வடக்கில் படங்காட்டிய ஜனாதிபதி; கிழக்கில் படங்காட்டிய ஆளுநர் – நிலாந்தன்

புதிய ஆண்டு பிறந்த கையோடு ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தந்த அதே காலப்பகுதியில்,அவருடைய ஆளுநர் கிழக்கில் மிகப்பெரிய பண்பாட்டு விழா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார்.

வடக்கில் ஜனாதிபதி பல்வேறு தரப்புகளையும் சந்தித்தார்.தொழில் முனைவோர்,பல்கலைக்கழகப் பிரமுகர்கள்,குடிமக்கள் சமூகம் என்று சொல்லப்பட்டவர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இசைத்துறையில் விளையாட்டு துறையில் பளு தூக்கும் போட்டியில் சாதனை புரிந்தவர்கள், வடக்கில் கல்விப் பெறு பேறுகளில் சாதனை புரிந்தவர்கள், அரச உயர் அதிகாரிகள்,தனது கட்சிப் பிரதிநிதிகள் என்றிவ்வாறாக பல்வேறு தரப்பட்டவர்களையும் சந்தித்திருக்கிறார்.அவர் யாரைச் சந்திக்க வேண்டும் ,சந்திக்கக் கூடாது என்பதனை அவருக்கு இணக்கமான வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தீர்மானித்திருக்கிறார்கள்.

குறிப்பாக யூ எஸ் ஹோட்டலிலும் பல்கலைக்கழக சமூகத்தின் மத்தியிலும் உரையாற்றும் பொழுது, அவர் பேசியவற்றின் சாராம்சம் என்னவென்றால், மாகாண சபைகளுக்கு போதிய அதிகாரங்கள் உண்டு;மேல் மாகாணத்தில் கட்டியெழுப்பப்பட்டு இருப்பதுபோல பிராந்திய பொருளாதாரங்களைக் கட்டி எழுப்புங்கள்;மாகாண சபைகளின் நிதி அதிகாரம் அதற்குப் போதுமானது; முதலீட்டுக்கு எனது கையைப் பார்த்துக் கொண்டிராதீர்கள்; புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதி உதவிகளையும் துறை சார்ந்த உதவிகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்; அதற்கு நாம் ஒத்துழைப்போம்… என்பதுதான். அதிலும் குறிப்பாக அவர் பொருளாதார வளர்ச்சிக்கு உதாரணங்களாக ஜப்பான், கொரியா,பிரித்தானியா போன்ற ஒற்றையாட்சி நாடுகளை எடுத்துக் காட்டியிருக்கிறார்.அங்கேயெல்லாம் கூட்டாட்சி இல்லை,ஆனாலும் அந்நாடுகள் பொருளாதாரரீதியாகச் செழிப்பாகக் காணப்படுகின்றன என்ற பொருள்பட யூஎஸ் ஹோட்டலில் அவர் பேசியிருக்கிறார்.

மாகாண சபைகள் இயங்காத ஒரு பின்னணியில், இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் நோக்கம் இல்லாத ஒரு ஜனாதிபதி, மாகாண சபைகளுக்கு உள்ள நிதி அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் என்று கூறுகிறார். விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வடமாகாண சபையானது முதலமைச்சர் நிதியம் ஒன்றை உருவாக்க முயற்சித்தது. ஏற்கனவே அதையொத்த நிதியம் மேல் மாகாணத்தில் உண்டு. ஆனால் மத்திய அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.ஆனால் ஜனாதிபதி கூறுகிறார்,13ஆவது திருத்தத்துக்குள் எல்லா அதிகாரங்களும் உண்டு என்று.

அப்படியென்றால் அவர் 2015 இலிருந்து பிரதமராக இருந்த காலகட்டத்தில் கூட்டமைப்போடு சேர்ந்து உருவாக்க முயற்சித்த “எக்கிய ராஜ்ய” என்ற தீர்வு முயற்சிக்குப் பொருள் என்ன? மாகாண சபைக்குள்ள அதிகாரங்கள் போதும் என்றால் எதற்காக அப்படி ஒரு ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய ஏற்பாட்டை குறித்து சிந்தித்திருக்க வேண்டும்?இது பற்றி யாராவது அவர்களிடம் கேள்வி கேட்டார்களோ தெரியவில்லை.ஆனால் வழமையாக இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று கேட்கும் வடக்கு இந்த முறை அது போன்ற கேள்விகளைக் கேட்கவில்லை என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களுக்குச் சொன்னதாக ஒரு தகவல்.

