைகளை இணைத்தால் 100 ஏக்கர் காணப்படும்.

அவ்வாறெனில் இவற்றை விட பாரிய விகாரையை அமைப்பதற்காகவா நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? என்று ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக ஒரு விகாரைக்கு 220 ஏக்கர் நிலப்பரப்பு உரித்துடையதாகக் காணப்படும் என்று நான் நினைக்கவில்லை. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி இது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொது மக்களின் 3000 ஏக்கர் காணியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது. பனாமுரே திலகவன்ச என்ற தேரரே தற்போது அந்த காணியை ஆக்கிரமித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன் போது சுட்டிக்காட்டினார்கள்.

கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டிருந்த கிழக்கு தொல்பொருள் பாதுகாப்பு செயலணியின் உறுப்பினராக அந்த தேரர் செயற்பட்டதாக அதிகாரிகள் இதன் போது தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி , ‘அந்த செயலணி தற்போது செயற்பாட்டில் இல்லையல்லவா? அத்தோடு அந்த செயலணிக்கு அரசாங்கத்தின் காணியையோ அல்லது தனியாரின் காணியையோ ஆக்கிரமிக்க முடியாது. இதில் என்ன சட்ட முறைமை காணப்படுகிறது? வனப்பகுதிகள் உங்களுக்கு உரித்தானதில்லையல்லவா?

திரியாயவுக்கு எதற்காக 3000 ஏக்கர் காணி தேவைப்படுகிறது? திரியாய என்பது விகாரையல்ல. முன்னயை காலங்களில் அது துறைமுக மையமாகும். படகின் மூலம் திரியாயவிலிருந்து ஹொரவபொத்தான வரை செல்ல முடியும். பின் ஹொரவபொத்தானையிலிருந்து அநுராதபுரத்துக்கும், அங்கிருந்து மல்வத்து ஓயாவுக்கும் , அங்கிருந்து மன்னாருக்கும் செல்ல முடியும்.

அந்தப் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க இந்து கோவிலொன்றும் காணப்பட்டது. எனவே அங்கு தேரர்களால் வைக்கப்பட்டுள்ள கற்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன் போது பணிப்புரை விடுத்தார்.

வடக்கு, கிழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் அளவீடுகளை நிறுத்த உத்தரவு

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த அளவீட்டு பணிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு புத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உத்தரவிட்டார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிற்குமிடையில் இன்று நடந்த சந்திப்பின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் அரச தரப்பில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அமைச்சின் செயலாளர், தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் மற்றும் அமைச்சின் கீழுள்ள ஏனைய திணைக்களங்களின் பணிப்பாளர்களும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ் கட்சிகள் தரப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன் ஆகியோரும், ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் சிங்கள பௌத்தத்திற்கு முன்னதாக தமிழ் பௌத்தம் நிலவியதை சுட்டிக்காட்டிய தமிழ் எம்.பிக்கள், வடக்கு கிழக்கில் பௌத்த சின்னங்கள் பாதுகாக்கப்படுவதை தாம் எதிர்க்கவில்லையென்றும், ஆனால், சைவ வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டு, பௌத்த வழிபாட்டிடங்கள் அமைக்கப்படுவதை எதிர்ப்பதாக தெரிவித்தனர்.

உருத்திரபுரம் சிவன் கோயில், குருந்தூர் மலை, தையிட்டி விவகாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

குருந்துர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறியும், தையிட்டியில் பொதுமக்களின் காணிக்குள்ளும் விகாரை கட்டப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியபோது, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் வில்லங்கமான விளக்கங்கள் அளித்தார்.

குருந்தூர் மலையில் முன்னர் விகாரை இருந்ததாகவும், வெளிநாட்டு சிங்கள அமைப்புக்களின் நிதியுதவியிலேயே விகாரை அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கு தமிழ் தரப்பினர், வெளிநாட்டிலுள்ள தமிழ் தரப்பிலிருந்து நிதி திரட்டி தந்தால், பொலன்னறுவையில் மிகப்பெரிய சைவக்கோயில் கட்ட முடியுமா என கேள்வியெழுப்பினர்.

