தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்ட வரவு செலவுத் திட்டம் – ஹர்ஷ டி சில்வா

2024 ஆம் ஆண்டு ஏப்ரல்- ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை ஜனாதிபதி தெளிவுப்படுத்தவில்லை. தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையவில்லை.

2024 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாக வெளிப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். அரச துறையை காட்டிலும் பல இலட்சம் பேர் தனியார் துறையில் சேவையாற்றுகிறார்கள். தனியார் துறை தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.இதனை பிரதான குறைப்பாடாக கருத வேண்டும்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தவில்லை.மறுபுறம் சமூக பாதுகாப்பு அறவீட்டுத்தொகைக்காக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச வருமானத்துக்கும் அரச செலவினத்துக்கும் இடையில் காணப்படும் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யும் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆகவே வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுவோம் என்றார்.

உள்நாட்டுக் கடனை இரத்து செய்யாமல் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியாது – ஹர்ஷ

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல், எவ்வாறு இந்த மறுசீரமைப்புச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பதே தமது நிலைப்பாடாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட அமர்வு ஒன்று, மத்திய வங்கியின் ஆளுநரினால் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேற்படி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்திய வங்கியின் ஆளுநர், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான தெளிவுப்படுத்தல் ஒன்றை வழங்கியிருந்தார்.

ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல், எவ்வாறு இந்த செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது.

அரசாங்கமும், உள்நாட்டுக் கடனை இரத்து செய்யப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

இதனால், வங்கிக் கட்டமைப்பிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? அல்லது சேமித்த பணத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் சமூகத்தில் நிலவி வருகிறது.

அத்தோடு, ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து நிலவி வருகிறது.

ஆனால், மத்திய வங்கியின் ஆளுநரோ இவை எதற்கும் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இதுதொடர்பாக நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருடகால ஆட்சியில் நாடு ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது – ஹர்ஷ

கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருடகால ஆட்சியில் நாடு ஒன்பது ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.

பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் இன்று பொறுப்பில் இருந்து விலகும் வகையில்  கருத்துரைக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின்  நிபந்தனைகளுக்கு அமைய  தேசிய கடன் மறுசீரமைக்கப்படவுள்ளதாக

குறிப்பிடப்படுவது அடிப்படையற்றதாகும். ஒட்டுமொத்த கடன்களையும் மறுசீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டது.

தேசிய கடன்களை மறுசீரமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மார்ச் மாதம்  06 ஆம் திகி சர்வதேச நாணய நிதியத்துக்கு நிதியமைச்சர் என்ற ரீதியில்  உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

2048 ஆம் ஆண்டு நாட்டை  அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.பொருளாதார விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

2022 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் தனிநபர் ஒருவரின் வருமானம் 3400 டொலராக குறைவடைந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இரண்டரை வருட ஆட்சி காலத்தில் நாடு 09 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.

2048 ஆம் ஆண்டு நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சி வீதம் 6.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும்.

ஆகவே பொருளாதார முன்னேற்றத்தை அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு குறிப்பிட முடியாது என்றார்.

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஹர்ஷ டி சில்வா

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் முன்மொழியப்பட்டிருந்தது.

பயங்கரவாத சட்டமூலத்தை வாபஸ் பெற்றாலே ஜீ,எஸ்.பி. வரி சலுகையை மீண்டும் பெறலாம் – ஹர்ஷ டி சில்வா

மக்களின் ஜனநாயக உரிமை மீறல், மனித உரிமை மீறப்படும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. சலுகை கிடைக்கப்போவதில்லை.

அதனால் ஜீ,எஸ்.பி. சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

ஐரோப்பிய ஒன்றியத்தால் நாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி, சலுகை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதனை மீண்டும் பெற்றுக்கொள்ள நாங்கள் விண்ணப்பிக்கவேண்டும்.

அதன் பிறகு எந்த நாடுகளுக்கு இதனை வழங்குவது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கும். தற்போது ஆசியாவில் இலங்கை. பாகிஸ்தான் உட்பட 4 நாடுகளுக்கே இந்த ஜீ.எஸ்.பி சலுகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

ஜீ.எஸ்.பி. சலுகையைப் பெற்றுக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்திடம் 27 இணக்கப்பாடுகள் இருக்கின்றன. அதனை அந்த நாடுகள் செயற்படுத்த வேண்டும்.

அந்த இணக்கப்பாடுகளில் பிரதான விடயமாக இருப்பது, மனித உரிமை, தொழிலாளர் உரிமை, நல்லாட்சி மற்றும் சூழலை பாதுகாப்பது தொடர்பானதாகும். அதில் பிரதானமாக இருப்பது தேர்தல் உரிமையாகும்.