இவ்வாறு ஜனாதிபதி வடக்கில்,படம் காட்டி,படம் எடுத்து,ரியோ கிறீம் ஹவுசில் ஐஸ்க்ரீமும் அருந்தி,பதின்மூன்றுக்குள் எல்லாம் உண்டு என்று கூறிய அதே காலப்பகுதியில்,கிழக்கில் அவருடைய ஆளுநர் பெருமெடுப்பில் ஒரு பண்பாட்டு பெருவிழாவை ஒழுங்குப்படுத்தியிருந்தார்.கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன் நோர்வேயின் அனுசரணையோடு பேச்சுவார்த்தைகள் நடந்த காலகட்டத்தில்,திருகோணமலையில் நடந்த “மானுடத்தின் ஒன்று கூடலுக்குப்” பின் அங்கே நடந்த மிகப்பெரிய அளவிலான ஒன்றுகூடல் அதுவென்று கூறலாம்.அதை ஒரு மெகா நிகழ்வாக ஆளுநர் திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்.அதற்கு இந்தியாவின் உதவிகளையும் பெற்றிருக்கிறார். அதன்மூலம் தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பண்பாட்டு ரீதியிலான பிணைப்புக்களைப் பலப்படுத்தும் முயற்சிகளை வடக்கிலிருந்து கிழக்கிற்கும் விஸ்தரிக்கும் ஒரு எத்தனம் அது.அப்படி ஒரு பண்பாட்டு விழாவிற்கு இந்தியா பக்கத்துணையாக இருக்கிறது என்பது சிங்கள கடும்போக்குவாதிகளை கோபப்படுத்துமா?அல்லது பயப்படுத்துமா? என்பதனைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

குறிப்பாக ஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவுதல் நிகழ்ச்சிக்கு பயிற்சியாளர்கள் முதற்கொண்டு,சிறப்பு விருந்தினர்கள்,அறிவிப்பாளர்கள் வரை தமிழகத்தில் இருந்து தருவிக்கப்பட்டிருக்கிறார்கள்.பொங்கல் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்களை அந்த மைதானத்தில் திரட்டி, நூற்றுக்கணக்கில் பெண்களை ஆட வைத்து,தமிழ் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை அவர் ஏற்படுத்தியிருக்கிறார்.அந்நிகழ்வில் உரையாற்றிய சாணக்கியன் தமிழர்களின் தலைநகர் என்று அழைக்கப்படும் திருகோணமலை என்று உச்சரிக்கிறார்.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களின் மூலம் அதிகம் சிங்கள மயப்படுத்தப்பட்ட ஒரு தமிழ் மாவட்டம் திருக்கோணமலை ஆகும். இப்பொழுதும் அங்கே குன்றுகளாகக் காணப்படும் பிரதேசங்களில் விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன.ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் ஒளிப்படத்தை,வாகன ஊர்தியில் எடுத்துச் சென்றபோது தாக்கப்படும் அளவுக்கு அங்கு தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு நிலைமை உண்டு.அப்படிப்பட்ட ஒரு மாவட்டத்தில் பெருமெடுப்பில் ஒரு தமிழ்ப் பண்பாட்டு விழாவை ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒழுங்கமைத்திருக்கிறார்.

