அரச காணிகளை முகாமைத்துவம் செய்ய புதிய சட்டமும், திணைக்களமும் உருவாக்கப்படும் – ஜனாதிபதி

நாட்டிலுள்ள அரச காணிகள் எதற்காக ஏனையோருக்கு வழங்கப்படுகிறது என்பது எமக்கு தெரியாது. ஒவ்வொரு நிறுவனங்களும் அவற்றின் விருப்பத்திற்கு ஏற்ப காணிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இதனை நிறுத்தி புதிய சட்ட மூலமொன்றை அறிமுகப்படுத்தி அதன் ஊடாக உருவாக்கப்படும் திணைக்களத்தின் ஊடாக காணி வழங்கல் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

‘2048 இளைஞர் குழு’ என்ற குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2023 வரவு – செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

எதிர்வரும் 25 ஆண்டுகளுக்குள் இதனை விட சிறந்ததும், பலம்மிக்கதுமான பொருளாதாரத்தை உருவாக்குவதையே நான் எதிர்பார்க்கின்றேன்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்திலிருந்து இது ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த ஆகஸ்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2023 வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை திடீரென உருவான ஒன்றல்ல. கடந்த இரு வருடங்களுக்கு முன்னரே இவ்வாறானதொரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்பது தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு காரணியாகும்.

பாராளுமன்றத்தில் இது தொடர்பில் வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்ற போதிலும், பொருளாதாரம் இவ்வாறு முழுமையாக வீழ்ச்சியடையும் என்று எந்தவொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. மத்திய வங்கியினால் கூட இது தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கவில்லை.

நாட்டிலுள்ள ஒவ்வொரு நிறுவனங்களும் தத்தமது விருப்பத்திற்கு ஏற்ப காணிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் யாருக்கு காணிகள் வழங்கப்படுகின்றன என்பது எமக்கு தெரியாது. இதனால் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புக்களை முதலில் தடுக்க வேண்டும்.

அரச காணி திணைக்களத்தின் ஊடாகவே 1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணி வழங்கும் விவகாரங்கள் முகாமைத்துவம் செய்யப்பட்டன. அபிவிருத்திகளுக்காகவே காணிகள் வழங்கப்பட்டன. அதன் அடிப்படையிலேயே மகாவலி வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக காணி வழங்கப்பட்டது. எனினும் அன்று காணிகள் வழங்கப்பட்டதையப் போன்று இன்று வழங்கப்படுவதில்லை.

அரசாங்கத்திற்கு அதற்கு சொந்தமான காணியின் அளவினை துள்ளியமாகக் கூற முடியாத நிலைமையே தற்போது காணப்படுகிறது. அதே போன்று அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளில் எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதும் தெரியாது. எந்தவொரு அரச அதிகாரிக்கும் இதனைக் கூற முடியாது. பிரதேச செயலகங்களின் விருப்பத்திற்கு ஏற்ப காணிகளை வழங்க முடியாது.

தற்போது குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக்குழுவின் ஆலோசனைக்கு அமையவே காணிகள் பகிர்ந்தளிக்கப்படும். இதுவும் தற்காலிக நடவடிக்கையே ஆகும். எனவே நாம் இது தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். புதிய சட்டத்தின் ஊடாக இதற்கான திணைக்களமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.