முதுகெலும்பு இருந்தால் பதவிகளை துறந்து பொதுத்தேர்தலுக்கு இடமளியுங்கள் – கர்தினால்

அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்து புதிய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று தெரிவித்துள்ளார்.

“இன்று நாட்டை ஆள்பவர்கள் தேசம் கவலைகொள்ளும் ஒரு பரிதாபமான நிலையை உருவாக்கியுள்ளனர். எனவே அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் முதுகெலும்பு இருந்தால் பதவியை இராஜினாமா செய்து ஒரு புதிய நிர்வாகத்தை மக்கள் தெரிவு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்” என்று கர்தினால் ரஞ்சித் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும், நீதித்துறையின் அதிகாரத்தை இழிவுபடுத்துவதில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்தினால் கேட்டுக் கொண்டார்.

“உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. உயர் நீதிமன்றம் மார்ச் 3, 2023 அன்று வழங்கிய தீர்ப்பு ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்தை சமமாக கட்டுப்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. எனவே, அவர்கள் எடுத்த முடிவை உண்மையாக பின்பற்ற வேண்டும். இல்லையேல் அவர்கள் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து ஜனநாயகத்தின் அடிப்படையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவார்கள்” என்று கர்தினால் கூறினார்.

“உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியதாக செய்திகள் வெளியாகின. பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவை நீதிமன்றத்தால் தங்கள் பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாகக் கூறினர். இந்த விடயம் மிகுந்த அக்கறையுடன் பார்க்கப்பட வேண்டியதாகும். இரண்டு எம்.பி.க்களின் இந்தக் கோரிக்கை உயர் நீதிமன்றத்தின் கண்ணியம் மற்றும் சுதந்திரத்துக்குப் பொருந்தாதது மற்றும் நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீதித்துறை சுதந்திரம் பேணப்படுவதை உறுதி செய்ய இந்த எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்“ என்றார்.