அவர் ஓர் அரச ஊழியர். ஜனாதிபதியின் பிரதிநிதி.ஆனால் நிகழ்வில் அவருக்கு தரப்பட்ட முக்கியத்துவம்; அவரை அங்கு கூடியிருந்தவர்கள் வரவேற்ற விதம்; என்பவற்றைத் தொகுத்துப் பார்க்கும்பொழுது அவருக்கு அங்கே ஒரு கதாநாயக அந்தஸ்து வழங்கப்பட்டது.அவர் பேசுவதற்காக மேடையை நோக்கி வந்த பொழுது “அலப்பறை கிளப்புறோம்” என்ற ரஜினி படப்பாடல் ஒலிக்க விடப்பட்டது. அவர் ஒரு கதாநாயகனைப் போல மேடையை நோக்கி வந்தார். வரும் வழியில் நடனம் ஆடிய பெண்கள் அவரை நிறுத்தி கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அதாவது ஒரு நிர்வாக அதிகாரி கதாநாயகனாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் அந்த பண்பாட்டு விழா நடந்து கொண்டிருந்த அதே மாகாணத்தில், மட்டக்களப்பில்,மயிலத்தமடுவில் மேய்ச்சல் தரையை மீட்பதற்கான போராட்டம் 125ஆவது நாளைக் கடந்து விட்டது. அது மட்டுமல்ல, கிழக்கில் அண்மையில் பெய்த கடும் மழையால்,பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி நிவாரணங்களை வழங்கி வருகின்றது. அந்த ஒளிப்படங்கள் முகநூலில் பகிரப்படுகின்றன.ஒரு பகுதி வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு மாகாணத்தில், இது போன்ற மெகா பண்பாட்டு நிகழ்வுகள் அவசியமா என்ற கேள்விகள் உண்டு. மேய்ச்சல் தரைக்காகப் போராடும் விவசாயிகள் வெள்ளத்தில் நிற்கிறார்கள்;அவர்களுடைய நாட்டு மாடுகளை வெட்டிக் கொல்லப்படுகின்றன அல்லது சுருக்கு வைத்துப் பிடிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத ஒர் ஆளுநர்,காளை மாடுகளை அடக்கும் போட்டிகளை ஒழுங்குபடுத்துகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

செந்தில் தொண்டமான் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்து தமிழ் மக்களைக் கவரும் விதத்தில் எதையாவது செய்ய முயற்சிக்கின்றார்.எனினும் சிங்கள பௌத்தமயமாக்கலையும் நிலப்பறிப்பையும் அவரால் தடுத்துநிறுத்த முடியவில்லை.அதில் அவருடைய அதிகாரம் வரையறைக்கு உட்பட்டது என்பதனை பௌத்த மதகுருமார் நிரூபித்து வருகிறார்கள்.அவ்வாறு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத ஓர் ஆளுநர்,வெள்ள அனர்த்த காலத்தில், பெருமெடுப்பில், பெருந்தொகை நிதியைச் செலவழித்து, ஒரு பண்பாட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்.அதில் அவர் கதாநாயகனாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்.

எனவே கடந்த வாரம் வடக்கிலும் கிழக்கிலும் நடந்தவைகளைத் தொகுத்துப் பார்த்தால், மிகத் தெளிவான ஒரு செய்தி கிடைக்கின்றது. வடக்கில் ஜனாதிபதி பதின்மூன்றாவது திருத்தத்துக்குள் அதாவது மாகாண சபைக்குள் நிதி அதிகாரம் உண்டு என்று கூறுகிறார்.கிழக்கில் அவருடைய ஆளுநர் கதாநாயகனாக மேலெழுகிறார்.13ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையின் ஆளுநர் ஒருவர் கிழக்கில் தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டும் விழாக்களை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார்.அதனால் அவருக்கு வரவேற்பும் கவர்ச்சியும் அதிகரித்திருக்கின்றன.13ஆவது திருத்தத்தின் கீழ் மத்திய அரசின் பிரதிநிதியாக காணப்படும் ஆளுநர் ஒருவர் கதாநாயகனாக மேலுயர்ந்துள்ளார்.அதன் மூலம் ஆளுநர் சக்தி மிக்கவர் அவர் தமிழ் பண்பாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்பிக்கையூட்ட முயற்சிக்கப்படுகின்றது.

இவற்றின் மூலம் மாகாண சபையை ஒரு பலமான அதிகார கட்டமைப்பாக வெளிக்காட்டும் உள்நோக்கம் உண்டு.இதில் இந்தியாவை திருப்திப்படுத்தும் உள்நோக்கமுமுண்டு.வடக்கில் ஒரு சந்திப்பின்போது ஜனாதிபதி இந்தியாவுக்கும் மன்னாருக்கும் இடையிலான தரைப்பாலம் பற்றியும் பேசியிருக்கிறார். அவர் அதை நிறைவேற்ற மாட்டார் என்பது புத்திசாலியான யாருக்கும் விளங்கும்.ஆனால் அவர் அப்படிச் சொல்கிறார்.13ஆவது திருத்தத்தை ஒரு தீர்வாக முன்வைப்பதன் மூலம்,இந்தியாவைத் திருப்திப்படுத்தும் வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம்,கிழக்கில் பண்பாட்டு பெருவிழாவில் இந்தியாவின் உதவிகளை பெற்றதன் மூலம்,அவர் இந்தியாவை சந்தோஷப்படுத்த விளைகிறார்.மாகாண சபைகளைப் பலமானவைகளாகக் காட்ட முயற்சிக்கின்றார்.

