11 இளைஞர்கள் கடத்தல் : வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு!

கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் கப்பம் பெறும் நோக்கத்தில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கியமை  தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட, தன்னை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கையையும்  மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொண்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா (தலைவர்) நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு வீதியின் மையப்புள்ளி வரை மனித புதைகுழி விஸ்தரிக்கப்பட்டுள்ளது – சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்றையதினம் (27.11.2023) ஏழாவது நாளாக இடம்பெற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே தெரிவித்தார்.

ஏழாவது நாளாக தொடர்ந்த கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு நேற்றையதினம் நிறைவடையும் போது மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினத்துடன் 37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரத்தில் இடம்பெற்ற விஷேட ராடர் பரிசோதனையின் போது குறித்த மனித புதைகுழியானது கொக்குதொடுவாய் – முல்லைத்தீவு நெடுஞ்சாலையின் மையப்புள்ளி வரை விஸ்தரிக்கப்பட்டு செல்வது அவதானிக்கபட்டுள்ளது. இது சம்பந்தமான முடிவுகள் எதிர்வரும் காலங்களில் நீதிமன்ற நடவடிக்கையின் போது தீர்மானிக்கப்படும்.

இன்று செவ்வாய்க்கிழமை (28) அகழ்வு பணியானது எட்டாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது. இவ் அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அகழ்வு பணியானது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இம்மாதம் 20 ஆம் திகதி அன்று மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுபணிகள் திட்டமிட்டபடி நாளை இடம்பெறும்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.

அகழ்வுப்பணி தொடர்பாக இன்று தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அகழ்வு பணி நாளை 20 ஆம் திகதி காலை 8 மணியளவில் ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற இருப்பதாகவும் புதை குழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு நீட்டப்பட்டுள்ளது எனவும், இம்முறை அகழ்வுபணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர் பார்த்துள்ளதாகவும். இதன் மூலம் எவ்வளவு தூரத்திற்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் வரையிலான நிதி இருப்பதாகவும் அவ் நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.

இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான தடைகளால் அவமானமாக உள்ளது – சரத் வீரசேகர

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னாள் ஜனாதிபதிகள் ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக விதித்துள்ள பயண தடைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அவமானகரமான நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோட்டாபாய ராஜபக்ச பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என   சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இவர்கள் எவருக்கும் எதிராக உள்நாட்டு, வெளிநாட்டு நீதிமன்றங்களில் யுத்த குற்றச்சாட்டுகள் எவையும் சுமத்தப்படவில்லை

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கான அரசியல் இராணுவ தலைமைத்துவத்தை வழங்கியவர்களை அவமானப்படுத்துவதற்காக மேற்குலகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரேரணைகைளை பயன்படுத்துகின்றது.

இலங்கையில்  தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ஜெனீவா சாசனம் மற்றும் யுத்தம் குறித்து மனித உரிமை பேரவை தெளிவுபடுத்த தவறிவிட்டனர்.

சில அதிகாரிகள் அமைதிப்படை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை, ஆதாரமற்ற யுத்தகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களின் நியமனங்கள் தாமதிக்கப்பட்டன அல்லது நிராகரிக்கப்பட்டன எனவும் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் நவம்பர் 20 மீள ஆரம்பம்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.

மனித புதைகுழி தொடர்பான வழக்கு 30 ஆம் திகதி திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

திங்கட்கிழமை (30) அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் ராஜ் சோமதேவ சமுகமளிக்க முடியாததனால் கொக்குதொடுவாய் அகழ்வு பணியானது மீளவும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மிகுதியாக உள்ள செலவுத்தொகை பணம் எவ்வளவு என்பது தொடர்பாக கதைக்கப்பட்டு அதற்கான கணக்கறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ அவர்களினால் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தவிர்ந்த பிற பொருட்கள் பேராசிரியர் ராஜ் சோமதேவவுக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பதற்கு தேவை என்ற அடிப்படையில் முழுவதும் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டிருந்தது.

காணாமல் போனவர்கள் சார்பில் நாங்கள் தோன்றி அதன் கட்டுகாவல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம்.

