சவேந்திர சில்வாவிற்கு பிரித்தானியா தடை விதிக்க கோரி கையெழுத்து சேகரிப்பு

இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் என கோரும் மனுவிற்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை சர்வதேச அமைப்பொன்று ஆரம்பித்துள்ளது.

இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் என்ற அமைப்பு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை இணையத்தளத்தில் ஆரம்பித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கையின் மிகமோசமான யுத்த குற்றவாளியான சவேந்திரசில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் இந்த மனுவை சமர்ப்பிக்கின்றோம் என இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற நம்பகதன்மை மிக்க மனித உரிமை அமைப்பு ஜெனரல்சவேந்திரசில்வா குறித்த 50 பக்க ஆவணமொன்றை தயாரித்து 2020 ஜூலை மாதம் பிரிட்டிஸ் அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாக அறிகின்றோம் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் குறித்த பிரிவிடம் இந்த ஆவணங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சமர்ப்பித்துள்ளது இந்த ஆவணம் 2020 ஜூலை ஆறாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தடை நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் ஏன் சவேந்திரசில்வாவை தடை செய்யலாம் என தெரிவிக்கின்றது எனவும் இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிகாலங்களில் சவேந்திரசில்வா 58 படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றியவேளை உயிர்வாழ்வதற்கான உரிமை உட்பட மீறப்பட்டமை உட்பட இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களில் சவேந்திரசில்வாவிற்கு உள்ள தொடர்பு குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் ஆவணம் தெளிவாக தெரிவித்துள்ளது எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் பெருமளவானோர் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் உட்பட பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், உலகத்தமிழர் வரலாற்று மைய “முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் “பெருமளவானோர் மனமுருகி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

இருபத்தொரம் நூற்றாண்டில் உலகமே பார்திருக்க ஓர் இனம் இனப்படுகொலை செய்யப்பட்டு, அடக்குமுறைக்கு உள்ளான அடையாளங்கள் அனைத்தும் சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி வல்லாதிக்க சக்திகளின் கொடும் கரம் கொண்டு வஞ்சம் தீர்க்கப்பட்டு இன்றோடு 14ஆண்டுகள் கடந்தும், எம்மின உறவுகளின் உள்ளங்களில் என்றும் துயர்நிறைந்த அந்த கொடூர நாட்களின் வடுக்கள் என்றும் நெருப்பாக பற்றி எரிந்துகொண்டே இருக்கிறது அது, ஓர் நாள் அவர்களின் இழப்பிற்கெல்லாம் நிச்சயமாக விடிவைப்பெற்றுத்தரும்.

முள்ளிவாய்கக்காலின் இறுதி நாட்களில் கொத்துக்கொத்தாக தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் வழமை போல் இந்த ஆண்டும் உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாயக்கால் நினைவு முற்றத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொள்ள உணர்வெழிச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பொது ஈகைச்சுடரினை அற்புதவிநாயகர் ஆலய பூசகரான குருக்கள் பிரம்மச்சிறிசதீஸ்வர சர்மா அவர்களும், நாடு கடந்த அரசாங்க பிரதிநிதி சாமினி இராமநாதன் அவர்களும் , இளையோர்களான செல்வன் சோதிதாஸ் மதி,மற்றும் பேரின்பநாதன் சஞ்சிகா அவர்களும் , முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் மகன் செல்வன் ஆரகன் அவர்களும் ஏற்றிவைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பிரித்தானியா கொடியினை உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் ஆலோசகர் பாலகிருஸ்ணன் (பாலா மாஸ்ரர்) ஏற்றிவைத்துள்ளார்.

ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் செங்குருதியால் தமிழர்களின் அடையாளமாக பட்டொளி வீசிப்பறந்த தமிழீழ தேசியக்கொடியினை முன்னாள் போராளி கபில் ஏற்றிவைத்துள்ளார்.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, அகவணக்கம் செலுத்த, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என அடையாளப்படுத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமை நினைவாக ஏற்றிவைக்கப்படும் “இனப்படுகொலையின் பிரதானச்சுடரினை” இன அழிப்பினை அடையாளப்படுத்தும் இசை ஒலிக்க, பிரிகேடியர் ஆதவனின் துணைவியார் சுதா ஏற்றிவைத்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தமது உறவுகளை நினைவில் நிறுத்தி ஒழுங்குபடுத்தப்பட்ட சுடர்களை மனமுருகி கண்களில் கண்ணீர் சொரிய ஏற்றி வைத்து ஆத்மார்த்தமாக வணக்கம் செலுத்தியுள்ளனர்.

மேலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்ததூபிக்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்து ஆரம்பித்து வைக்க,நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்களை ஏற்றி,மலர் வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து முள்ளிவாயக்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்கான இறையாசி வேண்டிய உரையினை ஒக்ஸ்பேட் அற்புத விநாயகர் ஆலய குருக்கள் பிரம்மசிறி சதீஸ்வரசர்மா நிகழ்த்தியுள்ளார்.

மேலும்,வளாகத்தில அமைந்துள்ள ஆலயங்களில் ஆத்ம சாந்தி பூசை வழிபாடுகளும் நடைபெற்றுள்ளன

மேற்படி அனைத்து நிகழ்வுகளையும், தமிழர் கலைபண்பாட்டு நடுவமும், தமிழீழ மாவீரர் பணிமனையும் இணைந்து “வீழ்ந்தது அவமானமல்ல, வீழ்ந்து கிடப்பதே அவமானம், மீண்டெழ முயற்சிப்போம்” என ஒழுங்கு செய்துள்ளனர்.

இலங்கை போர்க் குற்றவாளிகளை பிரிட்டன் தடை செய்ய வேண்டும் – தமிழருக்கான பிரிட்டனின் சகல கட்சிகளின் எம். பிக்கள்

இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் என தமிழர்களிற்கான பிரிட்டனின் அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் எலியட் கோல்பேர்ன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14 ஆண்டை குறிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஏனைய சர்வதேச நாடுகளை பின்பற்றி பிரிட்டன் இலங்கையின் யுத்தகுற்றவாளிகளிற்கு எதிராக மக்னிட்ஸ்கி பாணியிலான தடைகளை விதிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கு மன்னிப்பு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நீதிவழங்கப்படும்,தமிழர்கள் செழிக்ககூடிய எதிர்காலத்திற்காக நாம் உழைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எரிபொருள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான நிழல் அமைச்சர் பரிகார்டினர் இலங்கையில் நிலைமை இன்னமும் மாற்றமடையவில்லை என தெரிவித்துள்ளார்.

இன்னும் மனித உரிமை பேரவையின் எத்தனை அறிக்கைககள் தேவை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கில் இராணுவபிரசன்னத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள ஹரி பார்டினர் இலங்கை தனது திறமையையும் ஆளுவதற்கான உரிமையையும் இழந்துவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் கட்சியால் இலங்கை மீது கொடுக்கப்படவேண்டிய அழுத்தங்களை கொடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நான் உங்கள் போராட்டத்திற்கு எப்போதும் ஆதரவளிப்பது குறித்து பெருமிதம் அடைகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்திற்குமேலாகின்ற போதிலும் எவரும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தாதது குறித்து ஆசிய பசுபிக்கிற்கான நிழல் அமைச்சர் கதரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.

தொழில்கட்சி வலுவான ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்தை கொண்டுவரும் என தெரிவித்துள்ள கதரின் வெஸ்ட் இலங்கை அரசாங்கத்தின் யுத்தகுற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணையை கொண்டுவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக ஒரு தடையை கூட பிரிட்டன் விதிக்காதமை குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன்மெக்டொனாக் இது அமெரிக்காவின் நடவடிக்கைகளிற்கு முரணானது அமெரிக்கா இதுவரை இலங்கையின் பல அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது எனவும்குறிப்பிட்டுள்ளார்.

எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் இலங்கையில் பொறுப்புக்கூறல் நீதிக்காக தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தொடர்ந்தும் குரல் கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

45 ஆண்டுகளுக்கு மேலாக கறைபடாத பணியில் ஈடுபட்டுள்ளதாக வசந்த கரன்னகொட கடிதம்

அமெரிக்காவினால் அண்மையில் கருப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட கடற்படையின் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கரன்னகொட அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் இயற்கை நீதிக் கோட்பாட்டை மீறும் வகையில் தன்னை கறுப்புப் பட்டியலில் இணைத்த தீர்மானத்தின் மூலம், தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

45 ஆண்டுகளுக்கும் மேலாக கறைபடாத அரச பணியில் நான் பெற்ற கௌரவம் மற்றும் நற்பெயரை இந்த தவறான குற்றச்சாட்டுகள் கடுமையாக தன்னை பாதித்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது ஐ.சி.சி.பி.ஆர். இன் 17வது பிரிவின் கீழ் எனது உரிமைகளை நேரடியாக மீறுவதாக உள்ளது என்றும் இதற்காக பரிகாரம் தேடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் தமக்கு அறிவிக்கவில்லை எனவும் முன்னாள் கடற்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடை விவகாரத்தை அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு முன்கூட்டியே தெரிவித்ததாகவும் இது ஊடகங்களில் வெளியானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெற்றது என்ற தவறான பிரச்சாரத்திற்காக தான் இந்த விவகாரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் வசந்த கரன்னகொட குறிப்பிட்டுள்ளார்.

தன்னை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அமெரிக்காவின் முடிவு இயற்கை நீதிக் கோட்பாட்டை மீறும் வகையில் அமைந்துள்ளது என்றும் வசந்த கரன்னாகொட அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்க கறுப்பு பட்டியலில் இணைப்பு

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், அவர் மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அவருக்கு விசா வழங்க மறுப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்டோருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், அவர் குறித்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்ததுடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வடமேல் மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.

கரன்னாகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ‘தீவிரமான மற்றும் நம்பகத்தன்மையுடன்’ இருப்பதாகவும், ஆளுநரோ அல்லது அவரது மனைவியோ அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், இலங்கையில் குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்கா தமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

வடக்கு,கிழக்கில் பெளத்த சின்னங்களை அழித்தே இந்து கோயில்கள் கட்டப்பட்டுள்ளன

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டே இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பௌத்த மரபுரிமைகளை அழிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு,நாம் பொறுமையுடன் செயற்படுகிறோம் எனத்தெரிவித்த முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியல் அட்மிரல் சரத் வீரசேகர நாட்டில் இனப்பிரச்சினை உள்ளது என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்,ஆனால் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று இல்லை எனவும் அடித்துக்கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி.இறக்குமதி கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

வடுகங்கல பகுதியில் உள்ள சிவன் கோயிலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் அரசியல் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.

வடுங்கல பகுதியில் பௌத்த சின்னங்கள் காணப்பட்டுள்ளமை தொல்பொருள் சான்றுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களை சிதைத்து சட்டத்திற்கு முரணாக சிவன் கோயிலை அமைக்கும் தரப்பினருக்கு எதிராக சிவனின் சாபம் திரும்புமே தவிர ஏனைய தரப்பினருக்கு அல்ல,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளினால் தான் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் குருந்தூர் மலையில் பழமை வாய்ந்த பௌத்த மரபுரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது,பௌத்த வழிபாடுகளுக்கும் தமிழ் அரசியல் தரப்பினர் தடையேற்படுத்தியுள்ளார்கள்.

தேரவாத பௌத்த கொள்கையை பாதுகாக்கும் ஒரு நாடாக இலங்கை உள்ளது.ஆகவே பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு. இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இனவாத முரண்பாடுகளை தமிழ் அரசியல்வாதிகளே தோற்றுவிக்கிறார்கள். நாட்டில் இனப்பிரச்சினை உள்ளது என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்,ஆனால் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று இல்லை. பிரதான நிலை வர்த்தகத்தில் தமிழர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களின் வாடிக்கையாளர்களாக சிங்களவர்கள் உள்ளார்கள், இனப்பிரச்சினை என்பதொன்று இருக்குமாயின் இந்த நிலை காணப்படாது.ஆகவே இல்லாத இனப்பிரச்சினையை தமிழ் அரசியல்வாதிகளே தோற்றுவிக்கிறார்கள்.