தமிழ் தரப்பினர் தொல்லியல் முக்கியத்துவங்களுள்ள பகுதிகளை அபகரிக்க முயல்வதாகவும், அதனாலேயே நில அளவீடு செய்வதாகவும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார்.

ஆலய காணிகளை தமிழ் மக்கள் அபகரிப்பதில்லையென்பதை தமிழ் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

தமிழ் தரப்பினர் தெரிவித்த விவகாரங்களிற்கு தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நீண்ட விளக்கங்கள் அளிக்க முற்பட்ட போது, கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளியுங்கள் என அமைச்சர் காட்டமாக கூறினார்.

இதன்படி, உருத்திரபுரம் சிவன் ஆலயம் உள்ளிட்ட வடக்கு கிழக்கிலுள்ள சை ஆலயங்கள், வழிபாட்டிடங்களில் அளவீட்டு பணிகளை உடனடியாக நிறுத்த அமைச்சர் உத்தரவிட்டார்.

குருந்தூர் மலைக்கு நீதவான் சென்று பார்வையிட்ட பின்னர் கூடித் தீர்மானம் எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

நாம் ஏதாவது செய்ய தயாரானால் தொல்லியல் திணைக்களம் அங்கே 4 கட்டைகளை அடித்து விட்டு தொல்லை கொடுக்கிறது – யாழ். பல்கலை துணைவேந்தர்

ஈழத்தமிழர்களால் மொழி, கலாச்சாரம், உணவு மற்றும் வாழ்வியல் என அனைத்து விதங்களிலும் தனித்து இயங்க முடியும் என்று யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலையில் கலாநிதி கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் திறப்பு விழாவில் இன்றைய தினம்(24.05.2023) உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.பல்கலையில் தொல்லியல் படிக்கும் பிள்ளைகள் சிறப்பு கற்கை நெறியினை மட்டும் கற்பது போதாது ஈழத்தமிழர்களின் இருப்பினை ஆவணப்படுத்தல் வேண்டும்.

பிரித்தானியாவில் உள்ள அறிவியல் அருங்காட்சியகம் மிகவும் புகழ் பெற்றது.

அதனை போன்று திருவாசக அரண்மனை போன்றவற்றை கட்டி வருகின்றனர். அவை அனைத்தும் அரசாங்கத்தினுடையதல்ல. அவற்றை அமைப்பதற்கு தனியான சிந்தனை வேண்டும்.

எமது பல்கலையில் திறந்து வைக்கப்பட்டுள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தை யாரும் வந்து பார்வையிட முடியும். இன்றைய காலத்தில் வடக்கு கிழக்கு குறித்து அனைவருக்கும் பொறாமை காணப்படுகின்றது.

ஜப்பானின் ஜைக்கா ஆய்வுகளை மேற்கொள்ளுதல் போன்றவையே இதற்கு காரணமாகும். முன்னதாகவே ஆராய்ச்சி பயிற்சிக்கான ஆய்வுகூடம் 2000 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி ஜப்பானின் விஞ்ஞானிகள் இங்கு நிற்கின்றனர். ஆனால் எமது பிள்ளைகள் அங்கு செல்கின்றனர்.

நாம் ஒன்று செய்ய தயாராகினால் தொல்லியல் திணைக்களம் அதற்கு 4 கட்டைகளை அடித்து விட்டு அதற்கு பல காரணங்களை குறிப்பிடும்.

ஏனைய பீடங்களை இலங்கை முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும். ஆனால் கலை பீடம் எமது மக்களின் வாழ்வியலை மிகவும் சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தும் அளவிற்கு சிறப்பானது.

