முடிந்தால் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களியுங்கள் நாமலுக்கு சஜித் சவால்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிக்கும் நாமல் ராஜபக்ஷ முடிந்தால் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்து காட்டட்டும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டை அழித்து வங்குரோத்து நிலைக்கு அழைத்துசென்ற ராஜபக்ச குடும்பத்தினர், தமது பாதுகாப்புக்காக ஜனாதிபதி ஒருவரை நியமித்துக் கொண்டனர். அந்த ஜனாதிபதி மீது அந்த குடும்பத்தின் அரச குமாரர் (நாமல் ராஜபக்ச) கோபத்தில் உள்ளாராம். அமைச்சரவை மறுசீரமைப்பால்தான் அவர் கடுப்பில் உள்ளாராம். இவ்வாறு கோபப்படும் அரச குடும்பம், சுகாதார அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது கூட, நாடு குறித்து சிந்திக்காமல் தம்மைப் பற்றி சிந்தித்தே செயற்பட்டது.

எனவே, இவர்களின் நாடகத்தை இனியும் நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாரில்லை. இவர்கள் எவ்வாறு நாட்டை அதலபாதாளத்திற்கு இட்டுச் சென்றார்கள் என்பது முழு நாட்டிற்கும் தெரியும் , ஜனாதிபதியை விமர்சிப்பது போல் நடித்தாலும் பாதீட்டை ஆதரித்தே வாக்களிப்பார்கள். முடியுமானால் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துக் காட்டுமாறு சவால் விடுக்கின்றேன். ” – என்றார் சஜித்.