குமாரபுரம் படுகொலையின் 28வது நினைவேந்தல்

1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி – குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வாள்வெட்டு தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அத்தோடு, 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையும் இடம்பெற்றது.

இப்படுகொலை சம்பவம் தொடர்பாக 1996ஆம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெகிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8 இராணுவ வீரர்கள் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர், இவ்வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டது.

அடுத்து, இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் (பிணையில் இருந்தபோது இருவர் இறந்துவிட்டனர்) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த படுகொலைச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட உறவுகள் 28 ஆண்டுகளாக தமக்கு கிடைக்கப்பெறாத நீதியினை கோரி வருகின்றனர்.

இந்த இனப்படுகொலையால் பாதிப்புக்குள்ளான மக்கள், துயரிலிருந்து மீள முடியாமலும், பொருளாதார ரீதியில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமையும் பெரும் பிரச்சினையாக காணப்படுகிறது.

தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர்

சுப்பையா சேதுராசா

அழகுதுரை பரமேஸ்வரி

அருமைத்துரை வள்ளிப்பிள்ளை

கிட்ணன் கோவிந்தன்

அருணாசலம் தங்கவேல்

செல்லத்துரை பாக்கியராசா

வடிவேல் நடராசா

இராஜேந்திரம் கருணாகரம்

சண்முகநாதன் நிதாந்தன்

இராமஜெயம் கமலேஸ்வரன்

கந்தப்போடி கமலாதேவி

சிவக்கொழுந்து சின்னத்துரை

சிவபாக்கியம் நிசாந்தன்

பாக்கியராசா வசந்தினி

அமிர்தலிங்கம் ரஜனிகாந்தி

தங்கவேல் கலாதேவி

ஸ் ரீபன் பத்துமா

சுந்தரலிங்கம் பிரபாகரன்

சுந்தரலிங்கம் சுபாஜினி

கனகராசா சுவாதிராசா

சுப்பிரமணியம் பாக்கியம்

விநாயகமூர்த்தி சுதாகரன்

ஆனந்தன் அன்னம்மா

விஜயகாந் லெட்சுமி

அருமைத்துரை தனலெட்சுமி உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தவர்கள் ஆவர்.

இலங்கையில் நீதியை நிலைநாட்டும் சட்டங்கள் சர்வதேச தரத்துக்கு அமையவே கொண்டுவரப்படுகின்றன – நீதியமைச்சர் விஜயதாஸ

இலங்கையில் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை உறுதிப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் சர்வதேச தரத்துக்கு உட்படும் வகையில் வெளிப்படைத் தன்மையை பாதுகாத்துக்கொண்டு கொண்டுவரப்படுகின்றன என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அன்றூ பிரேன்ச் மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் வியாழக்கிழமை (18) நீதி அமைச்சில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கையில் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை உறுதிப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் சர்வதேச தரத்துக்கு இசைவாக வெளிப்படைத் தன்மையை பாதுகாத்துக்கொண்டு கொண்டுவரப்படுகின்ற விடயத்தை சுட்டிக்காட்டியதுடன் உலக நாடுகளில் நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகளை வெற்றிகரமாக்கிக்கொள்ளும் காலத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுபவங்கள் தொடர்பாகவும் ஒருங்கிணைப்பாளர் அமைச்சருடன் கருத்து பரிமாறிக்கொண்டுள்ளார்.

அத்துடன் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையை மிகவும் உறுதிமிக்கதாக முன்னெடுத்துச் செல்வதற்காக கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்கள் அனைத்தும் மிகவும் ஜனநாயக முறையில் அனைவரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு அந்த சட்டங்கள் அமைக்கப்பட்ட முறை தொடர்பாகவும் அமைச்சர் ஒருங்கிணைப்பாளருக்கு தெளிவு படுத்தியிருந்தார்.

அதேபோன்று எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல் மிகவும் முக்கியமாகும் எனவும் அமைச்சர் இதன்போது எடுத்துரைத்துள்ளதாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் வாக்குகளுக்காக இராணுவத்தை காட்டிக்கொடுக்க முயற்சிக்கும் ரணில் – விமல் குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வாக்குகளை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் சட்டங்களை இயற்ற முயற்சிக்கிறார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கு எதிரான கீழ்த்தரமான செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் முன்னெடுத்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு அப்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 30 \1 தீர்மானத்துக்கு இணை அனுசரனை வழங்கினார்.

இந்த தீர்மானத்தை நாட்டு மக்களும், பாராளுமன்றமும் அப்போது அறிந்திருக்கவில்லை.