தேர்தல் நடத்தாமல் இருப்பது மக்களின் வாக்குரிமையை மீறும் பாரிய விடயமாகக் கருதப்படுகிறது. அதனால் மக்களின் ஜனநாயக உரிமையை விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அடுத்த விடயம்தான் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம். அதனால் அரசாங்கம் எந்தத் தீர்மானத்தை மேற்கொண்டாலும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளாவிட்டால் ஒருபோதும் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. சலுகை மீண்டும் கிடைக்கப்போவதில்லை.

ஏனெனில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் இருக்கும் விடயங்கள் பல, மக்களுக்கு அரசமைப்பின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள் மீறப்படுகின்றன.

மக்களின் உள்ளத்தில் இருக்கும் விடயங்களை வீதிக்கிறங்கி அரசாங்கத்துக்குத் தெரிவிக்கும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. இவ்வாறானதொரு செயலை பயங்கரவாத செயல் எனத் தெரிவித்து, அவர்களுக்கு எதிராகத் தடுப்புக்காவல் உத்தரவு பிரப்பிப்பதை ஐரோப்பிய ஒன்றியம் அனுமதிப்பதில்லை.

அதனால் ஜீ,எஸ்.பி. சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் ஓமான் முதலீட்டாளர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டிருக்கிறார். அவர் இப்போது தனது தொழிற்சாலையை மூடிவிட்டு செல்லப்போகிறார் எனத் தெரியவருகிறது.

இவ்வாறு இருக்கையில் முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவார்களா? இந்த தொழிற்சாலை மூடப்பட்டால் 500 இறகும் மேற்பட்டவர்களுக்கு தொழில் இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. என்றாலும் ஓமான் முதலீட்டாளருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால் இந்த நாட்டின் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நம்பிக்கை இல்லை, மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பில் நம்பிக்கை இல்லை. கட்டளையாளர் போல் நாட்டை நிர்வகிக்க நடவடிக்கை எடுத்தால் ஜீ.எஸ்.பி. சலுகை எமக்கு கிடைக்கப்பாவேதில்லை.

2010 இலும் எமது ஜீ.எஸ்.பி. சலுகையை இல்லாமலாக்கிக்கொண்டது இந்த அரசாங்கமாகும். ஜீ.எஸ்.பி. சலுகை இல்லாமல் போனால் 630 மில்லியன் டொலர் நட்டம் ஏற்படும் என்றும் எமது வறுமை நிலை மேலும் அதிகரிக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. அதனால் அரசாங்கம் ஜீ.எஸ்.பி சலுகையை பாதுகாத்துக்கொண்டு செயற்பட வேண்டும். – என்றார்.

ஜே.வி.பி யின் ஆலோசனைப்படி செயற்படின் இலங்கை ஆரஜென்டீனாவின் நிலைக்கு தள்ளப்படும் – ஹர்ஷ

ஜே.வி.பி. கூறுவதை போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களை இடை நிறுத்தினால் ஆஜன்டினாவை போன்ற நிலையே இலங்கைக்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

அத்தோடு நட்பு நாடுகளான சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து கூட கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், இலங்கை கடன் நிலைபேற்றுத் தன்மையற்ற நாடாக கருதப்படும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்றாலும் அவர்கள் முன்வைக்கும் சகல நிபந்தனைகளையும் பின்பற்ற கூடாது என குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இம்மாதம் கிடைக்காது – ஹர்ஷ டி சில்வா

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்ய அரசாங்கத்திடம் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் கிடையாது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாதம் கிடைப்பது சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2022ஆம் ஆண்டு மறக்க முடியாத பல நினைவுகளை பதிவு செய்துள்ளது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் வரலாற்றில் முதல் முறையாக மக்களின் மாபெரும் எழுச்சி போராட்டத்தினால் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில் முழு உலகமும் அவதானம் செலுத்தியுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்களினால் இலங்கைக்கு எதிராக சர்வதேசம் ஒருசில கடுமையான தீர்மான்களை எடுத்தது.

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கு அரசாங்கம் இவ்வருடத்தில் எவ்வாறு தீர்வு காணும் என்பது நாட்டு மக்கள் மத்தியில் முக்கியமான கேள்வி உள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் அரசாங்கத்திடம் கிடையாது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளது. இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாத காலத்தில் பெற்றுக்கொள்வது சாத்தியமற்றது என்றார்.

சீன எக்சிம் வங்கியுடன் இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே முன்னேற்றம் – ஹர்ஷ டி சில்வா

நாட்டின் மொத்த வெளிநாட்டு கடன் தொகையில் 50 சதவீதம் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும். அவற்றில் பெருமளவான தொகையை சீன எக்சிம் வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ளது.