பௌத்த மரபுரிமைகளை அழிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு, பொறுமையுடன் செயற்படுகிறோம்,கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.சிங்கள மரபுரிமைகள் அழிக்கப்படுகின்ற நிலையில் சர்வதேச மட்டத்தில் சிங்களவர்களுக்கு எதிராக தவறான நிலைப்பாடு தோற்றுவிக்கப்படுகிறது.தமிழ் இனப் படுகொலைக்கு சிங்களவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கனடாவில் அண்மையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.இது முற்றிலும் தவறானது

தமிழ் மக்களை பாதுகாப்பதற்காகவே யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் விடுதலை புலிகள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது.இலங்கையில் எவ்வித இனபடுகொலையும் இடம்பெறவில்லை என்பதை சர்வதேச நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்றார்.

சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நிறுவுமாறு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தல்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை முன்னிறுத்தி சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நிறுவுவதன் அவசியம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான சர்வதேச நாடுகளின் தூதுவர்களிடம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், அது இன்றுடன் முடிவுக்கு வருகின்றது.

அந்தவகையில் பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழர் நடவடிக்கைக்குழு மற்றும் சுவிஸ்லாந்து தமிழர் நடவடிக்கைக்குழு ஆகிய புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான சர்வதேச நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரஇறுதியில் நடைபெற்றது.

இதன்போது இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணைகள், மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிரான தடைவிதிப்பு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுவதற்கான சாத்தியப்பாடு, அரசியல் தீர்வு ஆகிய விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வை வழங்குதல் மற்றும் இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை முன்னிறுத்தி சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் இதன்போது வலியறுத்தப்பட்டது.

IMF உதவி இலங்கைக்கான நிரந்தர ‘பிணையெடுப்பு’ அல்ல – பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டு

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம் ஒரு ‘பிணையெடுப்பு’ (பெயில்-அவுட்) அல்ல. இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படுமே தவிர, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு வழங்கப்படமாட்டாது.

எனவே, நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதை தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் இந்த உதவிச் செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு அப்பால் அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளியல் நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கைக்கான 3 பில்லியன் டொலர் உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளியல் அமைப்புக்களும், பொருளாதார நிபுணர்களும் இதுபற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

‘அட்வகாட்டா’ அமைப்பு

இலங்கைக்கான 17ஆவது உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை வழங்கியுள்ள அனுமதி வெறும் ஆரம்பம் மாத்திரமேயாகும். கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் அல்லது மந்தகதியிலான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக கையிருப்பு பற்றாக்குறை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகளுக்கு உதவுவதே நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச் செயற்றிட்டம் ஒரு ‘பிணையெடுப்பு’ (பெயில்-அவுட்) அல்ல. மாறாக இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படும். இது இலங்கை இருதரப்பு, பல்தரப்பு மற்றும் நிதியியல் சந்தைகளை நாடுவதற்கு உதவும்.

எது எவ்வாறிருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம், இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வினை வழங்காது.

ஆகவே, தற்போது சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதியைத் தொடர்ந்து முதலாவது கட்டமாக இலங்கைக்கு 333 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும். அதனையடுத்து கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான மதிப்பீடு மற்றும் சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்றிட்ட நிபந்தனைகள் என்பன பகிரங்கப்படுத்தப்படும். எஞ்சிய நிதி சுமார் 4 வருடகாலத்தில் வழங்கப்படும்.

