மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்கும் அதிகாரம் வழங்கும் முன்மொழிவு பாரதூரமானது – சரத் வீரசேகர

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்கும் அதிகாரம் வழங்கும் முன்மொழிவு பாரதூரமானது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை பகிர்ந்தளித்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூளைச்சலவை செய்யும் பல்கலைக்கழகங்கள் தோற்றம் பெறும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஒருசில முன்மொழிவுகள் வரவேற்கத்தக்கவை.

கொழும்பு மாவட்டத்தில் தொடர் மாடிv குடியிறுப்புகளில் வசிப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கும் யோசனை வரவேற்கத்தக்கது.

விவசாயிகளுக்கு காணி உரிமை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தாலும் அதில் மாறுப்பட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.

பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு உரித்தாக்குவதில்லை.

ஏனெனில் காணி விவகாரம் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்புடையது.ஆகவே காணி உரிமையை முழுமையாக வழங்காமல் நிபந்தனை அடிப்படையில் தற்காலிக உரிமத்தை மாத்திரம் வழங்குவது பொறுத்தமானதாக அமையும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அனுமதி வழங்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிடுவது பாரதூரமானது. 13 ஆவது திருத்தத்தில் கல்வி கட்டமைப்பில் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளித்தால் கிழக்கு மாகாணத்தில் வாஹப் கொள்கையுடைய சரியா பல்கலைக்கழகம் கிழக்கு மாகாணத்திலும்,மூளைச்சலவை செய்யும் பல்கலைக்கழகம் வடக்கு மாகாணத்திலும் ஆரம்பிக்கப்படும்.

அரசியல்வாதிகள்,மாகாண ஆளுநர்கள் தமக்கு ஏற்றாட் போல் பல்கலைக்கழகங்களை உருவாக்க முயற்சிப்பாளர்கள். ஆகவே மாகாணங்களுக்கு பல்கலைக்கழக அனுமதி என்ற யோசனை முறையற்றது என்பதை வெளிப்படையாக குறிப்பிடுவோம் என்றார்.