சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இம்மாதம் கிடைக்காது – ஹர்ஷ டி சில்வா

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை முகாமைத்துவம் செய்ய அரசாங்கத்திடம் நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் கிடையாது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாதம் கிடைப்பது சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2022ஆம் ஆண்டு மறக்க முடியாத பல நினைவுகளை பதிவு செய்துள்ளது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் வரலாற்றில் முதல் முறையாக மக்களின் மாபெரும் எழுச்சி போராட்டத்தினால் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில் முழு உலகமும் அவதானம் செலுத்தியுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்களினால் இலங்கைக்கு எதிராக சர்வதேசம் ஒருசில கடுமையான தீர்மான்களை எடுத்தது.

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கு அரசாங்கம் இவ்வருடத்தில் எவ்வாறு தீர்வு காணும் என்பது நாட்டு மக்கள் மத்தியில் முக்கியமான கேள்வி உள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடைமுறைக்கு சாத்தியமான எந்த திட்டமும் அரசாங்கத்திடம் கிடையாது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளது. இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாத காலத்தில் பெற்றுக்கொள்வது சாத்தியமற்றது என்றார்.