இலங்கை அரசு மீது சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும்

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டும் முயற்சியை இழுத்தடிக்கும் இலங்கை அரசு மீது சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தூதுக்குழுவினர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

குறித்த சந்திப்பின்போதே இரா.சம்பந்தன் ஐரோப்பிய நாடாளுமன்றத் தூதுக்குழுவினருக்கு இதனை வலியுறுத்தினார்.

அதேவேளை, வடக்கு – கிழக்கில் பௌத்த பிக்குகள், தமிழ் மக்களுக்கும், அவர்களின் பிரதிநிதிகளுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர்.

அவர்கள் இனவாதத்தைக் கக்கி மதவாதத்தைத் தூண்டி வருகின்றனர். தமிழர் தாயகத்தில் என்றுமில்லாதவாறு பௌத்த மயமாக்கல் தற்போது தீவிரமடைந்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரச தரப்பினரிடம் நாம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.”

“அரசியல் தீர்வை எட்டும் முயற்சி அரசால் இழுத்தடிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னமும் நீக்கப்படவில்லை. இந்த விடயங்களில் இலங்கை அரசு மீது சர்வதேச சமூகத்தின் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.