ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

BOI ஆடைகள் பூங்கா குறித்தும், திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழிற்பூங்காவில் முதலீட்டாளர்களை தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்திர மாநில அரசிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் பக்தர்கள் அதிகளவில் உள்ள நிலையில் வயது மூப்பு காரணமாக திருப்பதிக்கு பயணம் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கோரிக்கைக்கு சாதகமான பதிலை முதலமைச்சர் அளித்தார். இந்த சந்திப்பில் ஆந்திர முதலமைச்சரால் திருப்பதி பெருமாள் சுவாமி சிலை செந்தில் தொண்டமானுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய துணை தூதர் டாக்டர். வெங்கடேஷ் மற்றும் இலங்கை நாட்டின் அலுவலர்கள் பங்கேற்றனர்.