தமிழருக்கு இழைத்த அநீதியை மறைக்கவே பொதுவான நினைவு தினம்- சபா. குகதாஸ் ஆதங்கம்

ரணில் விக்கிரமசிங்கவின் பொது நினைவேந்தல் தினம் தமிழர்கள் மீது திணிக்கப்படுமாயின் அச் செயற்பாடு மீண்டும் ஒரு தமிழின அழிப்பாகவே அமையும் என தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

1983 இல் இருந்து 2009 வரை போராலும் வன்முறையாலும் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவு கூறும் வகையில் பொது நினைவு கூறும் தினத்தை பிரகடனப்படுத்துமாறு அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார்.

ரணிலின் இந்த செயற்பாடு இது வரை தமிழர்களுக்கு சிங்கள ஆட்சியாளர்களினாலும் அரச படைகளினாலும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், அநியாயங்கள், படுகொலைகள், இனப்படுகொலைகள் போன்றவற்றுக்கான நீதி கிடைப்பதை தடுப்பதற்காகவும் குற்றம் இழைத்தவர்களை பாதுகாப்பதற்கும் அரசாங்கத்திற்கு ஏற்படும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்குமாக இந்த பொது நினைவு தினம் என்ற நாடகத்தை அரங்கேற்றவுள்ளார்.

14 ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் கனடா பிரதமரின் நினைவு கூறல் அறிக்கை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு மன ஆறுதலை கொடுத்த சம நேரம் சிங்கள ஆட்சியாளரின் போலி முகத்திரையை வெளிப்படுத்தியுள்ளது இதனால் தனித் தனியான நினைவேந்தல்களை நிறுத்த புதிய உத்தியை கையில் எடுத்துள்ளார் ஐனாதிபதி ரணில்.

தமிழர்களுக்கு பொது நினைவு தினம் ஏற்புடையது இல்லை காரணம் ஒவ்வொரு நினைவேந்தல் தினங்களும் தனித் தனியான வரலாற்றுப் பின்னணியை கொண்டவை அத்துடன் அவற்றுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை எனவே ரணிலில் விக்கிரமசிங்காவின் பொது நினைவேந்தல் தினம் தமிழர்கள் மீது திணிக்கப்படுமாயின் அச் செயற்பாடு மீண்டும் ஒரு தமிழின அழிப்பாகவே அமையும்.