தேர்தலை மார்ச் 9 நடத்த முடியாது! உயர் நீதிமன்றுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது

பல காரணங்களால் திட்டமிட்ட வகையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வரும் மார்ச் 09ஆம் திகதி நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு நேற்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தது

நகர்த்தல் பத்திரம் ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. தவிர்க்க முடியாத பல தடைகள் காரணமாக மார்ச் 09ஆம் திகதி தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அந்தப் பத்திரத்தில் தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்தத் தேர்தலுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது கடினம் என திறைசேரியின் செயலாளர் ஏற்கனவே ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 41 கோடியே 6 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் வரை வாக்குச் சீட்டுகளை அச்சிட்டு வழங்க முடியாது என அரச அச்சகம் அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான பாதுகாப்பை அளிப்பதற்கும் பொலிஸ் மா அதிபர் தவறியுள்ளார். இதற்காக செலுத்த வேண்டிய கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தவிர, தேர்தலுக்கு தேவையான வாகன எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குமாறு பொறுப்பான அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப் பட்டபோதிலும், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. திறைசேரியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், அரச அச்சகம், பொலிஸ் மா அதிபர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் தேர்தலுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்றும் ஆதாரங்கள் – ஆவணங்களுடன் தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது