தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றொரு உறுப்பினருக்கு நேற்று இரவு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆணைக்குழு உறுப்பினர் எம்.எம்.மொஹமட் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் எஸ்.பி.திவரத்னவுக்கு நேற்று மீண்டும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆணைக்குழுவின் உறுப்பினர்களான கே.பி.பி. பத்திரன மற்றும் எஸ்.பி.திவரத்னவுக்கு ஆணைக்குழுவில் இருந்து ராஜினாமா செய்யாவிட்டால் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

அதன்படி, அந்த இரு உறுப்பினர்களின் வீடுகளுக்கும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு எம்.எம்.மொஹமட்டுக்கு மிரட்டல் அழைப்பு வந்ததாகக் கூறப்படும்போது எஸ்.பி. திவரத்னவுக்கு வாட்ஸ்அப்பில் மிரட்டல் குறுஞ்செய்தி வந்தது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.