பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், அதனை வலுப்படுத்துவதற்கும் அவசியமான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாக பொதுநலவாய பாராளுமன்றங்களின் கூட்டிணைவின் பொதுச்செயலாளர் ஸ்டீபன் ட்விக்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் புதன்கிழமை (11) அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பொதுநலவாய பாராளுமன்றங்களின் கூட்டிணைவின் பொதுச்செயலாளர் ஸ்டீபன் ட்விக்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அண்மைக்காலத்தில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்கள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய ஸ்டீபன் ட்விக்ஸ், இலங்கைப் பாராளுமன்றத்தினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தாம் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் இலங்கையின் பாராளுமன்றத்திலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன ஸ்டீபன் ட்விக்ஸிடம் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.