இலங்கையின் தீவுகளில் சுற்றுலா முதலீட்டு வாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் தீர்மானம்

இலங்கையிலுள்ள முக்கிய தீவுகளில் சுற்றலாத்துறை மேம்பாட்டுக்கான தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் பல அழகிய தீவுகள் மீன் பிடி நடடிக்கைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில தீவுகளில் பருவ காலங்களில் மாத்திரமே மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே அவ்வாறான தீவுகள் ஊடாக வருமானத்தை பெறுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய அவற்றை விற்காமல் குத்தகைக்கு வழங்கல் போன்றவற்றுக்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இவற்றில் தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையைப் போன்று தீவுகள் அபிவிருத்தி அதிகாரசபையொன்றை நிறுவி இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் பாரியளவு செலவின்றி அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையிடம் இந்த பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஊடாக முதலீட்டு வாய்ப்புக்கள் வழங்கப்படக் கூடிய தீவுகள் தெரிவு செய்யப்படும் என்றார்.