இந்தியப் பெருங்கடலில் நுழைந்துள்ள சீனக் கப்பலை உன்னிப்பாகக் கவனிக்கும் இந்தியா

பங்களாதேஷை சுற்றியுள்ள கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் ஈடுபட்டு வரும் சீன ஆய்வுக் கப்பலான ஹை யாங் ஷி யூ 760ஐ இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வியோன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்குச் சொந்தமான இந்த நில அதிர்வு ஆய்வுக் கப்பல் டிசம்பர் 29ஆம் திக இரவு மலாக்கா வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைந்து, கடந்த ஜனவரி மாதம் முதல் பங்களாதேஷ் உடன் தொடர்புடைய பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் சீனக் கப்பல் இந்திய கடற்படையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்தித்தளம் ஒன்று கூறுகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் சீனக் கப்பலான “யுவான் வாங் 5” இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சென்றபோது புதுடெல்லியால் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

அன்றிலிருந்து இலங்கை, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை கடைபிடித்து வருகின்றது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்திய கடற்படை கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

சீனக் கப்பல்கள் இந்த பகுதியில் சட்டவிரோதமான, ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடியில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய செய்தித்தளம் கூறுகின்றது.

இந்தநிலையில் தற்போதைய நிலவரப்படி, இந்தியப் பெருங்கடலில் சீனப் பிரசன்னம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியக் கடற்படை அதன் கடல் பிரசன்னத்தையும் கண்காணிப்பையும் தீர்விரப்படுத்தியுள்ளது.