-நிலாந்தன்

ஆளுநர் அலுவலக பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நாணய நிதிய பிரதிநிதிகள்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

 

வடக்கு, கிழக்கில் மீள்குடியேறியோரின் காணிப்பிரச்சினைகளுக்கு 2 மாதங்களுக்குள் தீர்வு – பிரதமர் தினேஷ்

வடக்கு, கிழக்கில் இடம் பெயர்ந்து மீள் குடியேறியுள்ள மக்களின் காணிப் பிரச்சினைகள் மற்றும் காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படும். அது தொடர்பில் ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போதும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் மக்களின் காணி விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் சில கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு பல வருடங்கள் எடுத்தன. அதனால் சில பிரதேசங்களில் தற்காலிகமாக குடியேறியவர்களை நிரந்தர குடியேற்றவாசிகளாக்குவதற்கு தேவையான பாதுகாப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதிலும் ஏனைய நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் செய்த ஒவ்வொரு தடவையும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகளும் நடத்தப்பட்டன. அதற்கான மேலதிக நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

1600 குடும்பங்கள் தொடர்பான ஆவணங்கள் இல்லாமலிருந்தன.அந்த வகையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளின் காணிகள் தொடர்பான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வடக்கு கிழக்கில் காணப்படும் காணிகள் அங்கிருந்து இடம் பெயர்ந்த மக்களுக்கு கட்டம் கட்டமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சட்ட பூர்வமற்ற ரீதியில் குடியிருப்போரை அங்கு நிரந்தர குடியிருப்பாளர்களாக்குவதற்கான ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் காணப்படுவதால் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக அதன் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு நடுத்தர மக்களின் காணிகளை மீளப் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் அதன் முதல் உரிமையாளர்கள் உரிமை கோரி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்கள். எவ்வாறாயினும் இரு தரப்புக்குமிடையில் இணக்கப்பாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் சில காணிகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தாமதமாகி யுள்ளன.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்கள் தற்போது வசிக்கும் காணிகளுக்கு சட்டபூர்வமான பதிவுகள் இல்லாத காரணத்தால் அந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அந்த வகையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

அவ்வாறான குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் காணி உரிமைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்கம் கொள்கை ரீதியாக அதனை மேற்கொள்ளவுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டும் அபிவிருத்தி கூட்டங்களில் இதன் குறைபாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அவ்வாறான மக்கள் தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அனைவருக்கும் நலன்புரி மற்றும் நிவாரணங்கள் வழங்குவதில் கவனம் செலுத்தப்படும். விவசாயம், மீன் பிடி அல்லது வேறு தொழில்களில் ஈடுபடுவோர் அனைவருக்கும் அதனை வழங்குவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

அத்துடன் எந்த விவசாயக் காணிகளிலும் சட்டபூர்வமானாலும் சரி சட்டபூர்வமற்ற விதத்திலும் சரி குடியிருப்போரை துரத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும் என்றார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமாவது மாகாண சபைத் தேர்தலை நடாத்திக் காட்டுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜனாதிபதிக்குச் சவால்

13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக கருத்துக்களை வெளியிட்டுவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முதலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமாவது தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சாவால் விடுப்பதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களை முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் தமிழர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதோடு தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றும் வகையில் கருத்துக்களை பகிர்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், 13ஆவது திருத்தச்சட்டமானது பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கு போதுமானது என்றும், புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை செய்வதற்கு வருகை தரவேண்டுமென்றும் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் கூறுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடமாகாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு விடயங்களை கூறுகின்றார். அவருடைய கூற்றுக்களும், செயற்பாடுகளும் அவர் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது பிரசாரத்தின் ஆரம்பத்தை வடக்கிலிருந்து தொடங்குகின்றார் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இதேநேரம், ஜனாதிபதி பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் போதுமானவை என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது இந்தக் கருத்து அடிப்படையற்றதாகும். நாட்டின் நீடித்த இனமுரண்பாடுகளை அடுத்தே இந்திய, இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது என்பது வரலாறு. அவ்வாறான நிலையில், குறித்த திருத்தச்சட்டம் பொருளாதார அபிவிருத்திக்கானது என்று ஜனாதிபதி அர்த்தப்படுத்த முனைவது தவறானதாகும்.