அத்துடன் எமது அறிவியல் அறிவினால் காலநிலை குறித்தும் முன்கூட்டியே நிலைமைகளை தெரிவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த திறப்பு விழா நிகழ்வில் வரலாற்றுத்துறை ஓய்வுநிலை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், வரலாற்றுத்துறை தலைவர் சாந்தினி அருளானந்தம், பேராசிரியர் மௌனகுரு, ஏனைய பீட பீடாதிபதிகள்,விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மத்திய கலாசார நிதியத்தினர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சோழர் கால பழமையான இந்து ஆலயத்தை அபகரிக்க தொல்பொருள் திணைக்களம் முயற்சி

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்பொருட்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது.

இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபை பின்பற்றி உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் கட்டப்பட்டது.

வரலாற்றுத் தொன்மையும், பழமையும் வாய்ந்த சிவாலயத்தை அபகரிப்பதற்கான முயற்சிகள் தொல்பொருளியல் திணைக்களத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உருத்திரபுரஸ்வரபுரம் ஆலயம் அமைந்துள்ள காணியில் புராதன தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ளதாக தொல்லியல் திணைக்களம் கூறியுள்ளது.

ஆகவே குறித்த நிலப்பரப்பினை எல்லைப்படுத்தும் நடவடிக்கையை எதிர்வரும் 18 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானித்து கரைச்சி பிரதேச சபையினால் அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

மரபுரிமைகளை பேண யாழில் உண்ணாவிரத போராட்டம்!

தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று(16) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் ஆரம்பமானது

தமிழ் மக்கள் சார்ந்த தேசிய சக்திகள், சமய சமூக தன்னார்வ அமைப்புக்கள் என பல தரப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் போராட்டத்தின் பிரதான கோரிக்கைகள்

1.அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ சிலைகள் உடனடியாக மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

2.குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய வர்த்தமானி இரத்து நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.

3.இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

4.மட்டு. மயிலத்தனை மடு மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ் பண்ணையாளர்களின் மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை உறுதிப்படுத்த வேண்டும்.

5.போருக்கு பிந்திய இன மதப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட பாரிய குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாநோன்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரியில் தமிழர்களின் மரபுரமைச் சின்னம் விபத்தில் அழிவு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் ஏ9 பிரதான வீதியில் நுணாவில் 190 ஆம் கட்டைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் மரவுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி மீது எரிபொருள் பவுசர் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 3 மணி அளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தினால் தொல்பொருள் திணைக்களத்தினால் மரபுரிமை சின்னமாக அடையாளப்படுத்தப்படாடு பராமரிக்கப்பட்டு வந்த பாரம்பரிய சுமைதாங்கி முற்றாக அழிவடைந்துள்ளது.

இவ்விடத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் மரபுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி, இளைப்பாறும் மடம், குடிநீர்க்கிணறு என்பன காணப்படுகின்றன.

இவ் விபத்தினால் நொருங்கிய சுமைதாங்கியின் கற்களை நுணாவிலில் வசிக்கின்ற தனிநபர் ஒருவர் உழவு இயந்திரத்தின் மூலம் முற்றாக அள்ளிச் சென்றுள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் அப்பகுதியில் இருந்து பொலிஸாரால் கொண்டு செல்வதற்கு முன்னரேயே விபத்தினால் இடிந்த சுமைதாங்கி கற்களை சுமைதாங்கி ஒன்று அவ்விடத்தில் இருந்ததற்கான அடையாளமே தெரியாமால் பொலிஸார் முன்னிலையிலேயே அகற்றியமை அப்பகுதி மக்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுததியுள்ளது.

இன்று காலை 8 மணி அளவில் குறித்த இடிந்த கற்களை பொதுமக்கள் பொலிசார் முன்னிலையில் குறித்த நபர் அள்ளிச் சென்றுள்ளார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாவகச்சேரி நகரசபைக்கு உடனடியாக அறிவித்தும் குறித்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட எவரும் வருகை தரவில்லை.

இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் தொல்பொருள் திணைக்களத்திறகு அறிவித்ததை அடுத்து குறித்த திணைக்களத்தினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

தவிசாளர் நிரோஸ், தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்திய வழக்கு யூலை 17க்கு தவணையிடப்பட்டது

யாழ் – நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட அரச கருமங்களுக்கு முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தடை ஏற்படுத்தினார் என தொடுக்கப்பட்ட வழக்கில், காவல்துறையினர் தாம் மேலதிக ஆலோசனை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து எதிர்வரும் யூலை மாதம் 17 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டது.

வெள்ளிக்கிழமை 31.03.2023 மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ் வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையினைப் பெறுமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே அச்சுவேலி காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது காவல்துறை தரப்பில் இருந்து தாம் மேலதிக ஆலோசனையினைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மன்றில் தெரியப்படுத்தப்பட்டது.

நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் இராணுவத்திணருடன் இணைந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் அத்திபாரம் போன்று வெட்டிய நிலையில், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் நிரோஸ் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

அங்கு முன்னெடுக்கப்பட்ட எதிர்பின் காரணமாக இரண்டாது தடவையாகவும் தொல்லியல் திணைக்களத்தினால் நிலாவரையில் நடவடிக்கையில் ஈடுபட முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளராக பதவி வகித்த தியாகராஜா நிரோஸ் பெருந்தொகையானோரை அழைத்து வந்து தமது கருமங்களுக்கு தடை ஏற்படுத்தனார் என மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

இதனிடையே கடந்த மாதமும் இராணுவத்தினரால் புத்தர் சிலையுடன் பௌத்த கட்டுமானம் ஒன்று நிலாவரையில் நிறுவப்பட்ட நிலையில், அவை தவிசாளர் உள்ளிட்டவர்களின் எதிர்ப்பின் காரணமாக உடனடியாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தகது.

வெடுக்குநாறிமலை விக்கிரகங்களை மீண்டும் பிரதிஷ்டை செய்ய தொல்லியல் திணைக்களம் தடை

நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய புனராவர்த்தன புனர் கும்பாபிஷேகம் நாளை அதிகாலை வைக்க முற்பட்ட சமயம் இன்று மாலை தொல்லியல் திணைக்களம் தடைபோட்டு நிற்கின்றது.

நெடுங்கேணியில் சேதமாக்கிய வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் நாளை அதிகாலை அதே இடத்தில் பிரதிஸ்டை செய்ய ஆலய நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு புதிய சிவன் சிலை எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட சிவலிங்கம் வெடுக்குநாறி மலையில் 300 ஆண்டுகால பழமை வாய்ந்த சிவன், அம்மன், பிள்ளையார் மற்றும் வயிரவர் வழிபட்ட இடத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதன்போது முன்பு சிவலிங்கம் இருந்து உடைக்கப்பட்ட இடத்தில் காணப்பட்ட சீமேந்து துகளை அகற்றி மீண்டும் வைக்கப்படும் லிங்கத்திற்கு இடம் சீர்செய்ய முற்பட்ட சமயம் நெடுங்கேணிப் பொலிசார் அந்த இடத்திற்கு சென்று இதற்கு தொல்லியல்த் திணைக்களம் அனுமதிக்காமல் மேற்கொள்ள முடியாது எனத் தடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வவுனியா நெடுங்கேணி பொலிஸாரால் விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்ய சென்ற இரண்டு மேசன் மற்றும் கூலியாள் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக தற்போது தொல்லியல் திணைக்களத்தினருடன் பேச்சு வார்த்தைகள் இடம்பெறுகின்றன. இதனால் அதிகாலை 12 மணி முதல் 3 மணிவரை உள்ள புண்ணிய காலத்தில் விசேச பூசை வழிபாடுகள் மேற்கொண்டு அதே இடத்தில் மீண்டும் சிவன் பிரதிஸ்டை மேற்கொள்ளப்படுமா என்பது தற்போது கேள்விக் குறியாகியுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

தமிழரின் தொன்மை அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம்- மக்களை அணி திரண்டு போராடவும் அழைப்பு

