நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயற்படத் தயார்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தடையின்றி விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு மதிப்பளித்து செயற்பட நிதி அமைச்சு தயாராகவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கித்துல்கல பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறினார்.

எந்த தரப்பினராக இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயற்படுவது அவசியம் எனவும் நிதியமைச்சு என்ற வகையிலும், அதனை மதித்து செயற்படுவதாகவும் அதில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும் அவர் கூறினார்.

அத்துடன், நீதிமன்ற தீர்ப்பிற்கமைய செலவுகளை முகாமைத்துவம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக  ஒதுக்கப்பட்ட நிதியை முடக்கி வைப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சர் சார்பில்  சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.