அதேநேரம், மாகாண சபைகளின் ஆயுட்காலம் நிறைவடைந்து ஐந்தாண்டுகளுக்கும் அதிகமான காலம் கடந்த நிலையில் இன்னமும் தேர்தல் நடத்தப்படாது தாமதிக்கப்படுகின்றது. முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு மாகாண சபைகள் இயங்க வேண்டும். அப்போதுதான் மாகாண சபைகள் தமது அதிகாரங்களை பயன்படுத்த முடியும்.

அதேநேரம், கடந்த காலங்களில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் பல்வேறு வழிகளில் மத்திய அரசாங்கத்தினால் மீளப்பெறப்பட்டுள்ளது. ஆகவே அந்த அதிகாரங்களை மீள வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்காத நிலையில் பொருளாதார அபிவிருத்தியை எவ்வாறு மாகாண சபைகளின் நிருவாகத்தினால் முன்னெடுக்க முடியும் என்ற கேள்விகள் காணப்படுகின்றன.

அதுமட்டுமன்றி, ஜனாதிபதி புலம்பெயர் தமிழர்களை முதலீடுகளைச் செய்யுமாறு அழைப்பு விடுகின்றார். புலம்பெயர் தமிழர்கள் தமது மாகாணங்களில் முதலீடுகளைச் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை முதலில் உருவாக்கி அந்த அதிகாரத்தினை மாகாணங்களுக்கு வழங்க வேண்டும்.

அவ்வாறில்லாது, புலம்பெயர் தமிழர்கள் தென்னிலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு முன்வரமாட்டார்கள். ஏனென்றால் 1983ஆம் ஆண்டு தமிழர்களையும் அதற்குப் பின்னர் அண்மைக்காலத்தில் முஸ்லிம்களையும் இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அந்தந்த இனங்களில் பிரபல்யமான வர்த்தகர்களின் நிலைமைகள் எவ்வாறு மோசமடைந்தது என்பதை அனைவரும் அறிவார்கள்.

ஆகவே, இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்படுவது இங்கே முக்கியமானதாகின்றது. இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு காணப்படாத வரையில் தமிழர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தென்னிலங்கையில் இல்லை. கடந்த காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு இன்னமும் பொறுப்புக்கூறப்படாத நிலைமைகளும் நீடிக்கின்றன.

இவ்வாறான நிலையில், புலம்பெயர் முதலீட்டாளர்கள் எவ்வாறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு வருகை தருவார்கள் என்பதை ஜனாதிபதி சிந்திக்க வேண்டும். ஆகவே, ஜனாதிபதி உண்மையில் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளையும், மாகாண சபைகளின் ஊடான அபிவிருத்தியையும் விரும்புபவராக இருந்தால் ஆகக்குறைந்தது வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்காகவாவது தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

வடமாகாண ஆளுநருடன் வெளிநாட்டு தூதுவர்கள் சந்திப்பு

சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும், தென்னாப்பிரிக்கா உயர்ஸ்தானிகரும் வடமாகாண ஆளுநரை சந்தித்தனர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் சிறி வோல்ட் (Dr. Siri Walt), ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகொஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) மற்றும் தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாண்டைல் எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk) ஆகியோர் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நேற்றிரவு சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சிநேகபூர்வ கலந்துரையாடல் நடைபெற்றது.

வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், நல்லிணக்க செயற்பாடுகள், மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

வடக்கிற்கான விஜயத்தை ஆரம்பித்தனர் சீனதூதுவர் தலைமையிலான குழு

இலங்கைக்கான சீனத்தூதுவர் குய் சென் ஹாங் தலைமையிலான குழுவினர் இன்று முதல் வடக்கிற்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

இன்றையதினம், காலை பத்துமணியளவில் வவுனியாவை வந்தடையவுள்ள அக்குழுவினர் வவுனியா மாவட்டத்தில் 500 பேருக்கான வாழ்வாதார பொதிகளைக் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவள்ளனர்.

