பொருளாதார பயங்கரவாதிகளான ராஜபக்சக்களிடமிருந்து நாட்டை விடுவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் – சஜித்

நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்றார்கள். தேசப்பற்றின் பெயரால் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ் குடும்பம் மக்களை கொள்ளையடித்து தன்னிச்சையாக நடந்து கொண்டதே இதற்கு காரணம். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும்,ராஜபக்ஷ்ர்கள் மற்றுமொரு பொருளாதார பயங்கரவாதத்தை ஆரம்பித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நட்பு வட்டார செல்வந்தர்களை பாதுகாக்கும், கூட்டாளிகளுக்கு சலுகைகளை வழங்கும் ராஜபக்ஷ் பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை விடுவித்து மக்களை இந்த நெருக்கடியில் இருந்து மீட்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஹேவாஹெட்ட நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஜன பௌர(மக்கள் அரண்) மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாற்றுத் தரப்பினர் எனக் கூறிக்கொள்ளும் குழு திருடர்களைப் பிடிக்க அதிகாரத்தைக் கேட்கின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரம் இல்லாமலயே திருடர்களைப் பிடித்தது.

நாட்டிற்கு மாற்று அணி என்று கூறும் சில குழுக்கள் ஆவணப் கோப்புகளைக் காட்டி திருடர்களைப் பிடிப்பதாகச் சொன்னாலும், நீதித்துறையின் ஊடாக நாட்டை வங்குரோத்தடையச் செய்த திருடர்கள் யார் என்பதை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஐக்கிய மக்கள் சக்தி வெளிக்கொணர்ந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ராஜபக்ஷ் மொட்டு மாபியாவின் கைப்பாவையாகவே தற்போதைய ஜனாதிபதி செயலாற்றுகிறார்.

இந்நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களுக்கு எதிராக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து,விசாரணைகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி,குற்றம் சாட்டப்பட்டவர்களது குடியியல் உரிமைகளை இல்லாதொழிக்காதது ஏன் என ஜனாதிபதியிடம் வினவிய போது அவர் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார்.

ராஜபக்ஷ் மொட்டு மாபியா மூலம் தற்போதைய ஜனாதிபதியை நியமித்தமையே இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ராஜபக்ஷ் மொட்டு மாபியாவைச் சேர்ந்த 134 பேர் தமது கைகளை உயர்த்தி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்துள்ளமையினாலயே நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களை பாதுகாத்து வருகிறார்.

இது தொடர்பில் வினவிய போது மொட்டு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பல தடைகளை ஏற்படுத்தினார்கள்.இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று ஒரு கைப்பாவை ஜனாதிபதியே ஆட்சியில் இருக்கிறார்.இந்த கைப்பாவையின் அதிகாரங்கள் ராஜபக்ஷ்ர்களின் கைகளிலயே உள்ளன.

இந்த திருடர்களுடன் ஜனாதிபதிக்கு டீல் இருந்த போதிலும்,இவ்வாறான டீல் தன்னிடம் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடும் திருடர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.

நாட்டை வங்குரோத்தாக்கிய திருடர்களும், திருடர்களை பாதுகாக்கும் ஜனாதிபதியும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவர். இவர்களுக்கு உரிய பதில் சொல்ல வேண்டியது மக்களின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலத்தில் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் முழுமையாக ரத்துச் செய்யப்படும் – ஹர்ஷ டி சில்வா

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு 98 சதவீதமான மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். எமது ஆட்சியில் இந்த சட்டமூலம் முழுமையாக இரத்து செய்யப்படும். ஜனநாயகம் பாராளுமன்றத்துக்குள் உள்ளதா,வெளியில் உள்ளதா என்பது தெளிவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும், 225 உறுப்பினர்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்கிறோம். நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான அமைப்புகள் பல யோசனைகளை முன்வைத்துள்ள நிலையில் அவற்றை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பில் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 98 சதவீதமானோர் இந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆகவே ஜனநாயகம் பாராளுமன்றத்தில் உள்ளதா? அல்லது வெளியில் உள்ளதா என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இந்த சட்டமூலம் கண்காணிப்பதற்கு பதிலாக அடக்குமுறைகளை பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.ஆகவே எமது அரசாங்கத்தில் இந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு,அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சட்டமியற்றப்படும்.

