பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை – பஸில் ராஜபக்‌ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.

அவர்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் என்றும், தற்போது சுயேச்சையாகச் செயற்படும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது ஏற்புடையதல்ல என்றும் அக்கட்சியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இருபுறமும் கால்களை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுனவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் பஸில் ராஜபக்ஷவிடம் விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.