ராஜ்சோமதேவ அவர்களினால் குறித்த மனித புதைகுழி பகுதியில் 50 மீற்றருக்குள் வேறு மனித எச்சங்கள் இருப்பது சம்மந்தமாக கண்டுபிடிக்க கூடிய ராடர் கருவி ஒன்றினை கொண்டு வருவதற்கான முயற்சிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.

அது தொடர்பான முழுமையான விபரங்களை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கும்படி நீதிமன்றத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் அதற்கான ஒன்றுகூடல் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இடத்தில் மேற்கொள்ளப்பட்டு அகழ்வுபணி இடம்பெறவுள்ளது.

30 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற வழக்கின் போது சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து கணக்காளர் அவர்களும் பிரசன்னமாகி இருந்ததாக மேலும் தெரிவித்தார்.

சரணடைந்தவர்களின் பெயர்ப் பட்டியலை ஒப்படைக்க கட்டளையிட வேண்டும்

2009 மே மாதம் 18 ஆம் திகதி சரணடைந்தவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு 58 ஆவது படைப்பிரிவுக்குக் கட்டளையிட வேண்டும் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது.

இராணுவத்தின் 58, 59 ஆம் மற்றும் 53 ஆம் படைப்பிரிவுகளின் கட்டளைத் தளபதிகள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் தாம் சிரத்தையுடன் செயற்படுவதை நிரூபிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது.

யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் இது குறித்து அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கமானது சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தை உரியவாறு கையாள்வதாகப் பாசாங்கு காட்டுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைகளை மேற்கொள்வதற்கென அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியையோ அல்லது ஆறுதலையோ பெற்றுத்தரவில்லை என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

Posted in Uncategorized

பிள்ளையானுக்கு வெள்ளை ஆடை அணிவித்தது இராணுவ புலனாய்வுப் பிரிவின் ‘திரிபோலி’ குழுவே

விடுதலைப் புலிகள் தொடர்பில் பிள்ளையான் என அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனே எமக்கு தகவல்களை வழங்குவார் எனவும் அதற்காகவே நாம் அவரைப் பயன்படுத்தியதாக இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தெரிவித்தார்

அதேவேளை இராணுவப் புலனாய்வுப்  பிரிவில் உள்ள குழுதான், கோவணத்துடன் இருந்த அவரை வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியது எனவும் சுட்டிக்காட்டினார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இராணுவப் புலனாய்வு பிரிவில் ஒரு சிறிய தனிக்குழுவொன்று உள்ளது. அந்தக் குழுதான் ‘திரிப்போலி’ என்ற கொலைக் கும்பல். 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரே அது உருவாக்கப்பட்டது. அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே அந்தக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவே பிள்ளையானுக்கு வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியது எனவும் தெரிவித்தார்.

காஸாவின் தற்போதைய நிலை இலங்கையின் இறுதிப் போரின் ஆரம்பத் தருணங்களை நினைவுபடுத்துகின்றது

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன என பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க் சோல்டர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு குறித்த என்ற நூலை எழுதிய மார்க்சோல்டர் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன.அக்காலப்பகுதியில் இலங்கையில் பொதுமக்கள் அரசாங்கம் அறிவித்த உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதன் பிரதான விளைவு என்னவென்றால் தொடர்ச்சியான வான்வெளி ஆட்டிலறி தரைதாக்குதலால் பொதுமக்கள் உயிரிழப்புகள் பல மடங்காக அதிகரித்தன.விடுதலைப்புலிகளை பொதுமக்கள் மத்தியில் காணப்பட்ட ஆயுதங்களை இலக்குவைத்து இலங்கை இராணுவத்தினர் இந்த தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

எதிர்வரும் நாட்களில் காசாவில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாது என நம்புகின்றேன் பிரார்த்திக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை ரணில் அரசாங்கத்தால் நிராகரிக்க முடியாது – சபா குகதாஸ்