இந்த சட்டமூலத்தில் சமூக வலைத்தளங்கள் குற்றவாளியாக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பதிவேற்றம் செய்பவர்கள் குற்றவாளியாக பார்க்கப்பட வேண்டும். சமூக வலைத்தளங்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதை பேஸ்புக், மெட்டா, கூகுள், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்த சட்டமூலத்தினால் கிராமிய மற்றும் நகர வணிக பொருளாதாரம் பாதிக்கப்படும். அத்துடன் அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரம் என்ற இலக்கு கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஜனாதிபதி 17 மாதங்களில் 18 வெளிநாட்டு பயணங்கள் – சஜித் குற்றச்சாட்டு

நாட்டில் நிலவும் நெருக்கடி இயற்கையாக உருவானதொன்றல்ல. திறமையற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட நெருக்கடி என்றும், இது பொருளாதார பயங்கரவாதம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த பொருளாதார பயங்கரவாதிகள், தங்கள் குண்டர் கும்பல்களுடன் கைகோர்த்து, நாட்டை வங்குரோத்தாக்கி விட்டு உலகம் சுற்றி வருகின்றனர். மக்கள் படும் துன்பங்களை உணர்வாறின்றி செயற்படும் ஆட்சிப் போக்குக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

மக்களை பலிகடாக்கி மக்கள் படும் துன்பங்களையும், வலிகளையும் கருத்தில் கொள்ளாமல், மக்கள் படும் இன்னல்களை எண்ணாமல் மக்களின் வரிப்பணத்தில் நாட்டின் தலைவர் சவாரி செய்து வருகிறார். நாட்டின் ஜனாதிபதியாக 17 மாதங்களில் 18 வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை போதாமையினால் மேலும் 200 மில்லியன் ஒதுக்கிக் கொண்டுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாரம்மல நகரில் நேற்று(21) இடம்பெற்ற ஜன பௌர நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டை சிங்கப்பூர் ஆக மாற்றுவேன் என்றும் தொங்கு பாலத்தால் சென்று நாட்டை கட்டியெழுப்புவேன் என ஜனாதிபதி அவர்கள் கூறினாலும், வரிசையில் நின்று இறந்தவர்கள், தரக்குறைவான மருத்துவத்தால் உயிர் இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு கூட இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும். இதன் மூலம் நாட்டின் வங்குரோத்து நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் நீதி நிலைநாட்டப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் முட்டாள்தனமான கொள்கைகளால் நாட்டை அழித்து வருகிறது. நட்பு வட்டார முதலாளித்துவத்தை பின்பற்றும் இந்த அரசாங்கம் மக்கள் சக்தியினால் விரட்டியடிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மனுத்தாக்கல்

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ரஞ்சித் மத்தும பண்டார, தேர்தல்கள் நடக்கவிருக்கும் இந்த காலப்பிரிவில், எதிர்க்கட்சியின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவாலே இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமாகும்.

யுத்தமொன்று இல்லாத தேர்தல் காலத்திலயே இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டு வந்துள்ளனர்.

பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம்,பயங்கரவாதி யார் என்பது குறித்தான வரைவிலக்கணம் எதுவும் இந்த சட்ட மூலத்தில் குறிப்பிடப்படவில்லை.

எந்த ஒரு நபரையும் கைது செய்யலாம்.அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்கும், இந்நாட்டில் ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவுமே தேர்தலை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் இதை மேற்கொள்கின்றனர்.

இதனாலையே இந்நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க இச்சட்ட மூலத்திற்கு எதிராக மனுவை தாக்கல் செய்துள்ளோம்.

ஜனநாயகத்தையும், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் அடக்குமுறைக்குட்படுத்தவே தேர்தல் வருடமொன்றில் இந்த நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தையும், இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தையும் அரசாங்கம் கொண்டு வருகின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைந்தால் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தினை இரத்துச் செய்யும்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அரசாங்கத்தின் முயற்சிகளை கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடிசில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கியமக்கள் சக்தி அரசாங்கம் உடனடியாக நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை இரத்துச்செய்யும் என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மெட்டா கூகுள் யூடியுப் போன்ற பொருளாதாரத்திற்கு அவசியமான பாரிய தளங்களுடனான உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து அர்ப்பணிப்புடன் உள்ள நாங்கள் சிறுவர் பாலியல் மற்றும் ஏனைய பாரிய இணைய குற்றங்களை தடுப்பதற்காக பாரிய தளங்களுடன் இணைந்து செயற்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்;கை சமூகத்தின் நலனிற்கு இது மிகவும் அவசியமானது அவசர நடவடிக்கைகளிற்கு பதில் பயனளிக்ககூடிய தீர்வுகளை முன்வைப்போம் எனவும் ஹர்சா டிசில்வா தெரிவித்துள்ளார்.

