மாகாண கல்வி அமைச்சு, திணைக்கத்தினால் போலியான விசாரணைகள் முன்னெடுப்பு – ஆசியர் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாடுகளை போலியான கோணத்தில் விசாரணை செய்து முடிக்க வட மாகாண கல்வி அமைச்சும் வட மாகாண கல்வி திணைக்களமும் முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோசடிக் கும்பல்களை வைத்துக்கொண்டு வட மாகாண கல்வியை முன்னேற்ற முடியாது. பெற்றோர், பிள்ளைகளின் கையொப்பத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாட்டுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரச பாடசாலைகளில் வசதிகள் சேவைக்கட்டணம் தவிர வேறெந்த நிதியோ அன்பளிப்போ பாடசாலையால் வசூலிக்க முடியாதென சுற்றுநிரூபம் இருக்கும்போது அதையும் மீறி நிதி வசூலிக்கப்படும்போது அதை ஆதாரபூர்வமாக நிரூபித்தபோதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

வட மாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வட மாகாண ஆளுநர் ஊடகங்கள் வாயிலாக கேட்டுக்கொண்டதற்கிணங்க 100 பக்க முறைப்பாடொன்றை வழங்கியிருந்தோம்.

அதற்கு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர். ஆனால், ஒரு வருடமாகியும் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதில் தாமத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் வட மாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் நிர்வாக ஆளுமையற்ற தன்மைகளை சுட்டிக்காட்டி, வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக நாம் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

அதன் பின்னராகவே விசாரணைகளை போலியான வகையில் முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.