ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, ஆணைக்குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

இது தொடர்பான செலவு மதீப்பீட்டு அறிக்கை இலங்கைவின் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் மதிப்பீட்டு அறிக்கைகளை திறைசேரி கோருமெனவும், இதற்கமைய ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி சபைத் தேர்தல்களுக்கான செலவு மதிப்பீட்டு அறிக்கைகளை ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.