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் தொல்லியல் சின்னங்கள் அழிக்கப்பட்டு பெளத்த சின்னங்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராகவும் மக்களை அணிதிரண்டு போராடுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிங்கள பேரினவாத சக்திகளால் தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக தமிழ் இனத்தின் தொல்லியல் சான்றுகளை அழிப்பதோடு, பௌத்த சின்னங்களை நிறுவி குடியேற்றங்களை உருவாக்கி வரும் நிகழ்ச்சி நிரல்களுக்கு கடும் எதிர்ப்பினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. அண்மையில் வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் முற்றாக விஷமிகளால் சேதமாக்கப் பட்டுள்ளது. இதேபோன்று கீரிமலையில் அமைந்துள்ள சிவனாலயம் சித்தர் மடங்கள் என்பன நிர்மூலமாக்கப் பட்டுள்ளன. நெடுந்தீவு, கச்சதீவு, மற்றும் நிலாவரையில் புத்தர் சிலை, குருந்தூர் மலையில் பௌத்த ஆலய கட்டிடம், கன்னியா வென்னீரூற்று தொல்லியல் திணைக்களத்தால் கைப்பற்றல் என தொடரும் நடவடிக்கைகளை நாம் முற்றாக கண்டிப்பதோடு அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறோம்.

அதேபோன்று ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஐநா மற்றும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமைய நீக்குவதாக கூறிக்கொண்டு அதைவிட கடுமையான மற்றும் கொடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் முகமாக, வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தை நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கிறோம். அதற்கு எமது கடுமையான எதிர்ப்பையும் பதிவு செய்கிறோம். ஏற்கனவே இருந்த சட்டமூலத்தில் இருக்கும் அனைத்து சரத்துக்களுக்கும் மேலதிகமாக அவசர கால சேவைகளாக கருதப்படும் உணவு உற்பத்தி, விநியோக சேவைகள் என இன்னோரன்ன சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களோ அதைச் சார்ந்த ஊழியர்களோ எந்தவிதமான கருத்து தெரிவிப்பதையோ போராட்டங்களில் ஈடுபடுவதையும் இந்தச் சட்டமூலம் கட்டுப்படுத்துகிறது.

அவசரகால சட்டத்தின் கீழ் பிரகடனப் படுத்தப்படும் அனைத்து சேவைகள் மற்றும் அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் செயலற்றவர்களாக ஆக்கப்படுகின்ற அபாயகரமான நிலையை இந்த சட்ட மூலம் தோற்றுவிக்கிறது.

இது அடிப்படை மனித உரிமை மீறலை முற்றும் முழுதாக மீறுவதோடு தனிமனித பேச்சு சுதந்திரத்தையும் குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையாக நாம் நோக்குகிறோம். இந்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் நாம் சுவாசிப்பதற்கும் உணவு உண்பதற்கும் தவிர வேறு எதற்கும் வாய் திறக்க முடியாதவர்களாக சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்வதற்கு நிர்பந்திக்கப்படுவோம். எமது உரிமை சார்ந்த விடயங்களைப் பற்றி குரல் எழுப்பவோ அடக்குமுறைகள் ஆக்கிரமிப்புகளைப் பற்றி கருத்து தெரிவிக்கவோ முடியாதவர்களாக ஆக்கப்படுவோம்.

இவற்றை எதிர்த்து எமது கண்டனங்களை பதிவு செய்வதோடு மாத்திரமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அணிதிரட்டி இவற்றிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க மக்களை அழைக்கிறோம். கட்சி பேதங்கள், அரசியல் கோட்பாடுகள், சின்னங்கள் என்பவற்றைத் தாண்டி தமிழ்த் தேசிய அரசியலில் பயணிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் மதத் தலைவர்கள் அனைவரையும் எம்மோடு கைகோர்த்து வலுவான போராட்டங்களை முன்னெடுக்க அறைகூவல் விடுக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வெடியரசன் கோட்டை தமிழர்களின் சொத்து“: நெடுந்தீவில் போராட்டம்

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டை அருகில் மக்கள் இன்றைய தினம்(புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டையை பெளத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையை அடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது.

தொல்லியல் திணைக்களம், கடற்படை ஆகியவற்றினரின் செயற்பாட்டை கண்டித்தும், வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து என வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.