தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி இறக்குமதி தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று காலை 9 மணியளவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். இதையடுத்து ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

முன்னதாக, தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் (1) குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமுகமளித்திருக்கவில்லை.

இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (2) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் நேற்றையதினம் (1) உத்தரவிட்ட நிலையில், அவர் இன்று காலை ஆஜராகினார்.

இவ்வாறு இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கெஹலிய ரம்புக்வெல்ல வாக்கு மூலம் அளித்திருந்த நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தும் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.