சீன உயர்ஸ்தானிகராலயத்தால் திருமலையில் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு

சீன – இலங்கை பெளத்த நட்புறவுச் சங்கம் மற்றும் சீன உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிங்களம், தமிழ் மற்றும் இஸ்லாம் ஆகிய இனங்களை சேர்ந்த 225 வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு நேற்று (2) உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு குச்சவெளி பிச்சமல் விகாரை வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது சீன உயர்ஸ்தானிகர் கிவ் சென்ஹொங், சீனா, இலங்கையின் நண்பன் என்ற அடிப்படையில் பல உதவிகளை செய்து வருவதாகவும், அதன் ஒரு கட்ட உதவியாக இந்த உணவுப்பொதிகளின் விநியோகம் அமைவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இலங்கை கடினமான நிலவரங்களை சந்தித்தபோது அதிலிருந்து மீட்சிபெற ஆரம்பத்திலிருந்து இன்று வரை சீனா ஒத்துழைப்பு வழங்கிவருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வணக்கத்துக்குரிய தேரர்கள், இலங்கைக்கான சீன உயர்ஸ்தானிகர், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், சீன உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்னாயக்க, மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என். ஜயவிக்ரம, குச்சவெளி பிரதேச செயலாளர் கே. குணநாதன், இலங்கை – சீன பெளத்த நட்புறவுச் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.