தேர்தலுக்கு மதிப்பளித்து முக்கிய அபிவிருத்திகளை மக்கள் மயப்படுத்துவதை பின்தள்ளியுள்ளோம் – தவிசாளர் நிரோஷ்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் கடந்த காலப்பகுதியில் எம்மால் அடிக்கல்லிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட  பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றுக்கு தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு மதிப்பளித்து தற்போது திறப்பு விழாக்களை நடத்த முடியாதுள்ள போதும் அத்திட்டங்கள் பின்னரான திகதியில் மக்கள் மயப்படுத்தப்படும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும் வலி- கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புத்தூரில் 15 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட மீன்சந்தைக் கட்டுமாணம் தற்போது பூர்த்தி செய்யப்பட்டு திறந்துவைக்கப்படும் நிலையில் உள்ளது. இதற்கு மேலதிகமாக அங்கு 20 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டு மரக்கறிச்சந்தை மற்றும் இறைச்சிக்கடைத் தொகுதிக்கான ஆரம்ப கட்ட பணிகள் இடம்பெறுகின்றன.

அதுபோன்று  நீர்வேலியில் வலிகாமம் கிழக்கிற்கான பொது சிறுவர் பூங்காவிற்குரிய வேலைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. நீர்வேலி கந்தசாமி தேவஸ்தானத்தினால் வழங்கப்பட்ட நிலத்தில் கட்டுமாணப்பணிகள் 3.4 மில்லியன்களில் பணிகளை தற்போது பூர்த்தி செய்துள்ளோம். அப் பூங்காவிற்குரிய  விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவுக்கான நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மேலும், பிரதேச சபையின் கோப்பாய் உப அலுவலகத்திற்காக 7 மில்லியனில் சபை நிதியில் எம்மால் கொள்வனவு செய்யப்பட்ட காணி கட்டிடத்தில் 7 மில்லியன்களுக்கு மேலதிகமாக செலவிடப்பட்டு மேலதிக அலுவல வசதிப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

ஏற்கனவே அச்சுவேலி சந்தையில் மரக்கறிச்சந்தை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நிலையில் தற்போது 9 மில்லியன்கள் செலவில் அமைக்கப்பட்ட மீன்சந்தைக் கட்டுமானமும் வேலைகளும் பூர்த்தி நிலையினை அடைந்துள்ளன.

மேற்படி திட்டங்கள் யாவும் வலிகாமம் கிழக்குப் பிரதேச மக்களின் வரிப்பணம், சோலைவரி, தண்டப்பணம், சர்வதேச மானிய உதவிகள் என பல்வேறுபட்ட நிதி மூலங்களில்  மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளாகும்.  இவற்றை நாம் தேர்தல்களின் பின் கடந்த 13 ஆம் திகதி மக்கள் மயப்படுத்த சபையில் தீர்மானித்திருந்தோம்.

அதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளையும் பெற்றிருந்தோம். எனினும் தேர்தல்கள் கடந்த 9 ஆம் திகதி நடைபெறாது மீளவும் ஒத்திவைக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியமையினால் தேர்தல் ஒழுங்குகளுக்கு அமைய திட்டங்களை மக்கள் மயப்படுத்தவில்லை. எனவே பின்னரான திகதி ஒன்றில் மேற்படி திட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்படும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.