நாட்டுக்கு எதிராக ஒப்பந்தங்கள் மற்றும் தீர்மானங்களில் இருந்து விலகுவதாக 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ராஜபக்ஷர்கள் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள்.

அந்த வாக்குறுதிகளுக்கு அமைய கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் தோற்றுவித்தார்கள்.

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 30 \ 1 தீர்மானத்துக்கு இணையனுசரனை வழங்கும் இணக்கப்பாட்டில் இருந்து இலங்கை விலகியுள்ள நிலையில் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்களில் பல சட்ட வகிபாகத்துடன் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆகவே இராணுவத்தினருக்கு எதிராக எவர் வேண்டுமானாலும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம். பொய் சாட்சியம் வழங்கலாம்.சரத் பொன்சேகாவை தவிர ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் வகையில் செயற்படுகிறார்.

ஆச்சரியம் என்னவென்றால், யுத்த வெற்றியை பிரதான தேர்தல் பிரசாரமாக கொள்ளும் ராஜபக்ஷர்கள் இராணுவத்தினருக்கு எதிரான சட்டமூலங்களுக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள்.

ஆகவே இந்த சட்டமூலத்துக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு எனும் விஷச்செடியை வேருடன் ஒழிக்க வேண்டும் – உதய கம்மன்பில

தண்டிக்கப்பட வேண்டிய போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்திய இராணுவத்தினரை தண்டிக்கும் வகையில் சட்டமியற்றுவது எந்தளவுக்கு நியாயமானது.

தண்டனை மற்றும் மன்னிப்பு என்பன இருதரப்புக்கும் வழங்க வேண்டும். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு என்ற விஷச் செடியை வேரோடு அழிக்க மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நிறுவனங்களை அவமதித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் விருப்பத்துக்கு அமைய எவரையும் விசாரிக்க முடியாது.பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்கவும் முடியாது.ஆகவே சிறப்புரிமைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலில் விளக்கம் பெற வேண்டும் அத்துடன் நாட்டு மக்களை போல் பாராளுமன்ற உறுப்பினர்களும் சாதாரணமானவர்கள் என்பதையும் மக்கள் பிரதிநிதிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளிவிவகார அமைச்சர் கடந்த முதலாம் திகதி வெளியிட்டுள்ளார். உண்மையை கண்டறியும் விவகாரம் நீதியமைச்சுடன் தொடர்புடைய நிலையில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஏன் வர்த்தமானியை வெளியிட வேண்டும் . பிரிவினைவாத கொள்கையுடைய மேற்குலக நாடுகளில் நோக்கங்களுக்கு அமையவே வெளிவிவகாரத்துறை அமைச்சர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவின் உண்மையை கண்டறியும் மாதிரியிலான ஆணைக்குழுவை அமைப்பதாக குறிப்பிடப்படுகிறது.ஆனால் அது உண்மையல்ல,2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக பல தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளன.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் தேசிய மட்டத்தில் இவ்வாறான சட்டங்கள் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 17 ஆயிரம் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டது.தண்டிக்கப்பட வேண்டியவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினரை தண்டிக்கும் வகையில் சட்டமியற்றுவது எந்தளவுக்கு நியாயமானது.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டு மக்கள் உயிர் வாழும் சூழலை இராணுவத்தினரே உறுதிப்படுத்தினார்கள்.ஆகவே இராணுவத்தினரை வஞ்சிக்கும் இந்த உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அமைக்கும் சட்டமூலம் என்ற விஷச் செடியை வேருடன் அழிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுப்பட வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

11 இளைஞர்கள் கடத்தல் : வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு!

கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் கப்பம் பெறும் நோக்கத்தில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கியமை  தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட, தன்னை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கையையும்  மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொண்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா (தலைவர்) நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு வீதியின் மையப்புள்ளி வரை மனித புதைகுழி விஸ்தரிக்கப்பட்டுள்ளது – சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றையதினம் (27.11.2023) ஏழாவது நாளாக இடம்பெற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே தெரிவித்தார்.

ஏழாவது நாளாக தொடர்ந்த கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு நேற்றையதினம் நிறைவடையும் போது மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினத்துடன் 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரத்தில் இடம்பெற்ற விஷேட ராடர் பரிசோதனையின் போது குறித்த மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டு செல்வது அவதானிக்கபட்டுள்ளது. இது சம்பந்தமான முடிவுகள் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கையின் போது தீர்மானிக்கப்படும்.