சர்வதேச விசாரணை என்பது பாதிக்கப்பட்ட மக்களின் தொடர்ச்சியான கோரிக்கை அதனை ஜனாதிபதி ரணில் அரசாங்கம் நிராகரிக்க முடியாது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஜேர்மன் ஊடகம் ஒன்றுக்கான நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் ஆவேசப்பட்டு கொதிப்படைந்த நிலையில் பதில் வழங்கியதை காணமுடிந்தது

சர்வதேச விசாரணை நடாத்த முடியாது. ஐ.நா மனித உரிமைத் தீர்மானங்களை தான் நிராகரிப்பதாகவும் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தன்னை ஆட்சிக்கு கொண்டு வந்து அழகு பார்க்கும் தரப்பு மேற்குலகம் இல்லை என்று மக்களை ஏமாற்றும் வகையிலும் மிகவும் கடும் தொனியில் பதில் வழங்கினார் .

ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசில் பிரதமராக பதவி வகித்த போது ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைத் தீர்மானத்தை ஏற்று கால நீடிப்பு பெற்றத்தை மறந்து விட்டாரா? அல்லது ராஐபக்ச அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருப்பதால் நிராகரிப்தாக கூறுகிறாரா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

நாட்டை முன்னேற்றுவதாக வெளிநாடுகளிலும் உள் நாட்டிலும் வார்த்தை ஜாலங்களால் கதை அளக்கும் ஐனாதிபதி ரணில் விக்கரமசிங்க ராஐபக்சாக்கள் தமது ஆட்சியில் நடந்த முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு அஞ்சி தொடர்ந்து நிராகரித்த சர்வதேச விசாரணை மற்றும் ஐ.நா மனிதவுரிமைத் தீர்மானங்களை ரணில் விக்கிரமசிங்காவும் ஏற்றுக் கொள்கிறார் என்றால் ஐனாதிபதி நாட்டை முன்னேற்ற வில்லை ராஜபக்சக்களை காப்பாற்றுகிறார் என்ற உண்மை அம்பலமாகியுள்ளது.

இலங்கைத் தீவு எதிர்காலத்தில் பொருளாதார ரீதியான நிலையான வளர்ச்சியை அடைய வேண்டுமாயின் பூகோள நாடுகளின் அரசியல் சதுரங்க ஆட்டத்தை கட்டுப்படுத்துவதுடன் சுயாதீன சர்வதேச விசாரணை பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப நடாத்தப்பட்டு பரிகார நீதி வழங்கப்பட வேண்டும் இதனை மேற்கொள்ளாமல் ரணில் அல்ல எவர் ஜனாதிபதிக் கதிரைக்கு வந்தாலும் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாது.

சர்வதேச விசாரணை என்பது பாதிக்கப்பட்ட மக்களின் தொடர்ச்சியான கோரிக்கை அதனை ஜனாதிபதி ரணில் அரசாங்கம் நிராகரிக்க முடியாது காரணம் மக்கள் ஆணை இழந்த பாராளுமன்றத்தை வழிநடத்தும் மக்கள் ஆணை இல்லாத ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

பிள்ளையான் கட்சிக்கு மில்லியன் கணக்கில் பணம் வழங்கிய மைத்திரி மற்றும் கோட்டா

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும் பணம் வழங்கினார்கள் என சனல்4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதி தருணங்களில் மில்லியன் கணக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பணம் வழங்கப்பட்டது.

எனினும் அதனை பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் குறைத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் பிள்ளையானின் கட்சிக்கு வழங்கப்பட்ட பணம் குறைக்கப்பட்டது. பின்னர் கோட்டபய ராஜபக்ச ஜனாதிபதியானதும் அது மேலும் குறைக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் ஆறு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை வழங்கினார்கள் பின்னர் அதனை பெருமளவிற்கு குறைத்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் பெயர் விபரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கப்பட்டதாகவும் மட்டக்களப்பின் மூன்று வங்கிகள் ஊடாக பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சார்பில் தான் பணத்தை எடுத்து பிள்ளையானிடம் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் போலி பட்டியலும் வழங்கப்பட்டது. இந்த விபரங்கள் அடங்கிய ஆவணங்களை கொழும்பிலும் ஜெனீவாவிலும் உள்ள இராஜதந்திர அலுவலகங்களிற்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.