புலிபாய்ந்தகல் பகுதியில் அத்துமீறி சட்டவிரோத மீன்வாடிகள் அமைப்பு! நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்

கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியான புலிபாய்ந்தகல் கடற்கரையை அண்டிய பகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் சட்டவிரோதமாக மீன்வாடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அங்கு மீண்டும் புதிய வாடிகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து அவ்விடத்துக்கு சென்று நிலவரங்களை பார்வையிட்ட பின்னர் முன்னாள் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியான புலி பாய்ந்தகல் கடற்கரையை அண்டிய பகுதி, இதனோடு இணைந்த பல ஏக்கர் காணிகள் சிறு தானிய பயிர்ச்செய்கைக்காக தமிழ் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தன. தற்போது வன இலாகா கையகப்படுத்தியுள்ளது.

கடற்கரைப் பகுதியில் தமிழ் மீனவர்கள் பாரம்பரியமாக தொழில் செய்து வருகிறார்கள். அப் பகுதியில் இரண்டரை மாதத்திற்கு முன்னர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் வாடி அமைத்து அங்கே தொழில் மேற்கொள்கிறார்கள் என கொக்குதொடுவாய் மீனவர் அமைப்பும் அங்கு தொழில் செய்யும் தமிழ் மீனவர்களும் கிராம சேவையாளருக்கு முறைப்பாடு மேற்கொண்டதோடு எனக்கும் தெரியப்படுத்தினர்.

அவ்விடத்திற்கு சென்று பார்வையிட்டபோது கிராம சேவையாளர் அந்த வாடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகச் கூறிச் சென்றார். ஆனால் சட்டத்தை மீறி அனுமதியின்றி அமைக்கப்பட்ட வாடி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் இதுவரை அகற்றப்படவில்லை.

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தால் அதனை அகற்ற கோரி பதாகை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இருந்த வாடியை விட இன்னுமொரு வாடி முழுமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு வாடிகள் அங்கே பகுதியளவில் போடப்பட்டுள்ளன. இதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து பெரியதொரு குடியேற்ற திட்டத்தை முறியடிக்கும் விதமாக செயற்படவேண்டும். – என்றார்