பொலிஸார் கிராமசேவகரின் வேலைகளை பார்க்கக்கூடாது – மனோ கணேசன்

பொலிஸார் பொலிஸூற்குரிய வேலையை பார்க்க வேண்டும். அதனை விடுத்து கிராம சேகவர் வேலையை பார்க்க கூடாது.

தமிழ் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்படுகின்றன. வாழ்த்து தெரிவிப்பதற்காவா மதம், பிறந்த திகதி உள்ளிட்ட விடயங்கள் கோரப்படுகின்றன.

ஆகவே தமிழர்களை இலக்காகக் கொண்ட தகவல் திரட்டலை உடன் நிறுத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

கிருலபனை,வெள்ளவத்தை,கொட்டாஞ்சேனை, நாரஹேன்பிட்டிய, தெஹிவளை,பம்பலப்பிட்டி, மட்டக்குளி,முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களை இலக்காக கொண்டு தகவல் திரட்டும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் தகவல் கோருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

ஆனால் விண்ணப்பங்கள் சிங்கள மொழியில் மாத்திரம் விநியோகிக்கப்படுகின்றன. பொலிஸ் கட்டளைச்சட்டம் பற்றி பேசும் இலங்கை பொலிஸூக்கு நாட்டின் அரசியலமைப்பு சட்டம் தெரியவில்லை.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் நாட்டின் அரசகரும மொழிகளாக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் சிங்கள மொழியில் மாத்திரமே சகல விண்ணப்பங்களும் வழங்கப்படுகின்றன.

இது டரான் அலஸின் பொலிஸ் இராச்சியமா, விக்கிரமசிங்கவின் பொலிஸ் இராச்சியமா ? அல்லது தேசபந்துவின் பொலிஸ் இராச்சியமா? இந்த நாட்டில் யுத்தம் இல்லை,பயங்கரவாதம் இல்லை அவ்வாறான நிலையில் ஏன் ஏன் வீடு வீடாக செல்கின்றீர்கள். தகவல் திரட்டுகின்றீர்கள்.

தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வீடு வீடாக சென்று துண்டுபிரசுரங்களை வழங்குவதை போன்று பொலிஸார் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்களை வழங்குகிறார்கள்.பொலிஸார் பொலிஸூக்குரிய வேலையை பார்க்க வேண்டும். அதை விடுத்து கிராம சேகவரின் வேலையை பொலிஸ் செய்ய கூடாது.

விநியோகிக்கப்படும் விண்ணப்ப படிவத்தில் முழு பெயர்,தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மதம் உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

மதம் தொடர்பான விபரங்களை ஏன் கேட்கின்றீர்கள்.தீபாவளி,நத்தார் மற்றும் தைப்பொங்கள் ஆகிய பண்டிகைகளுக்கு வாழ்த்து அனுப்புவதற்காகவா ? அதேபோல் பிறந்த திகதி கேட்கப்படுகிறது.பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காகவா ?அத்துடன் தனிப்பட்ட விடயங்கள் கோரப்படுகின்றன.

பாதாள குழுக்கள் மற்றும் சமூக விரோத செயற்பாட்டாளர்களுடன் பொலிஸூக்கு தொடர்புண்டு.நான் ஒட்டுமொத்த பொலிஸாரையும் குறிப்பிடவில்லை.

ஒருசிலர் சிறந்த முறையில் சேவையாற்றுகிறார்கள்.99 சதவீதமான சிறந்தவர்கள் உள்ளார்கள்.தனிப்பட்ட தகவல்களை கோரும் போது பொதுமக்கள் அச்சமடைகிறார்கள்.

தொலைபேசி இலக்கத்தை வைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியும்.தமிழ் மக்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தகவல் கோரப்படுகின்றன.ஆகவே இதனை உடன் நிறுத்துங்கள் என்றார்.