அதன்பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணிக்கும் அக்குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவிற்கான 500 பொதிகளை மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரனிடத்தில் கையளிப்பதோடு வெலிஓயா பிரதேச செயலகத்திற்கான 250 வாழ்வாதாரப் பொதிகளை அக்குழுவினரே நேரடியான விஜயமொன்றை மேற்கொண்டு வழங்கவுள்ளனர்.

அதனையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் அக்கழுவினர் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடத்தில் வாழ்வாதார பொதிகளை கையளித்த பின்பு யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கவுள்ளனர்.

யாழில் தங்கியிருக்கும் குறித்த குழுவினருடன் சீன பௌத்த அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து நாளை 6ஆம் காலை 9 மணிக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தினைச்  சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதோடு, 10 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரனைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதோடு நெடுந்தீவு மக்களின் வாழ்வாதார உதவியாக  500 வாழ்வாதரப் பொதிகள் கையளிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து மாலை 2 மணிக்கு நாவற்குழி விகாரைக்குப் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதோடு, குறித்த தினம் முன்னிரவில் சிவில் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தத்துறை சார்ந்தவர்கள் சிலரைச் சந்திப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை மறுதினம் 7ஆம் திகதி காலை நயினாதீவு பயணிக்கும் குறித்த குழுவினா நாகவிகாரையில் வழிபாடுகளைச் செய்யவுள்ளதோடு அங்குள்ள பொது மக்களுக்காக 250 வாழ்வாதார பொதிகளை கையளிக்கவுள்ளனர்

பின்னர் அங்கிருந்து யாழ்.திரும்பும் அவர்கள் சிறிது நேரத்தில் மன்னாரிக்குப் பயணித்து 8ஆம் திகதி மன்னார் மாவட்டச்செயலாளர் அ.ஸ்ரான்லி டிமலைச் சந்திக்கவுள்ளதோடு அங்கும் பொதுமக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளதோடு அன்றையதினம் மாலையில் வடக்கிற்கான விஜயத்தினை நிறைவு செய்துகொண்டு கொழும்பு நோக்கி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்தின் உட்கட்டமைப்பு பொது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் பூரண ஆதரவு

வடமாகாணத்தின் உட்கட்டமைப்பு மற்றும் பொது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திரு.ஜீன் பிரான்கொயிஸ் பக்டேட் (Jean Francois Pactet) தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது வடமாகாண மக்களின் பொதுவான உட்கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் பிற வளர்ச்சி செயல்முறைகள் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் இப்பகுதி சிறுவர்களின் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் பூரண அனுசரணையை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆளுநர் பிரான்ஸ் தூதுவரிடம் விளக்கி கூறினார். வடமாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் பிரான்ஸ் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் இராணுவக் குறைப்புக்கு தீர்மானமில்லை – இராணுவ பேச்சாளர்

வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான கட்டளைத் தளபதிகளின் எண்ணிகை இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது என வெளியான தகவல் தொடர்பில் கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்குறைப்பு செய்யப்படவில்லை எனவும், கட்டளைத் தளபதிகளின் எணிக்கை குறைக்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவான இராணுவத்தினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொதுமக்களின் பெருமளவான காணிகளும் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அவ்வப்போது படையினரின் தேவைக்காகக் காணிகளும் அளவீடு செய்யப்படுகின்றன.

இந்நிலையில், வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என அரசியல்வாதிகளும், பொதுமக்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், வடக்கு, கிழக்கில் அதிகளவான படையினர் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எனச் சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே, வடக்கு, கிழக்கில் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்கப் போவதில்லை என இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ள நிலையில் இராணுவத்தினரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு-கிழக்கில் விகாரைகளை நிர்மாணிக்கக் கூடாது என எந்தச் சட்டத்தில் உள்ளது? – அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. அவர்கள் அங்கு சென்று சுதந்திரமாக வழிபடுகின்றார்கள். இந்நிலையில், 25 மாவட்டங்களிலும் சிங்களவர்களுக்காகப் பௌத்த விகாரைகள் இருப்பதில் என்ன பிரச்சினை? வடக்கு – கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் உள்ளது.”

– இவ்வாறு கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க.

