சில துறைகளுக்கான பொருட்களின் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை

நாட்டில் காணப்பட்ட கடும் டொலர் நெருக்கடி காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏற்றுமதி தொழிற்துறை, விவசாயத்துறை, மின்பிடித்துறை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை 670 பொருட்களுக்கான இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், இவற்றில் பெரும்பாலானவை எமது நாட்டில் தயாரிக்கப்படக்கூடியவை ஆகும்.

வெசாக் கூடுகள், பட்டங்கள் மற்றும் யோகட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இவற்றில் உள்ளடங்குகின்றன.

எனவே, அடுத்த வருடத்திலிருந்து இவ்வாறான பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்வதா அல்லது நாமே தயாரிப்பதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

கடந்த சில மாதங்களில் 1465 பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டது. நாட்டில் நிலவிய கடும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், அண்மையில் 795 பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்பட்டது. 470 பொருட்களுக்கான இறக்குமதி தடை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. அவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஏற்றுமதி தொழிற்துறை, விவசாயத்துறை, மின்பிடித்துறை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய பொருட்களுக்கான இறக்குமதி தடையை நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.