பிரித்தானிய இளவரசி ஜனவரியில் இலங்கை வருகை

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரித்தானிய இளவரசி ஆன் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

பிரித்தானிய அரச குடும்பத்தின் அங்கத்தவரான அவர், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் ஒரேயொரு புதல்வியும், மூன்றாம் சார்ள்ஸ் அரசரின் சகோதரியும் ஆவார்.

அதன்படி இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் பிரதி அட்மிரல் டிம் லோரன்ஸ் ஆகியோர் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருப்பதுடன், அவர்கள் 13 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திரத்தொடர்புகள் ஆரம்பாகி 75 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படவிருக்கும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கை அரசாங்கம் இளவரசி ஆனுக்கு அழைப்புவிடுத்திருக்கும் நிலையிலேயே இவ்விஜயம் இடம்பெறவுள்ளது.