பொது வேட்பாளர் விடயத்தை குழப்ப பலர் சதி – ரெலோ யாழ்.பொறுப்பாளர் சபா.குகதாஸ் குற்றச்சாட்டு

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பில் தாயக புலம்பெயர் தமிழர்களிடையே ஆதரவு பெருகி வரும் நிலையில் அதனை குழப்புவதற்கு பல தரப்பின் நிகழ்ச்சி நிரல்களில் தமிழ்த் தரப்பில் சிலர் சதி முயற்சியில் இறங்கியுள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளருமான சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரசுடன் இணைந்துள்ள தமிழ் முகவர்கள் வழமை போன்று அரசுக்கு சார்பாக பொது வேட்பாளர் விவகாரத்தை விமர்சிப்பதை தாண்டி தமிழ்த் தேசியக் கட்சிகளில் இருப்பவர்களும் வேறு சிலரும் மறைமுக அரசின் மற்றும் வெளிச் சக்திகளின் முகவர்களாக மாறி எதிரான கருத்துக்களை ஊடகப் பரப்பில் முன்வைத்து வருகின்றனர்.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்து பொது வேட்பாளர் விடயத்தில் ராஜபக்சக்கள் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் வெளியிட்டார். இவரைப் போன்று ஒரு சிலர் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களிடையே ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு முன்பாக உரியவர்களின் அனுமதி இன்றி வேட்பாளர்களின் பெயர்களை அறிவிப்பது போன்ற சதிகளில் குதித்துள்ளனர்.

தமிழர் தரப்பு எவ்வகையான தீர்மானங்களையும் எடுத்தாலும் அதனை தென்னிலங்கையில் சிங்கள பேரினவாதம் இனவாதமாக மற்றும் பிரிவினைவாதமாக பார்க்கும் என்பதற்காக ஒற்றுமையாக வெளிப்படுத்தும் ஐனநாயக முடிவை அதற்கான சந்தர்ப்பத்தை தவற விட முடியாது. விமர்சனங்கள், சதிகளை கடந்து அனைவரும் ஒன்றினைவது காலத்தின் கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.