ஒரு மருத்துவ மாணவனுக்கு மருத்துவ கற்கைக்காக 60 லட்சம் செலவு செய்யும் அரசாங்கம்

நாட்டின் பெருமளவு நிதி செலவில் கற்கை நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு நாட்டுக்கு சேவை வழங்காது வெளிநாடுகளுக்கு செல்லும் டாக்டர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மருத்துவ கற்கை மற்றும் பயிற்சிகளுக்காக ஒரு மாணவனுக்கு அரசாங்கம் 60 லட்சம் ரூபாவுக்கு அதிகமான நிதியை செலவிடுவதாக சபையில் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்கள் வெளிநாடுகளுக்கு வழங்கும் சேவையானது அந்த நாடுகள் இலங்கைக்கு வழங்கும் நிதி உதவியை விட அதிகமானது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மருத்துவ துறையை முன்னேற்றுவதற்கு நாட்டில் மேலும் மூன்று மருத்துவ பீடங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் ஊவா வெல்லஸ்ஸ, குருநாகல் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் அதனை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவத்துறையில் பட்டப்பின் படிப்பு செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் மேலும் இரண்டு பல்கலைக்கழகங்களில் அதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன்,கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் அதன் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் பூனாவில் உள்ள இத்தகைய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சமனானதாக இலங்கையில் அதனை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு வெளிநாடுகள் உதவ வேண்டும்.

அதேவேளை மருத்துவத் துறையில் வைத்திய பயிற்சிகளை மேற்கொள்ளும் மாணவர் ஒருவருக்கு அரசாங்கம் 60 லட்சம் ரூபாய் வரை செலவிடுகிறது.

நாட்டுக்காக அவர்களது சேவையை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்தளவு தொகை செலவிடப்படுகிறது.

ஆனாலும் அனைத்து பயிற்சிகளையும் தாய்நாட்டில் பெற்றுக் கொண்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அவர்களது சேவைகளை வழங்குகின்றனர். இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் வகையில் பாராளுமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எமது நாட்டு வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் நாட்டின் பெரும் நிதி செலவில் பயிற்சிகளை பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் சேவைகளை மேற்கொள்ளும் நிலையில் அந்த சேவைகள் அந்த நாடுகள் இலங்கைக்கு வழங்கும் நன்கொடையை விட அதிகமாகும் என்றார்.