இன்று செவ்வாய்க்கிழமை (28) அகழ்வு பணியானது எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வு பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இம்மாதம் 20 ஆம் திகதி அன்று மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுபணிகள் திட்டமிட்டபடி நாளை இடம்பெறும்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.

அகழ்வுப்பணி தொடர்பாக இன்று தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அகழ்வு பணி நாளை 20 ஆம் திகதி காலை 8 மணியளவில் ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற இருப்பதாகவும் புதை குழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது எனவும், இம்முறை அகழ்வுபணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர் பார்த்துள்ளதாகவும். இதன் மூலம் எவ்வளவு தூரத்திற்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருப்பதாகவும் அவ் நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.

இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான தடைகளால் அவமானமாக உள்ளது – சரத் வீரசேகர

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னாள் ஜனாதிபதிகள் ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக விதித்துள்ள பயண தடைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அவமானகரமான நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோட்டாபாய ராஜபக்ச பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என   சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இவர்கள் எவருக்கும் எதிராக உள்நாட்டு, வெளிநாட்டு நீதிமன்றங்களில் யுத்த குற்றச்சாட்டுகள் எவையும் சுமத்தப்படவில்லை

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கான அரசியல் இராணுவ தலைமைத்துவத்தை வழங்கியவர்களை அவமானப்படுத்துவதற்காக மேற்குலகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரேரணைகைளை பயன்படுத்துகின்றது.

இலங்கையில்  தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ஜெனீவா சாசனம் மற்றும் யுத்தம் குறித்து மனித உரிமை பேரவை தெளிவுபடுத்த தவறிவிட்டனர்.

சில அதிகாரிகள் அமைதிப்படை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை, ஆதாரமற்ற யுத்தகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களின் நியமனங்கள் தாமதிக்கப்பட்டன அல்லது நிராகரிக்கப்பட்டன எனவும் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் நவம்பர் 20 மீள ஆரம்பம்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

மனித புதைகுழி தொடர்பான வழக்கு 30 ஆம் திகதி திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

திங்கட்கிழமை (30) அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் ராஜ் சோமதேவ சமுகமளிக்க முடியாததனால் கொக்குதொடுவாய் அகழ்வு பணியானது மீளவும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மிகுதியாக உள்ள செலவுத்தொகை பணம் எவ்வளவு என்பது தொடர்பாக கதைக்கப்பட்டு அதற்கான கணக்கறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ அவர்களினால் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தவிர்ந்த பிற பொருட்கள் பேராசிரியர் ராஜ் சோமதேவவுக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பதற்கு தேவை என்ற அடிப்படையில் முழுவதும் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டிருந்தது.

காணாமல் போனவர்கள் சார்பில் நாங்கள் தோன்றி அதன் கட்டுகாவல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம்.

ராஜ்சோமதேவ அவர்களினால் குறித்த மனித புதைகுழி பகுதியில் 50 மீற்றருக்குள் வேறு மனித எச்சங்கள் இருப்பது சம்மந்தமாக கண்டுபிடிக்க கூடிய ராடர் கருவி ஒன்றினை கொண்டு வருவதற்கான முயற்சிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

அது தொடர்பான முழுமையான விபரங்களை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும்படி நீதிமன்றத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் அதற்கான ஒன்றுகூடல் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இடத்தில் மேற்கொள்ளப்பட்டு அகழ்வுபணி இடம்பெறவுள்ளது.

30 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற வழக்கின் போது சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து கணக்காளர் அவர்களும் பிரசன்னமாகி இருந்ததாக மேலும் தெரிவித்தார்.

சரணடைந்தவர்களின் பெயர்ப் பட்டியலை ஒப்படைக்க கட்டளையிட வேண்டும்

2009 மே மாதம் 18 ஆம் திகதி சரணடைந்தவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு 58 ஆவது படைப்பிரிவுக்குக் கட்டளையிட வேண்டும் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது.

இராணுவத்தின் 58, 59 ஆம் மற்றும் 53 ஆம் படைப்பிரிவுகளின் கட்டளைத் தளபதிகள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் தாம் சிரத்தையுடன் செயற்படுவதை நிரூபிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது.

யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் இது குறித்து அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கமானது சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தை உரியவாறு கையாள்வதாகப் பாசாங்கு காட்டுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைகளை மேற்கொள்வதற்கென அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியையோ அல்லது ஆறுதலையோ பெற்றுத்தரவில்லை என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.