நயன வாசலதிலக நியமனம் தொடர்பான வர்த்தமானி வெளியீடு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக நயன வாசலதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி அண்மையில் பதவி விலகியிருந்தநிலையில், ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு நயன வாசலதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படும் நயன வாசலதிலக

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதன் பின்னர் வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார்.

அவர் 2020 பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 31,307 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்ததாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை மக்களின் சாபம் எமது பிள்ளைகளையும் பாதிக்கும். அதனால் மக்களின் சாபத்தில் இருந்து எனது பிள்ளைகளை பாதுகாக்கும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீங்கிக்கொள்ள தீர்மானித்தேன். சஜித் பிரேமதாச நாட்டின் அரசியல் அதிகாரத்தை அமைக்கும்போது மீண்டும் அரசியலில் ஈடுபட நடவடிக்கை எடுப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஜமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆரம்ப பாடசாலைக்கு செல்லும் 3 பிள்ளைகள் எனக்கு இருக்கின்றனர். அவர்களை பாடசாலைக்கு அழைத்துச்செல்வும் பாடசாலையில் இருந்து அழைத்து வரவும் நானே செல்கிறேன்.

அந்த விடயத்தில் நான் அடிமையாகி இருக்கிறேன். எனது பிள்ளைகள் என்றதாலே அதனை நான் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் சமூகத்தில் ஏற்படும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறேன்.

குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் தொடர்பாக சமூகத்தில் பாரிய விரக்தி ஏற்பட்டிருக்கிறது. 225பேரின் பிள்ளைகளும் மக்களின் சாபத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

அதனால் இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து அரசியலில் இருக்கின்றதா என்ற கேள்வி தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் சிந்தித்தே எனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளருக்கு கையளித்தேன்.

பாராளுமன்ற சட்டதிட்டங்கள் புத்தகத்தில் இருந்தாலும் அது நடைமுறையில் செயற்படுவதில்லை. பாராளுமன்றம் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை.

மக்களின் சாபம் எனது பிள்ளைகளையும் பாதிக்கும். அதனால் மக்களின் சாபத்தில் இருந்து எனது பிள்ளைகளை பாதுகாக்கவும் மக்கள் ஆணை இல்லாத பாராளுமன்றத்துக்கு எனது விடைகொடுப்பானது, மக்கள் ஆணையுள்ள புதிய பாராளுமன்றம் ஒன்றை அமைத்துக்கொள்ள ஓரளவு அழுத்தம் கொடுக்கும் என நான் நம்புகிறேன்.

அத்துடன் நான் அரசியலில் இருந்து விலகினாலும் தொடர்ந்தும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இருப்பேன். ஐக்கிய மக்கள் சக்தியை தவிர வேறு கட்சி எனக்கு இல்லை. கட்சியில் எனக்கு எந்த அநீதியும் ஏற்படவில்லை. நாட்டின் எதிர்கால சிறுவர்களுக்கு பொறுப்புக்கூற முடியுமான தலைவர் ஒருவர் இருக்கிறார்.

அவர் நாட்டின் அரசியல் அதிகாரத்தை அமைக்கும்போது, எனக்கு முடியுமானால் நான் மீண்டும் அரசியலில் ஈடுபட நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

வடிவேல் சுரேஷ் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், கட்சியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

2024 வரவு- செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த குற்றச்சாட்டின் அடிப்படையி​லேயே வடிவேல் சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் அமைப்பாளராக லெட்சுமணன் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து நியமனக் கடிதத்தை லெட்சுமணன் சஞ்சய் பெற்றுக்கொண்டார்.

“நான் பதவியை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் பசறையில் உள்ள இளைஞர்களுக்காக பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். விரைவில் அரசியலில் இளைஞர்கள் முக்கிய இடத்தைப் பெறுவார்கள்,” என்றார்.

Posted in Uncategorized

தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்ட வரவு செலவுத் திட்டம் – ஹர்ஷ டி சில்வா

2024 ஆம் ஆண்டு ஏப்ரல்- ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை ஜனாதிபதி தெளிவுப்படுத்தவில்லை. தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இதனை தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையவில்லை.

2024 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாக வெளிப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். அரச துறையை காட்டிலும் பல இலட்சம் பேர் தனியார் துறையில் சேவையாற்றுகிறார்கள். தனியார் துறை தொடர்பில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.இதனை பிரதான குறைப்பாடாக கருத வேண்டும்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தவில்லை.மறுபுறம் சமூக பாதுகாப்பு அறவீட்டுத்தொகைக்காக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச வருமானத்துக்கும் அரச செலவினத்துக்கும் இடையில் காணப்படும் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யும் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆகவே வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுவோம் என்றார்.

Posted in Uncategorized