பசிலை வரவேற்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை – பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை தான் வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை என பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தான் அப்போது கட்டுநாயக்காவில் இருந்ததாகவும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியவே அங்குச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதன்போதே பசில் ராஜபக்ஷவை தான் கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்தவுடன் அவருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

குறிப்பாக நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் பசில் ராஜபக்ஷவை பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ, மற்றும் பல அரசியல்வாதிகள், அரச உயர் அதிகாரிகள் வரவேற்றனர் என எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.