இருப்பினும், அது நாணய நிதியத்தின் நிபந்தனைகள் உரியவாறு நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியிருக்கிறது. இருப்பினும், இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதைத் தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் இவ்வுதவிச் செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு அப்பால் அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது இன்றியமையாததாகும் என்று ‘அட்வகாட்டா இன்ஸ்டியூட்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

‘வெரிட்டே ரிசேர்ச்’ அமைப்பு

வழமையாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்கள் பிரச்சினையின் அறிகுறிகளை தணிப்பதற்கு ஏற்ற வகையிலேயே வடிவமைக்கப்படும். மாறாக, அது அப்பிரச்சினைக்கான அடிப்படை காரணத்துக்கு தீர்வினை வழங்காது. அதேபோன்று இலங்கையை பொறுத்தமட்டில், இங்கு அடிப்படை பிரச்சினை நிர்வாகத்திலும், ஊழல் மோசடிகளிலுமே இருக்கின்றது என்பது தற்போது சர்வதேச நாணய நிதியத்துக்கும் ஏனைய அனைத்து தரப்பினருக்கும் தெளிவாக புரிந்திருக்கிறது.

இருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய செயற்றிட்டம் இப்பிரச்சினையை கையாள்வதற்கு தவறியிருக்கிறது என்று ‘வெரிட்டே ரிசேர்ச்’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஷான் டி மெல் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளியலாளர் ஸேர்கி லேனோ

இலங்கைக்கான உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்திருப்பதுடன், முதற்கட்டமாக சுமார் 330 மில்லியன் டொலர்களை உடனடியாக வழங்கியுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு நாணய மாற்றுக்கையிருப்பில் 15 சதவீத அதிகரிப்பு ஏற்படுவதுடன் அது அத்தியாவசிய பொருட்களின் உயர்வான இறக்குமதிக்கும், அதனைத் தொடர்ந்து மீட்சிக்கும் பங்களிப்பு செய்யும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பொருளியலாளர் ஸேர்கி லேனோ தெரிவித்துள்ளார்.

பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க்

இலங்கைக்கு அடுத்துவரும் 4 வருட காலத்தில் 3 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கான உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்திருக்கிறது.

கடந்த 1965ஆம் ஆண்டிலிருந்து இலங்கை 16 முறை சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கிறது. அவை அனைத்தும் தோல்வியடைந்திருக்கின்றன.

இலங்கைக்கு மீண்டுமொரு கடன் தேவையில்லை. மாறாக, கடந்த 1884 – 1950 வரையான காலப்பகுதியில் நடைமுறையில் இருந்ததைப் போன்ற ‘நாணயச்சபை’ முறைமையே இலங்கையின் தற்போதைய தேவை என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க் தெரிவித்துள்ளார்.

இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இல்லை –

இலங்கை இராணுவ அதிகாரிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மை அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் ஏற்பாடுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பது குறித்த மீளாய்வுக்கூட்டத்தில் குறித்த குழு முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்தோடு அரச அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் கொண்டிருந்த நிபுணத்துவத்தின் அடிப்படையில் அதற்கு தகுதி பெற்றிருந்தார்கள் என்றும் ஹிமாலி அருணதிலக தெரிவித்துள்ளார்.

மேலும் பாலின சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் உள்ளிட்ட பல அபிவிருத்திகள் இலங்கைக்குள் இடம்பெற்றுள்ளதாகவும் அனைத்து மக்களுக்குமான மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

21 ஆவது திருத்தும் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனநாயக ஆட்சி, முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வை, அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் அமைப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பீர்களா ? – பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் அந்நாட்டு அரசாங்கத்திடம் கேள்வி

இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடா மற்றும் அமெரிக்காவைப்போன்று தமது நாடு தடைகளை விதிக்குமா? என்று பின்லாந்து அரசாங்கத்திடம் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பான கேள்விகளை பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ அந்நாட்டு அரசாங்கத்திடம் எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை அரசாங்கத்தினால் தமிழ்மக்களுக்கு எதிராகத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இனப்படுகொலை குறித்தும் அவர் அந்த எழுத்துமூல ஆவணத்தில் உள்ளடக்கியுள்ளார்.

அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்ற போதிலும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான மிகக்குறைந்தளவிலான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகப் பின்லாந்திலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தடைகள் விதிக்கப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை வழங்கியமைக்காக பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீக்கு நன்றி தெரிவித்திருக்கும் தமிழீழ சர்வதேச இராஜதந்திரப்பேரவை, போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக ஏனைய சர்வதேச நாடுகளும் தடைகளை விதிக்க முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.