எனவே கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன எக்சிம் வங்கியுடன் இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே ,  அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் 4 மாதங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டினை எட்ட முடியாத நிலைமை ஏற்பட்டால் என்னவாகும்? மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கக் கூடிய இயலுமை எமக்கிருக்கின்றதா? என்ற கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் பதிலை எதிர்பார்ப்பதாகவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்த கலந்துரையாடல்களில் கலந்துகொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக ,சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ள விடயம் இன்று பேசுபொருளாகியுள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கு காணப்படுகின்ற பிரதான சவால் சீனாவாகும். சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கான தெளிவானதொரு வேலைத்திட்டம் தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை. எமது மொத்த வெளிநாட்டு கடனில் 50 சதவீதம் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.

அதிக அதிக தொகையை சீன எக்சிம் வங்கிக்கு செலுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாம் உண்மையில் கலந்துரையாட வேண்டிய ஒரேயொரு வங்கி சீன எக்சிம் வங்கி மாத்திரமேயாகும். எக்சிம் வங்கியுடன் ஏதேனுமொரு இணக்கப்பாட்டை எட்டினால் மாத்திரமே , எம்மால் அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

உலக நாடுகள் இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் வருமானம் குறைந்த நாடுகள் ஜீ.20 பொது கட்டமைப்பின் கீழ் எவ்வாறு கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்வது என்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன. எனினும் இலங்கை போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. எனவே இவ்வாறான நாடுகள் எவ்வாறு கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்ளப் போகின்றன என்பதற்கான புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

நாடு எந்த பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான பதில் இல்லை. வருடாந்தம் ரூபாவின் பெறுமதியை தக்க வைத்துக் கொள்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு , மத்திய வங்கியினால் வழிகாட்டல் வரைபடம் தயாரிக்கப்படும். எனினும் 2023 ஆம் ஆண்டுக்கான வரை படம் வழங்கப்படவில்லை. எனவே அடுத்த ஆண்டு நாம் பயணிக்கவுள்ளோம் என்பது கேள்விக்குரியாகும்.

எதிர்வரும் 4 மாதங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பணிப்பாளர் மட்ட இணக்கப்பாட்டினை எட்ட முடியாத நிலைமை ஏற்பட்டால் என்னவாகும்? மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கக் கூடிய இயலுமை எமக்கிருக்கின்றதா? இதற்கான பதிலையே அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கின்றோம். வழிகாட்டல் வரைபடமொன்று 2023 இல் எங்கு செல்கின்றோம் என்பது தெரியாமலேயே பயணிக்கவுள்ளோம்.

சர்வதேசம் எதிர்பார்க்கும் வேலைத்திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் , ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் முடியாமல் போயுள்ளது. இதற்கான ஒரேயொரு மாற்று வழி புதிய அரசாங்கமொன்றாகும். புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் வேலைத்திட்டத்தை சர்வதேசமும் நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்களால் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்க முடியாத அரசாங்கத்தால் , எவ்வாறு நாட்டை நிர்வகித்துச் செல்ல முடியும்?

மக்களுக்கு மேலும் மேலும் சுமையை சுமத்தாமல் , அவர்கள் விரும்பும் ஆட்சியை அமைப்பதற்கு வாய்ப்பினை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் காணப்படுகிறது. எனினும் மார்ச் மாதத்தின் பின்னர் பொதுத் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் அவருக்கு காணப்படுகிறது. அரசியலமைப்பின் படி அதற்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டு;க் கொள்கின்றோம் என்றார்.

இரு பிள்ளைகளுக்கு ரூ.40 ஆயிரம் தேவை – ஹர்ஷ டி சில்வா

முதலாம் தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்துக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அரசாங்கம் எங்களது எச்சரிக்கைகளைக் கேட்கவில்லை. கேட்டிருந்தால் நாடு இந்நிலைமைக்கு வந்திருக்காது எனவும் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்- 2020ஆம் ஆண்டு முதல் நாம் கூறியவற்றை இந்த அரசாங்கம் கேட்கவில்லை. அரசாங்கம் பயணிக்கும் பாதை சரியில்லை. இந்த முறையில் பயணித்தால் நாடு வீழும், பணவீக்கம் ஏற்படும், பொருள்களின் விலைகள் அதிகரிக்கும், வட்டி வீதங்கள் அதிகரிக்குமென எச்சரித்தோம். ஆனால், நாம் கூறிய எதனையும் கேட்கவில்லை. நாம் இவ்வாறு கூறும்போத சிரித்தார்கள். அரசாங்கம் திமிர் பிடித்திருந்ததால் சுயவிமர்சனத்தைக்கூட செய்யவில்லை. இறுதியில் நாம் எச்சரித்த அனைத்தும் நடந்தது.

