திருகோணமலை விமானப்படைத் தளத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய விமானப்படைத் தளபதி உறுதி

தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் திருகோணமலை விமானப்படைத் தளத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய விமானப்படைத் தளபதி Air Chief Marshal V.R.சௌத்ரி உறுதியளித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் வைத்து சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு இந்தியா தொடர்ச்சியாக வழங்கும் ஒத்துழைப்பிற்கு பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் இரு நாட்டு விமானப்படைகளுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை அடையாளப்படுத்தும் வகையில், நட்புறவு கேட்போர் கூடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய விமானப்படைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் இறுதி காலாண்டில், இரு நாடுகளின் விமானப் படைகளும் இணைந்து இலங்கை கடற்பகுதியில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான உத்தேச விமான சேவைகளை அதிகரிப்பதும் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கான படகு சேவைகளை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளமையும் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார சுற்றுலாவை மேம்படுத்தும் என இந்திய விமானப்படைத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்திய விமானப்படைத் தளபதி Air Chief Marshal V.R.சௌத்ரி, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவையும் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று காலை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.