இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்தது தையிட்டியில் விகாரைக்கும் நடக்கும் – சிவசேனை அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்தது தையிட்டி விகாரைக்கும் நடக்கும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்ட விரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாழ்ப் பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மறவன்புலவு சச்சிதானந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு-கிழக்கிலுள்ள சைவப் பகுதிகளில் பிற மதத்தவர் அடாத்தாக கட்டுகின்ற மத தலங்கள் அனைத்தும் பாபர் மசூதிகளே என்றும் மைத்திரிபால சிறிசேனாவிடம் மறவன்புலவு சச்சிதானந்தன் எடுத்துரைத்தார்.

இலங்கையிலுள்ள இந்துக்களுக்கு இந்தியாவிலுள்ள 120 கோடி இந்துக்கள் ஆதரவாக உள்ளதாகவும் ஒவ்வொரு சிவலிங்கத்தின் மீது பிற மதத்தவர்கள் கை வைக்கும்போது காஷ்மீரில் இருந்து கதிர்காமம் வரைக் கும் உள்ள ஒவ்வொரு சைவர்களும் கண்ணீர் வடிப்பதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிட்டார்.

இலங்கையின் வடக்கு-கிழக்கில் பாபர் மசூதிகளை உருவாக்க வேண்டாம் என்றும் பௌத்த சமயத்துக்கு கொடுக்கும் முன்னுரிமையை விடவும் சைவ சமயத்துக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்றும் மறவன்புலவு சச்சிதானந்தன் மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மைத்திரிபால சிறிசேன, உண்மையில் சைவர் என்றும் உலகதிற்காக பௌத்தராக வாழ்வதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தன் கூறினார்.