நாட்டு மக்கள் ஒருவேளை உணவுக்குக் கூட சிரமப்படும் நிலைக்கு வந்துள்ளனர். இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பமொன்றுக்கு முதலாம் தவணைக்குப் பிள்ளைகளை அனுப்புவதற்கு 40 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. நாம் கூறியதை கேட்காத மொட்டுக் கட்சி அரசாங்கம், தமது கடந்தக் கால பயணம் தவறு புதியப் பாதையில் பயணிக்க வேண்டும். புதியப் பாதை சிரமமானதாக இருக்கும் என இப்போது கூறுகிறது. இவர்களால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது. லீகுவான் வந்தாலும் இந்நாட்டைக் கட்டி யெழுப்ப முடியாது. மக்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் மீண்டும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற மக்கள் ஒன்றிணைய வேண்டுமென கேட்கிறார்கள் – என்றார்.

பொருளாதாரச் சுமையை நாட்டு மக்கள் மீது மாத்திரம் சுமத்துவது முறையற்றது – ஹர்ஷ

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையில் அமைச்சரவை அமைச்சினை விரிவுபடுத்த முயற்சிப்பது எந்தளவிற்கு நியாயமானது.

வங்குரோத்து அடைந்துள்ள நாடுகளில் இந்தளவிற்கு அமைச்சுக்களும், இராஜாங்க அமைச்சுக்களும் கிடையாது. பொருளாதார சுமையை நாட்டு மக்கள் மீது மாத்திரம் சுமத்துவது முறையற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அரசாங்கத்திடமிருந்து நிவாரணத்தை எதிர்பார்த்துள்ளார்கள். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  மொத்த தேசிய உற்பத்தியில் 2.43 சதவீதம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மொத்த தேசிய உற்பத்தியில் 1.9 சதவீதம் மாத்திரம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வரும்போது நாட்டில் 30 இலட்சம் பேர் ஏழ்மை நிலையில் இருந்தார்கள்.

ஆனால் அவர் பதவி விலகும் போது நாட்டின் ஏழ்மை நிலை 90 இலட்சமாக அதிகரித்துள்ளது.நாட்டின் மொத்த சனத் தொகையில் 60.3 சதவீதமான குடும்பங்கள் அரசாங்கத்திடமிருந்து நிவாரணத்தை கோரியுள்ளார்கள்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக மற்றும் ஏழ்மை நிலை 2023 ஆம் ஆண்டு பன்மடங்காக அதிகரிக்க கூடும்.

சமூக கட்டமைப்பு மிக மோசமாக பாதிக்கப்படும் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.ஆகவே பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

சமுர்த்தி அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது.சமுர்த்தி பயனாளர்களில் 50 சதவீதமானோர் சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என்றும் சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு உண்மையான தகுதி உள்ள 50 சதவீதமானோருக்கு சமுர்த்தி கொடுப்பனவு கிடைக்கப் பெறுவதில்லை என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுப்படுபவர்களுக்கு சமுர்த்தி நிவாரண கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

இந்நிலைமை முதலில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.நலன்புரி திட்ட சபை ஊடாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வெளிப்படை தன்மையுடனான திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் அரசாங்கம் அமைச்சரவை அமைச்சினை விரிவுப்படுத்த அவதானம் செலுத்தியுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டு மக்கள் மாத்திரமல்ல,அரசியல்வாதிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையில் 38 இராஜாங்க அமைச்சர்களும்,20 அமைச்சரவை அமைச்சுக்கள் 20 உள்ள நிலையில் எந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ள நாடுகள்,வங்குரோத்து நிலை அடைந்துள்ள நாடுகளில் இந்தளவு பரந்துப்பட்ட அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் கிடையாது.

பொருளாதார நெருக்கடியை நாட்டு மக்கள் மீது சுமத்தி அமைச்சரவை விரிவுப்படுத்துவதால் பிரச்சினைகள் தீவிரமடையுமே தவிர குறைவடையாது.

தனிநபர் வருமான வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வருமான வரி விதித்தால் அவர்களால் எவ்வாறு வாழ முடியும்.

நாட்டில் இருந்து பெரும்பாலான மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.நாட்டை விட்டு வெளியேறுபவர்களை சட்டமியற்றி தடுக்க முடியாது.

தனிநபர் வருமான வரி அதிகரிப்பு ஊடாக 68 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.நாட்டில் 4 பிரதான நிலை கசினோ சூதாட்டங்கள் கடந்த 07 வருட காலமாக சுமார் 200 மில்லியன் ரூபா வரை வரி செலுத்தவில்லை.

இந்த வரிகளை முறையாக அறவிட்டால்,தனிநபர் வருமான வரியை அதிகரிக்க வேண்டிய தேவை கிடையாது,ஆகவே பொருளாதார பாதிப்பை நாட்டு மக்கள் மீது மாத்திரம் சுமத்த வேண்டாம் என்றார்.