‘திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 238 சிங்களவர்களுக்கு 23 பௌத்த விகாரைகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன. 10 சிங்களவர்களின் வழிபாட்டுக்காகத் தலா ஒரு விகாரை வீதம் அமைக்கப்படவுள்ளது. குச்சவெளி பகுதியில் இந்தப் புதிய விகாரைகளை அமைக்கும் திட்டத்துக்கான அனுமதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது’ – என்று கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகள் இருக்கக்கூடாது – புதிதாக நிர்மாணிக்கப்படக் கூடாது என்று யார் சொன்னது? அப்படியாயின் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்களா? வடக்கு – கிழக்கில் மாத்திரம் தமிழர்களுக்கு இந்து ஆலயங்கள் அமைக்கப்படவில்லை. நாட்டின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இந்து ஆலயங்கள் பெருமளவில் உள்ளன. உதாரணத்துக்குக் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் எத்தனை இந்து ஆலயங்கள் உள்ளன? அங்கு மூலைமுடுக்கெல்லாம் பெரிய, சிறிய இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராகச் சிங்கள பௌத்தர்கள் போர்க்கொடி தூக்கினார்களா? பல இடங்களில் இந்து ஆலயங்களுக்குச் சென்று சிங்கள பௌத்தர்கள் கூட வழிபடுகின்றார்கள்.

எனவே, தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் இனவாதத்தை – மதவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

இன்று நாட்டு மக்களுக்கிடையில் இனவாத, மதவாதப் பிரச்சினைகள் இல்லை. தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும்தான் இப்படியான பிரச்சினைகளைத் தூண்டி விடுகின்றன.” – என்றார்.

தமிழர் பிரதேசங்களை பெளத்த தொல்லியல் இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது – ஆறு திருமுருகன்

இலங்கையில் உள்ள தமிழர் பிரதேச இடங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என இந்து சமய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கூட்டமைப்பு சார்பாக அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு தமிழர்களின் பாரம்பரிய அடையாளச் சின்னங்களை பௌத்த அடையாள இடங்களாக மாற்ற நினைப்பது மிகுந்த வேதனை தருகிறது. கிழக்கில் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சைவ மக்களின் புனித தீர்த்தமாக பலநூறு வருடங்களாக பேணிப்பாதுகாக்கப்பட்டது.

சைவசமயத்தை பெரிதும் நேசித்த இலங்கை வேந்தன் இராவணனோடு தொடர்புடைய இப்புனித தீர்த்தம் இன்று தொல்லியல் திணைக்களத்தின் பெயரால் அபகரித்துள்ளமை அநீதியான செயலாகும். தொடர்ந்து தொன்மை வாய்ந்த சைவ ஆலயங்களை திட்டமிட்டு அபகரிக்க நினைப்பது அதர்மச் செயலாகும்.

தற்போது பறளாய் முருகன் கோவிலில் உள்ள அரசமர விருட்சத்தை சங்கமித்தை வரலாற்றோடு தொடர்புபடுத்தி வர்த்தமானி வெளியிட்டுள்ளமை சைவ மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. சைவ நிறுவனங்களையோ, வடக்கில் உள்ள பல்கலைக்கழக அறிஞர்களையோ தொடர்பு கொள்ளாமல் தொல்லியல் திணைக்களம் புதிய பிரகடனங்கள் செய்வது கவலையளிக்கிறது. கீரிமலைப் புனித தீர்த்த கேணியை திடீரென தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது மிகவும் தவறான செயலாகும்.

தெல்லிப்பழை கிராம முன்னேற்றச் சங்கம், வல்லிபுரம் என்ற பெரியவரின் நிதியுதவியுடன் 1916ஆம் ஆண்டு தூர்வைக் குளமாக இருந்த இக்கேணியை பொலிகலால் கட்டி பாதுகாத்தது. இன்றுவரை வலிவடக்குப் பிரதேசசபை குளத்தைப் பாதுகாப்பதுடன் காவலர்களை நியமித்து கண்காணித்து வருகிறார்கள்.

திணைக்களத்திற்கு உரித்தாக பிரகடனம் செய்திருப்பது நீதியற்ற செயல். எனவே ஜனாதிபதி தொல்லியல் திணைக்களத்தின் மேற்குறித்த பிரகடனங்களை மீளப்பெறுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைவமக்களின் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம் தங்களிடம் தெரிவித்துக்கொள்கிறது. தாங்கள் இவ்விடயத்தில் உடன் அக்கறை எடுத்து ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம் என்றுள்ளது.