அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தாமதம் – விஜயதாஸ கவலை

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

ஒவ்வோர் அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட நிலைப்பாட்டினால் பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது என நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் நியமனம் தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தியதன் பின்னர் நீதிச் சேவை ஆணைக்குழுவை தவிர ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய நியமனம் இடம்பெறும் வரை ஆணைக்குழுக்களின் தற்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதில் தலைவராகவும் உறுப்பினராகவும் பதவி வகிக்க முடியும்.

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனம் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளதை பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம் உறுப்பினர் நியமனத்தின் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு இவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். அரசியல் கட்சிகள் தனிப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி, தமது கட்சியின் பரிந்துரைகளை முன்வைக்காமல் இருக்கின்றன.

21ஆவது திருத்தம் முழுமையாக செயற்படுத்தப்பட வேண்டுமாயின், அரசியலமைப்பு பேரவை விரைவாக ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றார்.