ஈழ, மலையக தமிழர்களின் பிளவுகளை கையாள அரசுக்கு இடமளிக்க மாட்டோம் – மனோ கணேசன்

ஈழத் தமிழ் கட்சிகளின் தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அல்லது வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை காட்டி எமது தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது. எமக்கிடையே பிளவுகள் இருக்கின்றன எனக் காட்டி, அரசு விளையாட நாம் இடம் கொடுக்கவும் கூடாது. அரசாங்கத்தை அந்த இராஜதந்திரத்துடன் அணுகும் நடைமுறையை கூட் டமைப்பு, கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் நடைபெறும் பேச்சுகள் தீர்மானிக்க வேண்டும். – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்மனோ கணேசன் எம். பி.

இனப் பிரச்னை தீர்வு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிகளுடன் பேச அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், இந்தப் பேச்சுக்கு முன்னதாக மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில், “ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தேசிய இனப்பிரச்னை தொடர்பில் அனைத்து கட்சிகளுடன் பேச விரும்புகிறேன் என கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விடுத்த அழைப்பை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்நிலை யில், ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் கலந்துரையாட விரும்புவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளார். இது பற்றி கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் எம். பி., சித்தார்த் தன் எம். பி. ஆகியோரும் என்னிடம் உரையாடி உள்ளனர். தமிழ் தேசிய கூட் டமைப்பு எம். பிகளின் இந்த நிலைப்பாட்டை நாம் வரவேற்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பு மற்றும் கருத்து இன்னமும் முழுமையாக தெளிவுபட எமக்கு கிடைக்கவில்லை. பாராளுமன்ற கருத்து பகிர்வுடன் அது நிற்கிறது. மாகாண சபை, பதின்மூன்று “பிளஸ்” என்று ஆரம்பித்து விட்டு, இடையில், மாவட்ட சபை என்றும் ஜனாதிபதி ரணில் கூறினார். பின்னர் மாகாண சபைக்கு மாற்றீடாக மாவட்ட சபையை ஜனாதிபதி கூறவில்லை என்று அவரின் அலுவலகம் விடுத்துள்ள விளக்கம் கூறுகிறது. முப்பது வருட கோர யுத்தம் காரணமாக கடும் மனித உரிமை மீறல்களை வட, கிழக்கு உடன்பிறப்புகள் சந்தித் துள்ளார்கள். வரலாற்றில் பண்டா – செல்வா, டட்லி – செல்வா, இலங்கை – இந்திய ஒப்பந்தங்களிலும், சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் வட, கிழக்கு தமிழ்த் தலைமைகளுடன் நடத்திய பேச்சுகளின் போதும், ஈழத்தமிழ் தேசிய இனத்தின் உள்ளக சுயநிர்ணய உரிமை வெவ்வேறு வார்த்தைகளின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆகவே, இந்த அடிப்படைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் நடத்தும் பேச்சுகளுக்கு நாம் எமது தார்மீக ஆதரவை எப்போதும் வழங்கி வந்துள்ளோம் – இனியும் வழங்குவோம். நாம் ஒருபோதும், பேரினவாதத்துக்கு துணை போய், ஈழத்தமிழ் உடன் பிறப்புகளின் தேசிய அபிலாசைகளுக்கு இடை யூறாக இருக்க மாட்டோம் என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நண்பர்கள் நன்கறிவார்கள். இதேவேளை வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே நிலவும் தென்னிலங்கை களநிலைமைகளுக்கு ஏற்ப எமது அரசியல் கோரிக்கைகள் மாறுபடுகின்றன. இதுபற்றிய தெளிவான புரிதல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இருக்கின்றது என்பதை நான் நன்கறிவேன். சிவில் சமூகத்துடனான தீவிர கலந்துரையாடலுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி தயாரித்துள்ள, “இந்திய வம்சாவளி மலையக தமிழரின் தேசிய அரசியல் அபிலாசைகள்” மற்றும் “நிலவரம்பற்ற சமூக சபை” ஆகிய கோரிக்கைகள் உள்ளடங்கிய ஆவணத்தை நாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கி, அதற்கான அவர்களது தார்மீக ஆதரவையும் கோர விரும்புகிறோம்.

சகோதர இனங்கள், பரஸ்பரம் ஒன்றுக்கொன்று தார்மீக ஆதரவை வழங்கும் அதேவேளை, தத்தம் கள நிலைமைகளுக்கு ஏற்ப மாறுபட்ட கோரிக்கைகளுடன் அரசுடன் உரையாடுவதே சரியானது. தென்னிலங்கையில் நாம் முன் வைக்கும் கோரிக்கைகளை காரணமாகக் கொண்டு, ஈழத்தமிழ் கட்சிகளின் தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அல்லது, வட, கிழக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை காட்டி எமது தேசிய கோரிக்கைகளை நிராகரிக்கவோ அர சாங்கத்துக்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது. எமக்கிடையே பிளவுகள் இருப்பதாகக் காட்டி, அரசு விளையாட நாம் இடம் கொடுக்கவும் கூடாது. அரசாங்கத்தை அந்த இராஜதந்திரத்துடன் அணுகும் நடைமுறையை கூட்டமைப்பு, கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் நடைபெறும் பேச்சுகள் தீர்மானிக்க வேண்டும் – என்றுள்ளது.