ஐ.எம்.எவ், பாரிஸ் கிளப் கலந்துரையாடல்களில் அவுஸ்திரேலியா இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்திரேலியா உறுதியளித்துள்ளது.

மேலும் கடல்சார் பாதுகாப்பு, போதைப்பொருள், மனித கடத்தலை தடுத்தல், மீன்பிடி மற்றும் கல்வித் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த அவுஸ்திரேலியாவுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கிடையில் நேற்று வியாழக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கைக்கு வழங்கிய உதவிக்கு அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன , தகவல் தொடர்பு வலையமைப்பை வலுப்படுத்த மீன்பிடி படகுகளுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை வழங்க உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மாணவர்களை மட்டுமின்றி, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்தும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இலங்கையில் இணைந்த வளாகங்களை நிறுவ முடியும் என்றும் பிரதமர் இதன் போது தெரிவித்துள்ளார்.

மீன்பிடி, விவசாயம், தகவல் தொழில்நுட்பம், மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவளம், இலத்திரனியல் மற்றும் சுற்றுலா போன்ற புதிய துறைகளிலும் முதலீட்டாளர்கள் வருகை தர வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள, குறிப்பாக சுமார் 75 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு வழங்கியமைக்காக பிரதமர் அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்தார்.

அத்தோடு சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உயர் ஸ்தானிகர் ஸ்டீபன்ஸ் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.